அசை போடும் ..தேவகோட்டை ஞாபகங்கள்-பகுதி: 19


அசை  போடும் ..தேவகோட்டை ஞாபகங்கள்
கவிக்கிறுக்கன் முத்துமணி

பகுதி: 19

30-10-2017

தேவி மாநகர் தெய்வங்களே...

இயன்றவரை ஒரு கோர்வையாக நிகழ்வுகளையும், இடங்களையும் குறிக்கலாம் என்றுதான் நினைக்கிறேன்.   ஆனால் சில இடங்களில் தடுமாற வேண்டி இருக்கிறது,, தடம் மாற வேண்டி இருப்பதனால்.

முன்பு

தி.ஊரணி ஏரியா முழுவதும் பார்த்து விட்டோம்..

காந்தி ரோடில் தொண்டியார் வீதி வரை வந்து இருந்தோம்
M.G.R .படிப்பகம் வழியாக தி.ராம.சாமி வீடு வந்து வெள்ளையன் ஊரணியை வலம் வந்து விட்டோம்

கீழ பஜார், காசுக்கடை வீதி வழியாக மேல பஜார் வீதி வரை வந்து விட்டோம்.

கந்தர் சஷ்டி விழா மற்றும் விஜய தசமி விழாக்கள் மூலமாக சிவன் கோவில் பகுதியையும் பார்த்து விட்டோம்.  ஆனால் இன்னும் கொஞ்சம் விபரம் சொல்ல வேண்டியிருக்கிறது.

இந்த நிலையில் உங்களை தேவகோட்டையின் பிரதான சாலையான  வட்டாணம் ரோடுக்கு  அழைத்து செல்ல ஆசைப்படுகின்றேன்.  வட்டாணம்  என்ற ஊர் தேவகோட்டையில் இருந்து ஒரு 40 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஒரு கடற்கரை ஊர்.  தொண்டியில் இருந்து பாசிபட்டணம் செல்லும் பாதையில் இருக்கிறது.  அந்தக்காலத்தில் தொண்டி , வட்டாணம் போன்ற ஊர்கள் மூலமாகத்தான் பர்மாவின் தேக்கு வங்காள விரிகுடாவை கடந்து தேவகோட்டை வந்து இறங்கி இருக்க வேண்டும்.  இந்த வட்டாணம் ஊருக்கு செல்லும் சாலையாகத்தான் இந்த வழி  இருந்திருக்கிறது.

இந்த வட்டாணம் ரோடு நகர சிவன் கோவில் பின் புறம் ஆரம்பித்து ஒத்தக்கடை வழியாக செல்லும்.  திருப்பத்தூர் சாலை சிவன் கோவில் பின்புறத்தில் சேரும் இடத்தில் ஆரம்பிக்கும்.  இந்த இடத்தில ஒரு முக்கு கடை இருந்தது.  அதை நடத்தி  வந்தவரை  நாங்கள் அழைப்பதே முக்கு கடை அய்யர் என்று தான்.  ஒரு காலை கொஞ்சம் சாய்த்து நடப்பார் .  அதிக பட்சம் நான் அவரிடம் வாங்கியது 5 பைசாவாவுக்கு பேனாவுக்கு மை , 1 காசு வெள்ளி மிட்டாய், 2 காசு கடலை மிட்டாய்.   பள்ளிக்கு போகிற அவசரத்தில் கொஞ்சம் அவசரப்படுத்தினால் 'பொண்டாட்டி நண்டு கடிக்க'  என்பார்.... பள்ளி வயதில் 'ஹி ஹி' என்று அமைதியாக இருந்து விடுவோம்.   அதன் பின்னர் வாலிப வயது எய்திய பின் பயந்து பயந்து 'யானை சிகரெட்டு'  'பெர்க்லி' சிகரட்  வாங்கி இருக்கிறேன்.  ஒரு சமயம் அவரது வளர்ப்பு மகள் என் தங்கையின் வகுப்பு தோழி என்னை என் தங்கையிடம் 'போட்டு கொடுத்ததும்'  நடந்து இருக்கிறது.

அப்படியே அந்த கடையில் இருந்து தெற்கில் ஓடும் வட்டாணம் ரோடில் நடப்போம்.  வலது புறம் முதல் வீடு 'அன்னபூரணி'  ஆச்சி வீடு .  இவர் பிள்ளை கூட்டியவர் தான் கல்லூரியில் ஆங்கில பேராசிரியர் திரு ரெங்கநாதன் என்ற திண்ணப்பன் அவர்கள்.  மற்ற விபரங்கள் நான் இங்கு குறிப்பிட விரும்பவில்லை.  அடுத்து வருவது AL.AR. வளவு . அள .அரு. வளவு திருப்பத்தூர் ரோட்டுக்கு இணையாக (Parallel ) வருவது ஆகும். 


அள.அரு.வளவு திருப்பத்தூர் ரோடில் M .L .M . வீட்டின் எதிரில்  துவங்கி, குதிரைப்பாதை ரோடில் சுவர்ணவள்ளி பங்களா வாசலில்  முடியும்.  எந்த நேரமும் குளு குளு என்று இருக்கும். இந்த அள .அரு. வளவில் தான்  ஜமீன்தார் பள்ளி இருக்கிறது.  இது உண்மையில் ஜமீன்தார் aided பள்ளி.  உயரமான வெளித்திண்ணை,  நீண்ண்ட முன் வாசல். திருவேங்கடமுடையான் பள்ளியில் படித்த போது இந்த பகுதி எல்லாம் விளையாட்டு தளங்கள்.  இப்படியும், அப்படியுமா  zig zag அடித்துத்தான் வீடு போய்ச் சேர்வேன்.  அதிலும் கிருட்டிணன் என்று ஒரு வகுப்புத்தோழன்.  அவன் அப்பா M.L .M   வீட்டில் வேலை பார்த்தார்.  இந்த கிருட்டிணன் எப்போதும் முத்து காமிக்ஸ், 'இரும்புக்கை மாயாவி'  புத்தகங்கள் ஒன்று விடாமல் வாங்கி விடுவார்.  எனக்கு படிக்க கொடுப்பார்,  ஆனால் அப்பொழுதே திரும்பக் கொடுத்து விட வேண்டும்.  வீட்டுக்கு கொண்டு போக்க கூடாது.  ஒரே வழி புத்தகத்தை வாங்கி அள .அரு .வளவுக்குள் உடகார்ந்து  படித்து விட்டு அப்பொழுதே திரும்ப கொடுத்து விடுவதுதான்.  இரவில் இரும்புக்கை மாயாவி கனவில் வந்து AL .AR . வளவு வீட்டில் உள்ள E.B. மெயின் பாக்ஸில் விரலை விட்டு மாயமாகி விடுவார்.  அதன் பின் கல்லூரி நாட்களில் செல்வம் மாமு (முத்து கருப்பன் ex -பாண்டியன் கிராம வங்கி ), வேலு மாமு எல்லோரும் உட்க்கார்ந்து கதைகல் பேசிய இடங்களும் இதுதான்.  யாராவது காரைக்குடியில் ரிலீஸ் படம் பார்த்து விட்டு வந்தால் காட்சி வரிசை மாறாமல் கதை சொல்வார்கள்.     அதிலும் நம்ம செல்வம் மாமு சொன்ன 'உத்தமன்',  'பல்லாண்டு வாழ்க'  திரைக்கதைகள் இன்னும் நெஞ்சில் ஈரமாய்..

திருப்பத்தூர் சாலையில் அள .அரு .வளைவின் ஆரம்பத்தில் ஜார்ஜ் மன்னர் இந்திய வருகையை கௌரவிக்கும் வண்ணம் ஒரு வளைவும்,  அதைக் குறிக்கும் கல்வெட்டும் அமைக்கப்பட்டு இருக்கும்.  இதனை அடுத்து வருவது கிளைத் தபால் நிலையம்.  PALACE தபால் நிலையம் என்று இதற்கு பெயர்.  அந்தக்காலத்தில் என் சித்தப்பா அரசு வேலை வாய்ப்பு (EMPLOYMENT EXCHANGE ) மாதம்  ஒரு முறை புதுப்பிக்க (renew ) ஒரு Reply Card வாங்கி வரச்சொல்வார் . விலை   12 புதிய நயா  பைசா.  இரண்டு தபால் அட்டைகள் எதிரும் புதிருமாக இணைந்து இருக்கும்.  அனுப்புனர் விலாசம் ஒரு கார்டிலும், பெறுநர் விலாசம் மற்றொரு கார்டிலும் எழுதி அனுப்பி விட்டால் நமது பகுதி பெறுனரின் ஒப்புகை (acknowledgement) யோடு நமது விலாசத்துக்கு திரும்ப வந்து சேரும்.

அதனை அடுத்து உள்ள ஒரு வீட்டில் அந்தக் காலத்தில் (Telephone Exchange )  தொலை  தொடர்பு நிலையம் இருந்தது .  பின்னர் அதே டெலிபோன் எக்ஸ்சேன்ஜ் அதே வரிசையில் உள்ள செந்தி   அண்ணன் அவர்கள் இல்லத்துக்கு மாற்றப்பட்டது .   அந்த (ex -telephone Exchange) இல்லத்தில் எனது இனிய நண்பர், தற்போது மதுரையில் வசிக்கும் N.புருஷோத்தமன் அவர்கள் குடும்பம் வசித்து வந்தது.    அப்போதெல்லாம் இப்போது போல் (Automatic Telephone Exchange) தானியங்கி  தொலை தொடர்பு நிலையங்களோ (satellite ) செயற்கை கோள் மூலம் தொடர்பு கொள்வதோ சாத்தியம் இல்லை.  Trunk call எனப்படும் operator துணையுடன் இயங்கும் இணைப்பு நிலையங்களே இருந்தன.  கபடி விளையாட்டு வீரர் ஜீவா அங்கு வேலை செய்து வந்தார்,  பின்னர் அந்த பழைய தொலை பேசி இணைப்பு நிலையம் இருந்த இடத்தில குடியும் இருந்தார்.

இந்த பழைய  தொலை பேசிதொடர்பு நிலையத்துக்கு அடுத்து மாதர் சங்கம் இயங்கி கொண்டு இருந்தது.  இதே மாதர் சங்கம் (AIWC ).  இங்கு தையருக்கு தையர் பயிற்சி வகுப்புகள் நடந்து கொண்டு இருந்தன . இதற்கு முன்னர் இந்த மாதர் சங்கம் அள .அரு.வளவு ஆர்ச்சுக்கு அருகில் உள்ள மிகப்பெரிய கட்டிடத்தில் இருந்தது. இது அந்தக்காலத்தில் ஜமீனின் களஞ்சியமாக இருந்திருக்கிறது.

பேலஸ் தபால் நிலையத்துக்கு எதிர் வரிசையில் சில பழைய வீடுகள்.  அதில் ஒரு அய்யர் குடி இருந்தார்.  அவரது மகன் மணி, துரு துரு வென இருக்கும் குட்டை பையன் (இப்போ வயது ஆகி இருக்கும், நான்  அந்த கால கட்டத்தில் இதை எழுதிக்கொண்டு இருக்கிறேன் ), பின்னர் மகிழுந்து ஓட்டுநர் (Car Driver ) ஆனார்.  அதன் பின் அதே இடத்தில ராஜ் குமார் பஸ் சர்வீஸில் ஓட்டுநராக இருந்த நாயிநா குடும்பம் வசித்து.  அதை அடுத்து இரண்டு பழைய வீடுகள்.  அடுத்து வரும் வீட்டில் தான் 'நலந்தா' புத்தக நிலையம் நடத்தி வந்தார்கள்/   வருகிறார்கள்.  அதை அடுத்து ஒரு கேட். அந்த இடத்தில ஒரு ஆயுர்வேத வைத்தியசாலை நடந்து வந்த ஞாபகம் இருக்கிறது.  ஆனால் அறுதியிட்டு உறுதியாக சொல்ல முடியவில்லை.   பின்னர் அந்த இடத்தில ஒரு மாவு மில் (இட்லி, தோசை மாவு ) இருந்தது.   பெல்ட் போட்டு பெரிய கல் உரல்கள் சுற்றுமாறு முதன் முதலில் அறிமுகப் பட்டிருந்த மாவரைக்கும் இயந்திரங்கள் கட ....கட ....ஓசையுடன் ஓடிக்கொண்டு இருக்கும்.

அதன் பின் நம்ம டாக்டர் சிவா அந்த இடத்தில இருந்து வைத்தியம் பார்த்தார். அடுத்து அருணாசல பொய்கைக்கு போகும் வீதி.  இது நேராக ஸ்ரீராம கிருஷ்ண வித்தியாலயத்தில் சென்று முடியும்.  அந்த பக்கம் அப்புறம் செல்லலாம்.

இதை அடுத்து வருவது பல சரித்திரங்கள் கண்ட லட்சுமி விலாஸ் எனும் பெயர் பூண்ட ஜமீன்தார் இல்லம்.  உயரமான இரும்பு வேல் முனை வேலி.  முன்புறம் ஒரு அழகான பெரிய நீரூற்று (Fountain ).  அதன் பின் பெரிய போர்டிகோ. அந்த போர்டிகோவில் ஒரு கோச் வண்டி நிற்கும். பின்னால் உயர எழுந்து செல்லும் படிக்கட்டுக்கள்.  உயர்ந்த மேல் தளம்.  உள்ளே பரந்து விரிந்து செல்லும் பெரிய பங்களா.  அதன் இடது புறம் ஒரு வசந்த மண்டபம் போல் குளு குளு வென மரங்களால் சூழப்பட்ட ஓரு ஷெட்.  அதன் பின் வாதா மரங்கள் உயர்ந்து வளர்ந்த பெரிய வெற்றிடம்.  பின் பக்கச்சுவர் அருணாசல பொய்கையில் போய் முடியும். 

எத்தனையோ முறை இங்கு சென்று இருக்கிறேன், திருச்சுழியார் வீட்டு பணிக்காக..  இங்கிருக்கும் திருவாளர் அண்ணா செட்டியார் எனக்கு விபரம் எட்டாத காலத்தில் இருந்தே தி.ஊரணி பிள்ளையார் கோவில், நகர சிவன் கோவில் என்று வார வழிபாடு நடத்தி பக்தி விதைதனை குழந்தைகளின் ஈர வயல்களில் விதைத்து, காப்பாற்றி கதிராக்கும் சிவச்செல்வர்.  செவ்வாய்க்கிழமை என்றால் தி.பிள்ளையார் கோவிலில் சிறார்கள்

 'நமசிவாய வாழ்க
 நாதன் தாள் வாழ்க'

என்று பக்தி நெறியிற் பலகாலம் பயிற்றுவித்து வருபவர்.  இல்லை என்றால் நானெல்லாம் எங்கே போய் சிவபுராணம் படிக்கப்போறது?  அதோடு ஓவ்வொரு வாரமும் ஒரு கதை சொல்லி அதை நோட்டு புத்தகத்தில் எழுதி அடுத்த வாரம் வரும்போது அவரிடம் காண்பிக்க வேண்டும்.  நன்றாக மனதில் பதித்து எழுதி இருப்பவர்களுக்கு மதிப்பெண் உண்டு.  அதோடு வருகை பதிவேடு இருக்கும்.  பெயர்கள் அழைக்கும் பொது 'சிவா'  என்று கூறி வருகையை பதிவு செய்ய வேண்டும். வருடா வருடம் பரிசுகள் உண்டு.. ஒழுக்கமான மாணாக்கருக்கும், தவறா வருகை புரிவோருக்கும்.  இத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ண வித்யாசாலையின் நிர்வாகமும் இவர் எடுத்து கொண்டார்.


லட்சுமி விலாஸ் அடுத்து ஒரு பெரிய இடம். எனக்குத் தெரிந்து இது சிதிலமடைந்து தான் கிடந்தது.  ஒரு கல்வெட்டு பார்த்து இருக்கிறேன். அதில் 'ஜமீன்தார் பெணகள் பாடசாலை' என்று பொறித்து இருக்கும்.  அப்படின்னா இந்த இடத்தில் எனக்கு தெரியாத காலத்தில்  பள்ளி நடந்து இருக்க வேண்டும்.  இதற்கு எதிரில் சொர்ண வள்ளி பங்களா.  அடுத்தது பெரிய பள்ளி வாசல். அடுத்து ஒரு இசுலாமிய சகோதரரின் குடும்பம். அடுத்து ஒரு தனி வீடு.  தற்போது அது ஒரு மருத்துவமனை அடுத்து ஒரு கேட். இலக்கம் 19.  இதற்கு நேர் எதிர் வீடு 'திருச்சுழியார் வீடு'  .


திருச்சுழியார்  வீட்டுக்கு சொந்தமான தோட்டம்  

இந்த 19 ,வட்டாணம்  ரோடு
எனது கருவறை. 
சேறாய் இருந்த என்னை
சீராய் மாற்றி சமைத்த நிலம்
அன்பு உறவுகளை அள்ளி அள்ளி தந்த கரம்
வாழ்வின் கல்விதனை கற்ற பள்ளிக்கூடம்

கம்பளிப் புழுவாய் இருந்த என்னை
வண்ணச் சிறகுகள் இணைத்து
வானில் பறக்க விட நான்
கூட்டுப்புழுவை குடிவைத்த
தாயின் மடி .

மற்றவை அடுத்த பகுதியில் .....

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தென் கிழக்கில் .. தெக்கத்தியான் (தெற்கத்தியான்) 21. தெக்கணமும் அதிற் சிறந்த திராவிட நல் திருநாடு'

22.தென்னாடும் தென் கிழக்கும்....இந்தோனேசிய வரலாற்று ஆவணங்களில் இருந்து....தென் கிழக்கில் ..

அசை போடும் ..தேவகோட்டை ஞாபகங்கள்-பகுதி: 60