அசை போடும் ..தேவகோட்டை ஞாபகங்கள்-பகுதி: 28


அசை போடும் ..தேவகோட்டை ஞாபகங்கள்
கவிக்கிறுக்கன் முத்துமணி
பகுதி: 28
16-11-2017


சைவப்பிரகாச வித்யாசாலையில் பயில ஆரம்பித்த நேரம் ஓரளவு விபரம் தெரிய ஆரம்பித்த வயது.  அனைத்து பள்ளிகளிலும் வருகை பதிவு செய்ய மாணவர்கள் பெயரை சொல்லி அழைத்ததும், PRESENT SIR/ YES SIR   என ஆங்கிலத்திலோ அல்லது உள்ளேன் ஐயா என்று தமிழிலோ தானே மாணவர்கள் பதிலிருப்பார்கள்?  எங்கள் பள்ளியில் 'அன்பு வணக்கம்'  என்று கூற வேண்டும்.  இது உண்மையில் ஒரு வித்தியாசமாக இருந்தது, 'வணக்கம்'  வெறும் சொல்லாக அல்ல , அன்புடன் சொல்கிறேன் என்று நன்னெஞ்சுக்கு நாமே சொல்லிக்கொள்வது போல இருந்தது.

முன்பே குறிப்பிட்டேன்.  காலையில் வகுப்பு ஆரம்பிக்கும் முன் தேவாரம் இசைக்க வேண்டும் நாவார... தேசிகர் வருவார். இசையுடன் பாடுவார்.  கோரஸாக எல்லோரும் பின்னால் பாட வேண்டும்.

 உண்ணாமுலை யுமையாளொடும் உடனாகிய ஒருவன்
பெண்ணாகிய பெருமான் மலை திருமாமணி திகழ
மண்ணார்ந்தன அருவித்திரள் மழலைம்முழ வதிரும்
அண்ணாமலை தொழுவார்வினை வழுவாவண்ணம் அறுமே!

 என காலையிலேயே பக்தி மணம் கமழும்.  அப்புறம் பெரிய சார் பூமி உருண்டை (GLOBE ) யை எடுத்து 23.5டிகிரி பூமி சாய்வாய் இருக்கிறது,,, அப்படியே ஆரஞ்சு பழ டம்மியை எடுத்த்துக்காட்டி உருண்டையாய் இருக்கிற பூமி துருவங்களில் பந்து போல் இல்லாமல் ஆரஞ்சு போல தட்டையாக இருக்கிறது.  என விவரித்த நினைவு இருக்கிறது.  அப்புறம் நாங்கள் எல்லாம் சரஸ்வதி தியேட்டர் செல்லப்பிள்ளைகள்.  அடிக்கடி கூட்டமாக திரைப்படத்துக்கு அழைத்துச் செல்வார்கள் பள்ளியில் இருந்து..   1968ல் கண்ணன் என் காதலன் திரைப்படத்துக்கு பள்ளியில் இருந்து சினிமா தியேட்டர் வரை வரிசையாகச் சென்றது நினைவு இருக்கிறது.  எங்கள் பள்ளியில் ஒரு கையினால் சுற்றக்கூடிய பேசும்பட ப்ரொஜெக்டர் இருந்தது.  திரு.வீரப்ப செட்டியார் பள்ளிக்காக வழங்கியிருந்தார்.  பிலிம் ரோலும், சரஸ்வதி தியேட்டரில் இருந்து கொடுத்து இருந்தார்கள். பெரிய  சார் அந்த பட வீழ்த்தியில் பிலிமை தலை கீழாக மாட்டி, எப்படி லென்ஸ் பிம்பத்தை தலை கீழாக திரையில் வீழ்த்துகிறது என்று காண்பிப்பார்.  அப்புறம் Frames Per  Second....பிலிமின் ஓரத்தில் எப்படி ஒளி வடிவில் ஒலி பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.. எப்படி அதை projetor படித்து மீண்டும் ஒலி  வடிவில் தருகிறது.. ஒரு பிரேமுக்கும் அடுத்த பிரேமுக்கும் இடையில் ஷட்டர் எப்படி வந்து போகிறது,  எப்படி மனிதனின்  பார்வை அந்த வேகத்தில் ஷட்டர் வருவதை உணராமல் போகிறது என்று எல்லாம் 4ஆம்  வகுப்பு படித்த காலத்திலேயே செய் முறை விளக்கமாக நடத்தியது ஆணிதான் இந்த பச்சை மரத்தில்....

என் நினைவில் உள்ள நண்பர்கள்:

திரு.Y.சிதம்பரம்,  போட்டோகிராபர் ஏகப்பன் அவர்களின் புதல்வர்

அவர் வீட்டு வளவிலேயே வசித்த திரு.முருகப்பன்.  இவரது அண்ணன் பெயர் சந்திரன்.  இவர்கள் வீட்டுப் பரணில் மயில் காவடி இருக்கும்.  அவரது தகப்பனார் காவடி எடுத்து பழனி யாத்திரை செல்வார்.

திரு.முத்துசெழியன்.  பின்னர் இவர் என்னுடன் மருது பாண்டியர் போக்குவரத்துக் கழகத்தில் பணி புரிந்தார்.  இறைவன் இவரை சீக்கிரமாகவே அழைத்துக் கொண்டார்.
வீரப்பன் என்று ஒரு நண்பன்.  நாங்கள் இருவரும் குறவன், குறத்தி வேடம் போட்டு,

பச்சைப் பாசி,,,பவளப்பாசி
வாங்கலையோ ஆயாலோ...
சின்னப்புள்ளக்கி கோர்த்துப் போட்டா
நல்லாருக்கும் டீயாலோ'

என்று பாடி ஆடி ரகளை செய்து இருக்கிறோம்.
 திரு.சுவாமிநாதன், மைனர் வீடுதியில் வீடு, இவர்கள் காசுக்கடை வீதியில் எலக்ட்ரிகல் கடை வைத்து இருந்தார்கள் .  ஆரூரான் எலெக்ட்ரிக்கல்ஸ் என ஞாபகம்.  சரியாக அறிந்தவர்கள் சொல்லவும்.

அப்புறம் திரு.ராமகிருஷ்ணன் என்ற ராஜு.  இவர் என்னுடன் படிப்பதில் போட்டி. போட்டி இல்லையென்றால் முன்னுக்கு வரமுடியாது.. அது பயில்கின்ற இடமாக இருந்தாலும் சரி,  பணி செய்கின்ற இடமாக இருந்தாலும் சரி.  அந்த வகையில் சில புத்திசாலிகள் என்னை போட்டியாக நினைத்தார்கள் எப்போதும், இப்போதும்...அல்லது நான் அப்படி எண்ணியிருக்கலாம்...நன்றி அவர்களுக்கு .  இந்த ராமகிருஷ்ணன் பின்னர் தேவகோட்டையில் நிவாஸ் லாட்ஜில் மேனேஜர் ஆக பணியாற்றினார்.

சத்திரத்தார் வீதி கருதா ஊரணியில் சேரும் இடத்தில், அன்னபூரணி என்று ஒரு நகரத்தார் குடும்பப்பெண்,  அதே வீதியில் இருந்து பிலொமினா என்ற கிருஸ்துவர்,  அப்புறம் கல்யாண சுந்தரம் என்ற ஐயர் ஆத்துப்பையன்.  அவரை அதன் பிறகு எங்கள் கிராமத்தில் (மானாமதுரை சுற்று வட்டாரம்) இருந்து சித்திரைத் திருவிழாவிற்கு மானாமதுரை சென்று இருந்தபோது (மதுரையில் நடப்பது போலவே வைகை ஆறு பாயும் மானாமதுரையிலும் சித்திரைத் திருவிழா நடை பெறும்,  அங்கும் அழகர் ஆற்றில் இறங்குவார்) இந்த கல்யாண சுந்தரத்தை அங்கு சந்தித்தேன். 

பின் போட்டோ கிராபர் ஏகப்பன் வீட்டுக்கு அடுத்து வரும் சந்தில் தங்கராஜ் என்ற பையன்,, அடுத்து திருவேங்கடமுடையான் பள்ளியிலும் என்னுடன் தொடர்ந்தார்.  ஆனால் அடுத்து ஒழுங்காகப் படிக்கவில்லை. பின்னர் கை வண்டி இழுத்து உடல் உழைப்பில் வாழ்வது கண்டு மனம் கண்ணீர் வடித்தது.  கேடில் விழுச்செல்வம் என்று வள்ளுவர் எப்பொழுதோ சொல்லிச் சென்றார்.

இந்த அன்பு நண்பர்கள் பற்றி இதைப்படிக்கும் அன்பர்கள் தெரிந்து இருந்தால் விபரம் பதிவிடவும்.. ஆவலாக  இருக்கிறேன்.. ஒரு கருப்பையில் இருந்து  வந்த சோதர வாஞ்சையுடன்..

மதிய  உணவு வீட்டிலிருந்து தூக்குச்சட்டியில் கொண்டு வருவேன்.  ஆனால் இங்கு பள்ளியின் கடைசியில் உள்ள உணவுக்கூடத்தில் எல்லோரும் பள்ளியில் சமைக்கும் உணவை அருந்துவார்கள்.  இந்தY.சிதம்பரத்துக்கு, முருகப்பனுக்கும் வீடு ஒரு சுவர் தாண்டித்தான்... ஆனால் மதிய உணவு இடைவேளை விட்டதும் தங்கள் வீட்டிற்கு ஓடிச்சென்று அங்கிருந்து தொட்டுக்க காய்கறி ஒரு கிண்ணத்தில் எடுத்து வந்து எல்லோரும் ஒன்றாக பொது உணவை வாங்கி அருந்துவார்கள்.  நானும் அவ்வப்போது அங்கு என் சாப்பாடுடன் சேர்ந்து கொள்வேன்.  கோதுமை சாப்பாடு போடும்போது அந்தப்பக்கமே போறது இல்லை.  எல்லோரும் சாப்பிட ஆரம்பிக்கும் முன் ஒருமித்த குரலில்.

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாந் தலை

என்று கூறும்போது அனைவரும் ஒரே குடும்பமாய் வாழ்கின்ற எண்ணம் தான் மேலோங்கும். மாலை வேளைகளில் தோட்ட வேலை.  பள்ளி வளாகத்தின் உள்ளேயே இடது பக்கம் உள்ள தோட்டத்தில் இரண்டு பேருக்கு ஒரு பாத்தி என தோட்டம் ஒதுக்கப்பட்டது.  வெண்டை விதைத்தோம்.  பள்ளியின் எதிரில் உள்ள கருதா ஊரணியில் படிதொட்டு நீர் நிரம்பி இருக்கும்.  கெண்டை மீன்கள் தண்ணீரில் காலை வைத்தாலே தன் வீட்டுக்குள் அடியெடுத்து வைத்தவரின் அடி முகர்ந்து வரவேற்கும்.  வாளியைத்  தூக்கிக் கொண்டு போவோம் சூப்பர் ஜோடியாக குளத்தில் இருந்து தண்ணீர் கொண்டு வர……  பூமியின் இதழ் பிரிந்து பசுநாக்கை நீட்டி செடிக்குஞ்சுகள் வானத்தை நோக்கி வெளி வருவதைப் பார்ப்பது, பிரசவம் பார்த்து தாயருகில் சேய் பார்த்த சேடிப்பெண்களின் மன நிலைக்குத் தள்ளி விடும்.  இதில் செடியைப்பார்த்து யாரும் விரலை நீட்டிப் பேசி விடக்கூடாது செடிக்குக் கண் பட்டு விடுமாம்நறுங்கிப் போய் விடுமாம்அந்த வயது மூட நம்பிக்கை

செடி வளர்ந்து மஞ்சள் வண்ணத்தில் பூத்து, பிஞ்சாகி, காயாகும் போது,,, அப்படி ஒரு குதூகலம்.  காய்களைப் பறித்து மதிய உணவுக்கு கொடுத்து விடவேண்டும்,, பல்லுயிரும் பகுத்து உண்ண..ஒற்றுமையில் உல்லாசத்தை அனுபவிக்கக் கற்றுத்தந்த பள்ளி

தேவகோட்டை ஆற்றுப்பாலம் தாண்டி, தச்சவயல் என்று ஒரு கிராமம்.  இந்த ஊரில் இருந்து தியாகராஜன் என்பவர் என் சித்தப்பா பவளம் அவர்களுடன் நகரத்தார் உயர் நிலைப் பள்ளியில் படித்தார்.  சைக்கிளில் வருவார் எங்கள் வீட்டுக்கு,  இவருடன் தேவகோட்டை நகராட்சியில் பணிபுரியும் ஃபெரோஸ்கான் அவர்களின் மூத்த அண்ணன் அமானுல்லாவும் சேர்ந்து மூவரும் பள்ளி செல்வதை பார்த்து இருக்கிறேன்.  இந்த தச்சவயல் தியாகராசனின் உறவினர், நடராஜன் எனக்கு கீழ் வகுப்பில் படித்தார். (முந்தைய பகுதியில் குறிப்பிட்டு இருந்தேன் இவருடைய ஐயா இரட்டை அனா ருனா வீட்டில் வேலை பார்த்தார். அதன் அடிப்படையில் தான் ஆற்றங்கரை கடந்து அந்த நடராஜன்.. நடக்கும் ராஜனாய் அவ்வளவு தூரம் நட.ந்து வந்து இந்தப் பள்ளியில் படித்துக் கொண்டு இருந்தார்.  எனக்கு பள்ளியில் இருந்து மாலை திரும்புகையில் வீடு வரை உறவு இந்த நடராஜன் தான்.

கருதா ஊரணியில் ஆரம்பித்தால்,  எத்தனையோ கதைகள் பேசி, பேசுபவர்கள் வாய் பார்த்து,  வேடிக்கை பார்த்து படு ஜாலியா வீடு போய்ச்சேர்வோம்.  கருதா ஊரணிக்கரையில் மளிகைக் கடைகளுக்கு சரக்குகள் வேனில் வந்து இறங்கும், இதில் ஆரம்பிக்கும் எங்கள் வாடிக்கையான வேடிக்கை,,,அது ஒன்றுதானே அப்போது கேளிக்கை..  சந்தைப் பொருட்களின் படங்கள் அந்த டெலிவரி வேன்   களில் பெயிண்டில் வரையப்பட்டு இருக்கும்,  விளம்பர உத்தியாக,,அது கூட வேடிக்கைதான்..

2001 மாருதி பிராண்ட் சீயக்காய் தூள். ஒரு அம்மா தன் நீட்டிய கால்களில் குழந்தையை அமர வைத்து இந்த சீயக்காயை குழந்தையின் தலையில் தேய்த்துக் கொண்டு இருப்பார்.  இப்ப இந்தக் காலத்தாய்க்குலத்திடம் காட்டினால்  அது என்ன என்று கண்டிப்பாக முழிப்பார்கள்,, காலம் எவ்வளவு வேகமாக மாறிக் கொண்டு இருக்கிறது?

பாலமுருகன் ப்ராண்ட் நயம் சூட வில்லைகள் என்ற பெயரோடு பழனி ஆண்டவர் படம் வரைந்து ஒரு வண்டி வரும்.  சூடமெல்லாம் தனியா ஒரு வண்டியில் வந்து டெலிவரி கொடுத்த காலமுங்கோ.அது.. அந்த முருகன் என்ன கலரில் கோவணம் கட்டி இருக்காருனு நாங்க ரெண்டு பேரும் அந்த படத்தை ஆராய்ச்சி செய்து இருக்கிறோம்.

அப்புறம் V.S. செல்லம் சோப் அது ஒரு வண்டியில் வந்து இறங்கும்.   நீண்ட காதி கதர் நிற சோப் பார்கள்.  அந்த கம்பெனியில் இருந்தே நீல நிறத்தில் தீப்பெட்டி பண்ட் ரோல் போல ஒரு பேப்பர் சுற்றி ஒட்டிய சோப்பு ஒன்று     சலவை சோப் என்றால் மேல்மட்டம் உபயோகிப்பது சன்லைட்  501 பார் சோப்தான்  அதன் பிறகு தான் ரின், சர்ஃப் எல்லாம் அறிமுகம் ஆயின.

T.A.S.ரத்தினம் பட்டணம் பொடி.. ஒரு ஆள் பெரிய மீசையுடன், உரலில் ஒரு மர உலக்கை கொண்டு பொடித்துக் கொண்டு இருப்பார்.  டின்களில் வரும்.  டின்னை உடைத்து சிறிய வாய் கொண்ட செராமிக்  ஜார்களில் கொட்டி வைத்துக் கொள்வார்கள்.  பொடியை ஜாடிகளில் இருந்து எடுக்க உபயோகப்படுத்தப் படும்    அந்த நீண்ட சிறிய தலை கொண்ட இரும்புக் கரண்டியும்,  வாழை மட்டையை அழகாக மடித்து பொடி போட்டுக் கொடுப்பதை பார்ப்பது ஒரு வேடிக்கை.

அடுத்த பெரிய அட்ராக்சன்,  சினிமா போஸ்டர்கள்.   கருதா ஊரணியில் இந்த மேற்கண்ட கண்காட்சிகளை முடித்து கிளம்பினோமானால் அடுத்து சிவன் கோவில் மேற்கு மூலையில் முக்குக் கடை ஏரியா தான்.  முக்குக்கடைக்கு எதிரில் போஸ்டர் ஒட்டியிருப்பார்கள்.  முக்குகடை பக்கம் வரும் சுவற்றில் காரைக்குடி நடராஜாவின் போஸ்டர் இருக்கும்.  கடையின் எதிர்புறம் (எம்.எல்.எம் வீட்டின் எதிர் புறம் ) உள்ள சுவற்றில் காரைக்குடி சரஸ்வதி டாக்கீஸின் போஸ்டர். ( அப்போது ரெட்டை அருணா வீரப்ப செட்டியாருக்கு காரைக்குடியில் ஒரு சரஸ்வதி தியேட்டர், தேவகோட்டையில் ஒரு சரஸ்வதி தியேட்டர்,  பின்னர் இந்த காரைக்குடி தியேட்டர் பெயர் அருணாச்சலா  ஆயிற்று பின் அப்பச்சி காலத்துக்குப் பின் சத்யம்  ஆகிற்று).  இந்த போஸ்டர்களைப் பார்த்தே நாங்கள் கதை சொல்வோம் (கதை விடுவோம்).

இதோடு பெட்டிக்கடைகளில் சினிமா தியேட்டர்களில் இருந்து போஸ்டர் ஒட்டிய விளம்பரப் பலகைகள் கொடுத்து வைத்து இருப்பார்கள்.  அந்த கடைகாரர் கடை திறக்கும் போது கடை வாசலில் இந்த போர்டை சாய்த்து வைக்க வேண்டும். கடை அடைக்கும் போது போர்டை எடுத்து பத்திரப்படுத்தி வைக்க வேண்டும்.  இதற்கு சன்மானமாக கடைக்காரருக்கு ஒரு இலவச பாஸ் உண்டு,  இரண்டாவது வாரத்தில்..

இப்போ சைவப்பிரகாச வித்தியாசாலை யில் இருந்து மாணவர்களை இன்பச் சுற்றுலா அழைத்தார்கள்.   ஏற்கனவே புனித ஜான்ஸ் பள்ளியில் கடற்கரைச் சுற்றுலாவுக்கு செல்ல இயலாமல் மனம் வெதும்பியவன் இவன்.. இப்போ இந்தப் பள்ளியில்  குன்றக்குடிக்கு ஆழைக்கிறார்கள் அப்போது கடல்,,  இப்போது  மலைஅதுவும் முருகன் வாழும் மலை போக முடியுமா?  போனேனா?

அடுத்த பகுதியில் பார்ப்போமே..

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தென் கிழக்கில் .. தெக்கத்தியான் (தெற்கத்தியான்) 21. தெக்கணமும் அதிற் சிறந்த திராவிட நல் திருநாடு'

22.தென்னாடும் தென் கிழக்கும்....இந்தோனேசிய வரலாற்று ஆவணங்களில் இருந்து....தென் கிழக்கில் ..

அசை போடும் ..தேவகோட்டை ஞாபகங்கள்-பகுதி: 60