அசை போடும் ..தேவகோட்டை ஞாபகங்கள்-பகுதி: 16


அசை  போடும் ..தேவகோட்டை ஞாபகங்கள்
கவிக்கிறுக்கன் முத்துமணி

பகுதி: 16

24-10-2017

ஊரோடு         ஈரங்காத்து      உலராமல்              உவப்போடு
நீரோடும்       நெடும்பாதை  நீள்வெளி                நாம்நடந்தோம்
வேரோடும்   அடம்புடன்        வெள்ளிமணல்     கொண்டு   
சீரோடும்       விருசுழி             சிறப்பினை           காண்போமினி 

நீர் நடந்த பாதையெல்லாம் நாம் நடந்து சென்றோம்.  இப்போது தேவகோட்டையின்   விருசுழி ஆற்றுக்குள் செல்வோம்.   பரந்த வெண்ணிற பெரும் மணலாடை பூண்டு என்றும் தென்றல் தவழ்ந்த தேவி நகரின் அருட்கன்னி இந்த மணிமுத்தாறு என்றும் அழைக்கப்படும் விருசுழி ஆறு.  எனக்கு இவளுடன் அதிகம் நெருக்கம்.  என் கனவுகளை எல்லாம் தனிமையில் இவளுடன் பகிர்நது இருக்கிறேன்.  நண்பர் கூட்டத்துடன் இவள் கை  கோர்க்க கொட்டம் அடித்து இருக்கிறேன்.  படிக்கும் பள்ளியாக இருந்து இருக்கிறாள்.  விளையாட்டு மைதானமாக இருந்து இருக்கிறாள் .


எனக்கு முதல் முதல் ஞாபகம் இருப்பது, தைபொங்கலுக்கு அடுப்பு வைக்க கீழே பரப்ப என் தாய் மணல் எடுத்து வரச்சொன்னதும் கடகாப்பெட்டியை எடுத்துக்கொண்டு ஆற்றில் இறங்கியது தான்.  அதன் பின் பள்ளிப்பருவத்தில் காலை நேரங்ககளில் பாடங்களை உருப்போடுவதற்கு அமைதியான இடமாக இந்த அற்று வெளி அமைந்து இருந்தது.  இந்தப் பழக்கம் கல்லூரிப்படிப்பில் தொடர்ந்து ICWA தேர்வுகளுக்குப் படிக்கும்வரை தொடர்ந்தது.  'உரு' வுக்கு மிஞ்சின 'குரு' இல்லை பாருங்கள்.  பெரும்பாலும் இங்கு ஒரு குழுவாகவே  செல்வோம். மாலை  வேளைகள்  என்றால் படிப்புக்குப் பின் விளையாட்டு.  குட்டிக்கரணங்கள் அடிக்க பயின்றதில் இருந்து 'குட்டி' கதை பேசுவது வரை  எம் அனைத்து ரகசியங்களையும் அறிந்த அன்பு படுகை  இந்த ஆற்றுப்படுகை.  எங்களது அந்த நாள் கடற்கரை.

அருமையான 14 கண்கள் பாலம்.  வெள்ளயர்கள் எழுப்பியது.  உறுதியான, நீண்ட பாலம்.  ஊரிலிருந்து அங்கு சென்றால் வலது மற்றும் இடது புறங்களில் சருக்கலாய் முண்டு கற்கள் கொண்டு கரைகளை காபந்து செய்யும் அடைப்புகள். அப்படியே சர சரவென இறங்கி செல்லும் பொது மனம் துள்ளும். 

நமக்கு வலது புறம் (கோட்டை அம்மன்கோவில் தாண்டி) அருமையான தென்னந்தோப்பு. செட்டியார் தோப்பு.  செபஸ்த்தியான் என்பவர் தோப்பை கவனித்து வந்தார். யாரும் அவரை செபஸ்த்தியான் என்று அழைப்பதில்லை. அப்படி  சொன்னால் யாருக்கும் தெரியாது.  'செவத்தியான்' என்று சொன்னால் தான் எனக்கே அப்போது தெரியும்.  பொங்கல் நேரங்ககளில் வீடுகளுக்கு வெள்ளை அடிக்க அவரிடம் சென்று தென்னை பாளை மட்டைகளை  வாங்கி வந்து இருக்கிறேன்.  அந்த மட்டையின் ஒரு ஒரத்தை தண்ணீரில் ஊற வைத்து சுத்தியலில் அடித்தால் அதுதான் சுண்ணாம்பு அடிக்க அருமையான brush. 

இடது புறம் கொஞ்சம் முன்பாகவே இரண்டு சிறிய கணேசர் கோவில்கள். நண்பர் சொர்ண நாதன் (MGR படிப்பகம் பின்புறம், சொர்ண நாதன் தெரு) அவர்கள் குடும்பத்தால் நிர்மாணிக்கப்பட்டது.   எந்த நேரமும் தண்ணீர் ஓடும் ஜீவநதியாக இல்லாத போதிலும்,  ஒரு சிற்றாடை கட்டிய பெண்ணாக சிற்றோடையாகவாவது ஓடிக்கொண்டு இருப்பாள்.  அதுவும் இல்லாத நாட்களில் உற்று தோண்டினால் தேன் நீராக வெளிப்படுவாள் விருசுழி.

ஓடை ஓரங்ககளில்  துணி வெளுப்போர் துவைத்த ஆடைகள் வண்ண ஜாலம் காட்டி காய்ந்து கொண்டு இருக்கும்.  மணல் ஈரப்பதம் குறையாமல் இருக்கும். ஆற்றில் பச்சைகொடிகள் படர்ந்து சிவப்பாய் அழகாய் பூத்து  இருக்கும்.  அடும்பு கொடி , அழகு ... அந்த மணல் வெளியில் ..ஏனெனில் ஈரம் இழக்காத மணல் . மாலை  வேளைகளில் சிறு பிள்ளைகளாய் கோபுரம் போலவும், அறைகள் வைத்து, சுற்றுச்சுவர்கள் வைத்து, கார் பார்க் வைத்து, வீட்டில் உள்ளோர்க்கு எல்லாம் அறைகள் கட்டி,  நான் ,  வேலு மாமு (நாகை), செல்வம் மாமு (பாண்டியன் கிராம வங்கி ),  தமிழ் கொண்டல் .குமார் அனைவரும் வாலிப வயதிலும் சிறு குழந்தைகளாய் மாறி வீடு கட்டி விளையாண்டு இருக்கிறோம்.

கொஞ்சம் மேடான அக்கரையில் பள்ளம் தோண்டி விருசுழியாளின் மணி வயிற்றில் இருந்து சுண்ணாம்பு படிவ பாறைகள் வெட்டி எடுப்பார்கள்.  இது சருகணி ரோடு திரும்பும் இடத்தில உள்ள சுண்ணாம்புக் காலவாயில் நீர்க்கப்பட்டு சுட்ட சுண்ணாம்பாக விற்பனைக்கு வரும்.  அக்கறையின் இடது பக்கத்தில் தான் அந்நாளைய அறுவை கொட்டகை என்று அழைக்கப்படும் POST MORTEM கட்டிடம்.  முன்பே இதைப்பற்றி பார்த்து விட்டோம்.

இந்த ஆற்றில் யக்னேஸ்வர அய்யர் பையன் நரசிம்மனுக்கு குளிக்க தோழன்,  நீர் ஓடையாக அமைதியாக ஓடிக்கொண்டு இருக்கும் நேரங்களில்.  ஆடி  18ஆம் பேருக்கு சமயம் ஒத்தக்கடை பகுதி திண்ணன் செட்டி அக்ரஹாரம் அனைத்து  மாமிகளும் சித்ரான்னங்களுடன் ஆற்று நீரை தெய்வமாக வழி பட்டு விளையாடிய ஆட்டம் பாட்டம் பார்த்த ஞாபகம் இருக்கிறது.

அவ்வப்போது மாட்டு வண்டிகளில் மணல் ஏற்றிப் போவார்கள்.   களம்  நிறைய நெல் நிறைந்த காலத்தில் சிறு குழந்தை கைநிறைய அள்ளுவது போல் அது மிக மிக சிறு பகுதி. மணல் விற்பவர்களும், தனக்கும் தம் வண்டி மாடுகளுக்கும் வயிற்றுப்பாட்டுக்கும் தான் விலை நிர்ணயித்து இருந்தார்கள் . என்றைக்கு  கன ரக வாகனங்களில்  மணல் அள்ளி பெரும்  பணம் சுரக்கும் தொழிலாக இது மாறியதோ அன்றே  ஆரம்பித்து விட்டது அழிவும்.


மழை பெய்து தண்ணீர் பெருக்கெடுத்து ஓடி வரும் காலங்களில் விருசுழி ஆற்று மங்கை மகிடா சுர மர்த்தினி போல் வீறு கொண்டு வேகம் கொண்டு எழுந்து விடுவாள்.   இந்த ஆற்றில் மட்டும் சுழல் எனும் சுழி மிகவும் அபாயகரமானது.  தண்ணீர் ஓடி வரும்போது சிறு குமிழி போல ஆரம்பிக்கும் இது நீரோடு போடும்போதே கொஞ்சம் கொஞ்சமாக உருப்பெருக்கி பெரிய சுழல் ஆக  மாறி  விடும் .  யாரும் இந்த சுழலில்  மாட்டி விட்டால் தன்னை மீறி இதனுடன் சேர்ந்து சுற்ற வேண்டியது தான்.  மீள்வது கடினம்.  மனம் பதறாமல் நீரின் ஓட்டத்துடன் சென்று மெதுவாக ஆழமில்லாத பகுதி வரும்போது காலை ஊன்றி கரை சேர வேண்டும்.  கொஞ்சம் பயந்து விட்டாலோ எதிர் நீச்சல் போட  நினைத்தாலோ தலையால் தண்ணீர் குடிக்க வேண்டியது தான்.  நாங்கள் கொஞ்சம் அனுபவ சாலிகள் இந்த விஷயத்தில் ஏனென்றால் தினசரி ஆற்றில் திரிந்ததனால் எங்கு பள்ளம்,எங்கு மேடு என்று அறிவோம்.

ஒரு சமயம் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது.  குளிக்க செல்வோம் என்று ஒரு குழு தயாரானது.

அமரனாகி விட்ட அன்பு நண்பன் ரஷீது ( நசீர் க்ளாஸ் ஹவுஸ், தேவகோட்டை )

S .P . ராஜன் (Ex -COAST GUARD OFFICER,Now Settled Down At Karaikudi )

இராஜாமணி குருக்கள் (now at Madurai )

மனோகர், (ஒத்தக்கடை கோபால் டீ ஸ்டாலின் தம்பி )  மற்றும்

அடியேன் ...


இதில் நான் ரஷீது மற்றும் நண்பன் ராஜன் நன்றாக நீந்தக்கூடியவர்கள்.  குளத்தில் நீந்துவதற்கு ஆற்றில் நீந்துவதற்கும்  நிறைய வேறுபாடு உண்டு .   வெள்ளத்தின் போக்கோடு போய் திரும்ப வேண்டும்.   பாலத்தின் விளிம்புக்கு கொஞ்சம் கீழே வரை பயங்கர சப்தம் எழுப்ப ஓடிக்கொண்டு இருக்கிறது. நுரை ததும்ப, சுழிகள் பெருக ..  நாங்கள் மூவரும் பாலத்தின் இடது புறம் மேலே ஏறி குதிக்கிறோம்... நீரின் வேகத்தோடு பாலத்தின் கீழே நீரோடு நீந்தி பாலத்தின் மறு பக்கம் வருகிறோம் ... அப்படியே வலது புறமாக கரையேறி மீண்டும் பாலத்தின் மீது வந்து மறுபடியும் டைவ்.  இதில் அன்பன் ரஷீது குட்டிக்கரணம் எல்லாம் அடிக்கிறான். இது ஒரு விளையாட்டு போல தொடர்கிறது.

கீழே ஆற்றுத்தண்ணீரில் கரையோரம் இறங்கி மற்றவர் இருவரும் குளித்துக் கொண்டு இருக்கிறார்கள். ஆற்றில் குளிக்க இறங்கினால் நம் கால்கள் தாங்கும் வரை உள்ள நீர் சக்தி (water force ) ஆழம் வரை நின்றால் பிரச்சனை இல்லை.   தண்ணீரின் ஓட்டத்தில் நம் பாதம் ஊன்றிய இடத்துக்கு கீழே உள்ள மணல் அடித்துச் செல்லப்பட்டு நாம் நம்மை அறியாமல் கீழே சென்று கொண்டு இருப்போம். அவ்வப்போது காலை தள்ளி தள்ளி வைத்து நமது நீர் மட்டத்தை சமன் செய்து கொள்ள வேண்டும்.  இல்லையென்றால் வேகமான மணல் அரிப்பின் மூலம் இடுப்பளவு நீர் மட்டத்தில் நின்ற உடம்பு கழுத்து மட்டத்துக்கும் போகும் அதோடு காலில் பிடிப்பு (grip ) இல்லாமல், நீரோடு அடித்துச் செல்லப்பட்டு விடுவோம்.  கொஞ்சம் பயப்படாமல் தண்ணீரை குடித்து விடாமல் நீரின் போக்கிலேயே போய்  மேடான இடம் வரும்போது காலை ஊன்றி கொண்டால் .கே.  அரண்டு தண்ணீரை குடிக்க ஆரம்பித்து விட்டால் இன்னுயிர் துறக்க வேண்டியது தான்.

இதே நிலை நண்பர் குருக்கள் ராஜாமணிக்கும், மனோஹருக்கும். குளிக்க கரையில் இறங்கியவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக உள்ளே சென்று ஆற்றோடு அடித்து வரப்பட்டு விட்டார்கள். இதை அறியாத நாங்கள் எங்கள் குதித்தல் குதூகலத்தில்.  ஆற்றின் பெருத்த ஓசையில் அவர்கள் எழுப்பிய ஓலமும் கேட்கவில்லை.  இதில் ராஜாமணி கொஞ்சம் விவரமானவர். பயந்த போதிலும் அடித்து வரும் வேளையில், ஆற்றின் தூண் /  ஒரு கண்ணுக்கும் இன்னொரு கண்ணுக்கும் இடையில் இருக்கின்ற பாலத்தின் காலில் இரு கால்களையும், கைகளையும்  அகல விரித்து மேலும் அடித்துச் சென்று விடாமல் அப்படியே சமாளித்து கொண்டு இருக்கிறார்.  மற்றவர் மனோகர் ஆற்றோடு சென்று கொண்டு இருக்கிறார்.. பாலத்தின் அடியில் போய் அடுத்த பக்கமாக போய்க்கொண்டு இருக்கிறார்.  அப்போது தான் நாங்கள் கவனித்தோம்.  நான் உடனே ராஜாமணி அருகில் சென்றேன்.  நண்பன் ராஜா ஆற்றின் வேகத்தை விட வேகமாகச் செல்லும் மனோஹரை காப்பாற்ற விரைகிறார். 

நான் ராஜாமணியின் அருகில் சென்று அந்த இடத்தை விட்டு வா  என்கிறேன். பயத்தில் வர மாட்டேன் என்கிறார்.  வெள்ளம் என்னையும் இழுக்கிறது.  வேறு வழி இல்லாமல் பிடித்து இழுக்கிறேன்.  வெள்ளத்தின் வேகத்தில் அவரும் அடித்து செல்லப்பட்டு விடுகிறார்.  இப்போது அவராக விரட்டிப் பிடிக்கிறேன்.  இருவரும் பாலத்தின் கீழே.. ஆனால் ராஜாமணியை இப்போது காணவில்லை.  தண்ணீர் குடிக்க ஆரம்பித்து நீர் மட்டத்துக்கு கீழே சென்று விட்டார்.  ஓடும் நீரில் நின்று தேட இயலாது.  சமாளித்து கால்களால் துழாவுகிறேன்.  கீழே ராஜாமணி,  மரண பயத்தில் எது கிடைத்தாலும் பற்றிக்கொள்கிற மனநிலை.. எனது இரண்டு கால்களையும் பற்றிக் கொண்டு விட்டார் .. அப்புறம்... நான் எங்கே நீந்துறது?.  காப்பாற்றுவதா?  காப்பாற்றிக்கொள்வதா?  நானும் உள்ளே போக ஆரம்பித்து விட்டேன்.  எப்படியோ சமாளித்து கால்களை உதறி என்னை விடுவித்துக் கொண்டு அருகில் ஆண்டவன் அந்த இடத்தில் வைத்திருந்த ஒரு காட்டு கருவேல மரக்கன்றின் நுனியைப் பிடித்து பின் கைகளால் ராஜாமணியை பிடித்து இழுத்து கரை சேர்த்தேன்.

இந்த இடைவெளியில் மனோஹரை ராஜா கொண்டு வந்து கரை ஏற்றி இருந்தார்.   மனோகர் ராஜாவின் கால்களைப் பிடித்துக் கொண்டு 'நீதான் என் தெய்வம்'  என்னை காப்பாற்றினாய் என்று கதறினார்.  மறக்க முடியாத நிகழ்வுகள்..

என்ன ராஜன்,  ராஜாமணி ஞாபகம் இருக்கிறதா?

அடுத்து இன்னோரு சம்பவம்..அன்பார் தமிழ்கொண்டல் .குமார் அவர்களுடன்.  காலையில் 6:00 மணிக்கு படிக்க ஆற்றில் இறங்கினால் ஆளுக்கு ஒரு பக்கம் நடந்து கொண்டோ உட்கார்ந்தோ படிக்க ஆரம்பித்து விடுவோம்.  அது ஒரு தவம் மாதிரி.  தன்னை மறந்த லயத்தில் பாடம் புத்திக்குள்  உறையும்.  ஆற்றின் ஒவ்வொரு மணற்  துகளும் என்னுடன் Industrial Organisation,  Indian companies Law, Mercantile Law என்று சேர்ந்து படித்து இருக்கின்றன.  P .U . எனப்படும் கல்லூரி புகு முக வகுப்பில் நான் இருக்கிறேன்,  அன்பர் குமார் இளங்கலை முதலாம் ஆண்டு. அப்போது EMERGENCY எனும் அவசர நிலை பாரதப்பிரதமர் திருமதி இந்திரா அம்மையார் அவர்களால் பிரகடனப்படுத்தப்பட்டு போலீசாருக்கு எல்லாம் அதிகம் பவர் இருந்த நேரம்.  யாரும் எவரும் எதையும் கேட்க இயலாது. அவர்கள் வைத்தது தான் சட்டம். அதிகம் கெடுபிடி.


நாங்கள் அன்று எப்போதும் போல படிக்கிறோம்..வீடு  திரும்புகிறோம்.  எங்களுக்கு இரண்டு வழிகள் .  ஒன்று ஒத்தக்கடை வழியாக மெயின் ரோடில் சென்று பாலத்தின் வழியாக ஆற்றில் இறங்குவது. மற்றொன்று மாட்டு சந்தை வழியாக, நகரத்தார் சுடுகாடு கடந்து தென்னந்தோப்பு வழியாக ஆற்றுக்கு சென்று வருவது.  சமயங்களில் படித்துக்கொண்டே பழைய சருகணி ரோடு கடக்கும் எல்லை வரை ஆற்றில் உலவி இருக்கிறோம்.

அன்று வீடு திரும்பினோம் மாட்டு சந்தை வழியாக.  வழக்கம் போல MGR படிப்பகம் வரை வந்து அங்கிருந்து பிரிவோம்.   ஆற்றை விட்டு கிளம்பும்போது ஒரு தென்னை மட்டை காய்ந்த ஓலையோடு தோப்பின் வெளியே கிடந்தது.  சும்மா போக வேண்டியது தானே ?  விதி அன்று தென்னை மட்டை ரூபத்தில் வந்து விளையாடியது.  குமார் அந்த மட்டையை பிடித்து இழுத்து கொண்டே வந்தார்.  நான் அவரை பகடி செய்து கொண்டே வருகிறேன்.   மாட்டு சந்தையில் இருந்து MGR படிப்பகம் வரவேண்டுமானால் நகர காவல் நிலையம் கடந்து வர வேண்டும்.  தென்னை மட்டை புழுதியில் பட்டு தூசு கிளப்பி கொண்டு வருகிறது.  குமார் அதனை விடுவதாய் இல்லை, அதனால் ஒரு உபயோகமும் இல்லை என்று அறிந்தும்.

இப்பதான் க்ளைமாக்ஸ் ...

நாளை பார்ப்போமா என்ன ஆச்சுன்னு?

கருத்துகள்

  1. அற்புதமான நினைவுகள். நீங்கள் எழுத எழுத தேவகோட்டை பார்க்கவேண்டும் போல் இருக்கிறது. உங்களுடைய நீச்சல் அபார தன்மையையும் அற்புதமாக எழுதியிருக்கிறீர்கள். உங்கள் எழுத்தின் மூலமாக நடந்த சம்பவத்தை முன்னே கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார்கள். உங்கள் உயிர் போனாலும் பரவாயில்லை என்று அவர்களைக் காப்பாற்றுவதற்கு நீங்கள் எடுத்த முயற்சி சிறப்பாக இருந்தது. வாழ்த்துகள் தொடருங்கள்

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தென் கிழக்கில் .. தெக்கத்தியான் (தெற்கத்தியான்) 21. தெக்கணமும் அதிற் சிறந்த திராவிட நல் திருநாடு'

22.தென்னாடும் தென் கிழக்கும்....இந்தோனேசிய வரலாற்று ஆவணங்களில் இருந்து....தென் கிழக்கில் ..

அசை போடும் ..தேவகோட்டை ஞாபகங்கள்-பகுதி: 60