அசை போடும் ..தேவகோட்டை ஞாபகங்கள்-பகுதி: 17


அசை  போடும் ..தேவகோட்டை ஞாபகங்கள்
கவிக்கிறுக்கன் முத்துமணி

பகுதி: 17

25-10-2017

ஆற்றங்கரை பற்றி மற்றும் ஒரு முக்கிய செய்தி.  தீபாவளி திருநாளில் 6 உற்சவ மூர்த்திகள் ஆற்றுக்கு கங்கா ஸ்னானம் செய்ய வருவார்கள்.  எப்படியும் ஆற்றில் சிறு ஓடையாவது ஓடிக்கொண்டு இருக்கும்.  வறட்சிக் காலங்களில் ஒரு ஊற்றாவது தோண்டி வைக்கப்பட்டு அந்த நீரில் தேவகோட்டையின் காவல் தெய்வங்கள் நீராடி செல்வார்கள்.
நேற்று ஆற்றங்கரையில் இருந்து தென்னை மட்டையுடன் அன்பன் தமிழ் கொண்டல் A.குமார் அவர்களுடன் சென்று கொண்டு இருந்தோம். இதன் இடையில் நேற்றைய பதிவில் ஒரு திருத்தம்.  ஆற்றில் குளித்த பட்டியலில் அருமை நண்பர் நா.புருஷோத்தமனை தவறுதலாக விட்டு விட்டேன்.  அன்பு நண்பன் SP.இராஜன் சுட்டிக்காட்டினார்.  ஆனாலும் என் வயதான மூளையின் மடிப்பில் இந்த ஞாபகம் ஒளிந்து விட்டு இருந்தது.  அன்பன் இராஜன்தான் புருசோத்தமனையும் காப்பாற்றினார்.  அவர் நீச்சல் வீரர்.  புருசோத்தமன் மற்றும் மனோகரன் இருவரையும் இராஜன் தான் காப்பாற்றி உயிர் கொடுத்தார்.   நினைவூட்டிய இராஜனுக்கு மனம் கனிந்த நன்றி.

சரி.  இப்போது நாம் இந்தியாவின் அவசர நிலைகாலத்தில் இருக்கிறோம்.   1975 ஆம் ஆண்டு முதல் 1977 ஆம்  ஆண்டு வரை 21 மாதங்கள் 'அவசர நிலை'  இந்தியாவில் அமலில் இருந்தது.    இதோடு 20 அம்சத்திட்டம் என்றும் மத்திய அரசால் கடைப்பிடிக்க பட்டது.  அவசர நிலையும்,  20 அம்சத்திட்டமும் இந்தியாவுக்கு உண்மையில் தேவையான திட்டம் தான்.  இதனை அமல் படுத்துவதற்காக அதிகாரிகளுக்கு அதிக பலம் கொடுக்கப் பட்டு இருந்தது.  காவல் துறை இராணுவம் போல பயன் படுத்தப்பட்டது. பெரும்புள்ளிகளும், கரும்புள்ளிகளும் சட்டத்தின் ஓட்டை வழியே ஒட்டகம் ஓட்டாமல் இருப்பதற்காக மறு பரிசீலனை (அப்பீல்) என்பதே கிடையாது என்ற நிலையில் வைத்து இருந்தார்கள்.  10 மணிக்கு சோம்பல் முறித்து மெதுவாக அலுவலகம் சென்றவர்கள் அரண்டு விட்டார்கள். இந்தக்கடுப்பு எல்லாம் சாமானியன் மேல் தான் பாய்ந்தது.  மொத்த வெறுப்புக்கும் ஆளானது இந்திராவின் அரசு.  கொஞ்சம் கெடுபிடி இருந்தால் தான் நமக்கு ஒத்து வராதே!



அப்போது பிப்ரவரி 1976 என்று நினைக்கிறேன்.  கல்லூரி தேர்வுகளுக்கு இன்னும் ஒரு மாதம் தான் இருக்கிறது.  அதனால் தான் அவ்வளவு உரத்த படிப்பு,,ஆற்றங்கரையில்.  அந்த காலத்தில் எங்களுக்கு ஒத்தக்கடையில் ஒரு பிஸ்கட் மற்றும் பெட்டிக்கடை இருந்தது.  என் மாமா மருது பாண்டியன் நடத்தி வந்தார். நகரகாவல் நிலையமும், அருகில் என்பதால் அனைத்து காவலர்களும் எம்மை அறிவார்கள். 

தென்னை மட்டையை இழுத்து வந்து கொண்டிருந்த குமாரை (தமிழ்கொண்டல் ) கேலி செய்து கொண்டே பின்னால் நடந்து வந்து கொண்டு இருக்கிறேன்.  தி.ஊரணி மேல் கரை, தண்ணீர் பந்தல் அருகில் வரும்போது எதிர்திசையில் மிதி வண்டியில் கையில் ஒரு சூட்கேஸ் பிடித்த படி நகர் காவல் நிலையத்தில் பணி  புரியும் காவலர் எழுத்தர்/ வயர்லெஸ் ஆபரேட்டர் (Writer / Wireless Operator ) திரு.சீனிவாசகன் (நன்றாக எம்மை அறிவார்)  வந்து கொண்டு இருந்தார். 

அந்த எமர்ஜென்சி காலத்தில்  சும்மா செல்பவனையும் அழைத்து இரண்டு தட்டு தட்டி விட்டுச்செல்லும் மமதை மனோ நிலையில் இருந்தார்கள்.  வந்தவர் சைக்கிளில் அமர்ந்தபடி காலை நிலத்தில் ஊன்றி கொண்டு குமாரைப் பார்த்து ஏன் மட்டையை தெருவில் இழுத்து வருகிறாய் என்று கேட்டார்.  ஏற்கனவே கேலி செய்து கொண்டு வந்த எனக்கு சிரிப்பு அடக்க முடியவில்லை.  16 வயதுப் பாலகன் நான்.  இடம், பொருள் தெரியவில்லை.  நான்  சிரித்த அதே நேரம் அந்த காவலர் சைக்கிளை உந்தி கிளம்ப ஆயத்தம் ஆகி இருக்கிறார்.  ஒரே கையில் சைக்கிளின் ஹாண்ட் பாரை யும் சூட்கேஸையும் பிடித்து இருந்ததானால் பிடி தளர்ந்து சூட்கேஸ் கீழே விழுந்து விட்டது.  நான் சிரித்த நேரமும் பெட்டி கீழே விழுந்த நேரமும் ஒரே நேரத்தில் நடந்ததால், அவர் நான் அவரைக் கேலி செய்து சிரிக்கிறேன் என்று தவறாக நினைத்து விட்டார்.

அன்று எனக்கு நேரம் சரி இல்லை போலும் .  அல்லது அவரை யாரும் உயர் அதிகாரிகள் கடித்து விட்டார்கள் போல ... கடுப்பை காட்ட வடிகாலாய் நான் மாட்டிக்கொண்டேன்.  வாங்கடா ஸ்டேஷனுக்கு  என்று அழைத்து கொண்டு வந்து விட்டார்.  ஸ்டேஷன் வேறு வெகு அருகில் இருந்ததா.. அவருக்கு ரொம்ப வசதியாகப் போயிற்று.  சுயகௌரவம் பாதிக்கப்பட்டதாக நினைத்து விட்டார். ஸ்டேஷன் உள்ளே கால் வைத்தது தான் தாமதம், டம டம என அடி மழையாக பொழிய ஆரம்பித்து விட்டது.  உள்ளே என்ன ஏதென்று எந்த காவலரும் கேட்கவில்லை.  அவரவர் பங்கினை முதுகிலும் கன்னத்திலும் வாரி வழங்கினார்கள்.  ஒவ்வொரு அடியும் இடி போல இறங்கியது.  போலீஸ் அடி என்றால் என்ன என்று அன்று தான் அறிந்தேன்.  

எனக்கு அப்போது அடி  வாங்கியது கூட பொறுத்துக் கொள்ள முடிந்தது.  என்னுடன் வந்த தமிழ் கொண்டல் காவல் நிலைய வாசலிலேயே பார்வையாளராகத் தங்கி விட்டார்.  அதை என்னால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.  என்ன  ஒரு பொது நோக்கு பாருங்கள்.

ஒருவழியாக அனைத்து  காவலர்களும் அவரவர் பங்கினை முறையாக என் முதுகிலே செலுத்திய பின் நிறுத்தி விட்டார்கள்.  இப்போது தான் அவர்கள் உணர்ந்தார்கள் நான் ஏதும் அறியாத ஞானத்தங்கம் என்று.  அதற்குள்  எப்படியோ விஷயம் என் சித்தப்பா பவளம் அவர்கள் காதுக்கு எட்டியது.  அப்போது அனைத்து  இந்திய அண்ணா தி.மு.  பொதுவுடைமை கட்சியாக ஏழைகளின் அன்பு நண்பனாக உருவெடுத்து ஆள்வோரின் தடைகளை கடந்து வளர்ந்து வந்த நேரம்.      அன்பு அண்ணன்  அங்குச்சாமி அவர்கள், மாமா ஜெயபாலன் அவர்கள், உடன் பிறவா அண்ணன்  நவாப் அவர்கள் எல்லாம் சித்தப்பா செட்.  அதன் பின் 1977ல் நடந்த பொதுத் தேர்தலில் தான் ..தி.மு.. ஆட்சியினை பிடித்தது.    அங்கு காவல் நிலையத்தில் ஒரு கூட்டம் கூடி விட்டது.  நிலைமையின் தீவிரத்தை அறிந்த காவல்நிலையம் என்னை உடனடியாக வெளியே அனுப்பி விட்டது.

வெளியே வந்தவுடன் என் சித்தப்பா பவளம் அவர்களுக்கு மனம் தாளவில்லை.  இப்படி அடி வாங்கி வந்து இருக்கிறேனே என்ற பொசெசிவ் மன  நிலையில், அவர் ஆத்திரம் தீர அவர் பங்குக்கு நையப்புடைத்தார். நம்ம குமார் இவ்வளவையும் பார்த்துகிட்டு அமைதியாக இருந்தார் பாருங்க.

எப்படி மறக்க முடியும்?  இந்த நினைவுகளை...

எப்படியாவது கந்தர் சஷ்டி நினைவுகளுடன் சிவன் கோவில் கரைக்கு சென்று விட வேண்டும் என்று நினைக்கிறேன்.  காலம் போதாமையால் இந்த ஆற்றை விட்டு வெளியே வர இயலாமையால் இது வரை நடக்கவில்லை.  இறைவன் அருளால் நாளையாவது அந்த பக்கம் போவோம். 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தென் கிழக்கில் .. தெக்கத்தியான் (தெற்கத்தியான்) 21. தெக்கணமும் அதிற் சிறந்த திராவிட நல் திருநாடு'

22.தென்னாடும் தென் கிழக்கும்....இந்தோனேசிய வரலாற்று ஆவணங்களில் இருந்து....தென் கிழக்கில் ..

அசை போடும் ..தேவகோட்டை ஞாபகங்கள்-பகுதி: 60