அசை போடும் ..தேவகோட்டை ஞாபகங்கள்-பகுதி: 23


அசை போடும் ..தேவகோட்டை ஞாபகங்கள்
கவிக்கிறுக்கன் முத்துமணி
பகுதி: 23
07-11-2017

ரைஸ் மில்லுக்கு அடுத்து முன்பு இசுலாமிய முன்னேற்ற சங்கம் இருந்த இடத்தில் இருந்த யாசின் டீ கடை வரைக்கும் வந்துட்டோம்.  இந்த யாசின் கடை முன்பு வட்டாணம் ரோடு குளக்கால் அருகில் இருந்த கேட்டில் இருந்தது.  இந்த யாசின் , வெள்ளையன் ஊரணி வடகரையில் புரோட்டா கடை வைத்து இருந்த பாவா ராவுத்தரின் சகோதரர்.  திராவிட முன்னேற்ற கழகத்தின் செயல் வீரர்.  இந்த பாவா ராவுத்தரின்  வாரிசு திரு .சேட் தற்போது இயக்கத்தில் இருந்து வருகிறார்.

முன்பு யாசின் டீக்கடை குளக்கால் அருகில் இருந்த சமயம் இதே குளக்கால் மற்றும் பள்ளி வாசல் சுற்றுப்புரங்களில்  இசுலாமியக் குடும்பங்கள் நிறைய  வசித்து வந்தன.  அந்த நேரம் பலர் மலேயாவுக்கும் இந்தியாவுக்கும் வர போக இருந்தனர்.  சிங்கப்பூர்  மலேசியாவின் 14ஆவது மாகாணமாய் இருந்தது.  1965ல் நடந்த தேர்தல் உள்ளடி குழப்பங்ககள் கண்டு மலேஷியா சிங்கப்பூரை தனியாகப் பிரித்து விட்டது.  அந்த கால கட்டத்தில் மலேசியாவின் பொருளாதாரம் மிக உயர்வாய் இருந்தது.  சிலர் மலேஷியா, சிங்கப்பூரை விட்டு 1957 முதலே இந்தியா வரத்துவங்கினர்.  இந்தக் குளக்காலில் பாலத்தின் கிழக்குப் புறம் பிச்சை என்பவர் 1968ல் மலேசியாவில் இருந்து வந்தார் .  இந்த யாசின் டீ கடையில் வழக்கம் போல தந்தி பேப்பர் படிக்க ஒரு கூட்டம்,  வெட்டி கதை பேச ஒரு கூட்டம் என்று கொஞ்சம் ஜே ஜே என்று இருக்கும் .  போதும் போதாமைக்கு இந்த பிச்சை வேறு மலேயாவில் இருந்து வந்து இருக்கிறார்.  கையில் ஒரு ரெகார்ட் பிளேயர் கம் ட்ரான்ஸிஸ்டர்(Record Player Cum Transistor ) கொண்டு வந்து இருந்தார் .  படுக்க வைத்து ஒரு மூடியைத் திறந்தால் இசைத்தட்டு போடும் படி அமைப்பு.  மறுபக்கம் ரேடியோ டுயூனர்.   வருடம் 1968.  L .R .ஈஸ்வரி பாடி பட்டி தொட்டியெல்லாம் இசைத்துக் கொண்டிருந்த 'எலந்த பயம்...எலந்த பயம்....செக்க செவந்த பயம்..'  பாடல் இசைத்தட்டை இந்த செட்டில் போட்டு ஒரு கூட்டத்தை கூட்டிக்கொண்டு இருப்பார் இந்த யாசின் கடையில்... பட்டிக்காட்டான்களை பற்றி சொல்லவா வேண்டும் ?  ,  என்னைத்தான் சொல்கிறேன் !!   வாயைப் பிளந்து ... அட... ரேடியோவும் இருக்கிறதே ..என வியந்து வேடிக்கை பார்த்த காலம்.   அப்புறம் சிறிது காலம் கழித்து இந்த யாசின் கடை முன்பு இசுலாமிய முன்னேற்ற சங்கம் இருந்த ஐஸ் கம்பெனிக்கு அடுத்து  இருந்த  ரைஸ் மில் அடுத்து வந்தது. 

காலையில் டீ ..10 பைசா (விலை ஏறி விட்டு இருந்தது அப்போது ... என்ன அநியாயம் ?),  காபி 16 பைசா,  அப்புறம் வாழைக்காய் பஜ்ஜி 5 பைசா,  இட்லி 5 பைசா ,  அப்புறம் மதிய வேளையில் கேக் என்று மைதா மாவில் ஆட்டின் கால் குளம்பு போல் வாய் பிளந்து இருக்கும் ஒரு இனிப்பு ஐட்டம் போடுவார்.  இந்த கேக் தானுங்க சாமி நம்ம முதல்ல பாத்த கேக்கு .   இதோட இந்த டீ ஒண்ணா சங்கமம் ஆகும் . அப்புறம் முட்டைகோஸ் அப்படின்னு ஒரு பலகாரம், இனிப்பா... அதுக்கு ஏன் முட்டகோஸ்னு பேர் வச்சாங்கன்னு இது வரை தெரியல.  உள்ளே இனிப்பு வைத்த மைதா உருண்டை.

இந்த இசுலாமிய முன்னேற்ற சங்கம் / யாசின் டீ கடை இருந்த இடத்துக்கு அடுத்தது ஒரு பெரிய வீடு .  முகப்பு வட்டாணம், ரோடில் ....நடுவில் முத்தம் வைத்து பின்புறம் அடுப்படி வைத்து அதன் பின் பெரிய தோட்டம். குளக்காலுக்கு சென்று சேரும்.  இந்த வீட்டில் சபரி மலை செல்லும் திரு.திண்ணப்ப செட்டியார் குடும்பத்துடன் வசித்து வந்தார். இவர்கள் வீட்டு தோட்டத்தில் ஒரு குடி. நான் முன்பு குறிப்பிட்ட நாகராஜன் ( நான் மாமா என்றழைப்பேன் ) அவர்கள் குடும்பம் வசித்து வந்தது.  முக்குலத்தோர் வகுப்பை சேர்ந்தவர்,  இராமநாதபுரம் பூர்விகம் . இந்த நாகராஜனின் அப்பா திரு.பாண்டி சேர்வை, ஜாலியான பேர்வழி. அப்பப்ப கொஞ்சம் சரக்கு அடிப்பார் .  இதில் என்ன விசேஷம் என்கிறீர்களா ?  அது மதுவிலக்கு முழுதாக அமுலில் இருந்த தமிழகத்தின் பொற்காலம்.   பட்டை என்ற அடைமொழியுடன் ரகசியமாக காய்ச்சப்படும் உண்மையான மரப்பட்டைகள்,  பேரீச்சம் முதலான பழங்கள் போட்டு வடித்து எடுக்கப்படும் சரக்கு.  சாப்பிட்டு விட்டு சல்ல வாரித்தனம் செய்ய மாட்டார்கள்.  ஏன்னா போலீசு புடிச்சுடுமே?  சத்தம் இல்லமல் சாப்பிட்டு விட்டு சந்தோசமா கப் சிப் ஆகிடுவாங்க.  ரொம்ப நெருங்கினவங்களுக்கு மட்டுமே தெரியும்.. ஐயா அடிச்சிருக்காரு ன்னு.

கட்டவெள்ளையன்  செட்டியார் தெருவில் சமயபுரம் மாரி அம்மன் கோவில் அன்பர்கள் அறிவீர்கள்.  இதன் வழியாக வெள்ளையன் ஊரணி கிழக்குக்கு செல்லலாம்.  இந்த வழியில் 'ரசாக்'  கசாப்பு கடை இருந்தது.       இந்த பாண்டி ஐயா ரசாக் ராவுத்தர் கசாப் கடையில் அரை நாள் அமர்ந்து  கொஞ்சம் கணக்கு சொல்லுவார் ராவுத்தருக்கு.  அதுதான் அவர் அதிகம் பார்த்த கடினமான வேலை.  அவர் மனைவி செல்லம்மாக்கா, மக்கள் ருக்கு, நாகராஜ் மாமா அனைவரும் வேலை பார்த்தார்கள்.  பின்னர் இராமநாதபுரம் சென்று விட்டார்கள்.

இந்த வீட்டில் தான் அந்தக்காலத்தில் அய்யப்பன் கோவிலுக்கு திண்ணப்ப சேட்டியார் மலை அணிந்து நோன்பாய் இருக்கும்போது அதிகாலை 4:30~ 5:00 மணிக்கெல்லாம் பஜனை நடத்துவார்.  அறியாத வயதில் அங்கு சரண கோஷம் போட்ட சிறுவன் நான்.  பஜனை முடிந்ததும் பெரும்பாலும் கிஸ்மிஸ் பழங்கள் நெய்வேதியமாகி, பிரசாதமாக கிடைக்கும்.

அப்புறம் சபரி மலை யாத்திரை செல்லும்  நாளன்று அனைத்து  சாமிகளும் நகர்வலம் வந்து புறப்படுவார்கள்.  இந்த குரூப்க்கு தலைமை ஆண்டவர் செட் நாயர் என்று முன்பே பார்த்தோம். இதில் ஐஸ் கம்பெனி லண்டன் தி ..திண்ணப்ப   செட்டியாரும் உண்டு.  ஆச்சிகள் மாவு உருண்டை, கைமுறுக்கு மற்றும் மற்ற பட்சணங்கள் பக்தி சிரத்தையுடன் செய்து அந்த தோள் பையில் கட்டி வைத்து இருப்பார்கள்.  மிக மிக பக்தி சிரத்தையுடன் ஐயப்ப சுவாமிகள் சென்று வருவார்கள்.

இந்த வீட்டை விட்டு பின்னர் திண்ணப்ப செட்டியார் குடும்பம் திருச்சுழியார் வளவுக்கு வந்து விட்டது. இப்போது அந்த வீடு காலியாக இருக்கிறது.   அதில் ஒரு மாவட்ட கல்வி அதிகாரி வாடகைக்கு வந்தார். வயதானவர். தனியாக வசித்து வந்தார்.  அவருக்குப் பின் மரகதவள்ளி டீச்சர் குடும்பம் அங்கு குடி வந்தது.  மிகப்பெரிய குடும்பம்.  ஒழுக்கம் நிறை ஆசிரியர் குடும்பம்.  இந்த மரகத வள்ளி டீச்சர் அவர்களின் முதல் interaction நினைவில் உள்ளது.  கொஞ்சம் HARD DISC ல் இருந்து RAM க்கு கொண்டு வருகிறேன்.

வருடம் 1969.  தமிழ் ஆர்வலர் திரு.பூவ நாதன் செட்டியார் ( மளிகை கடை, தி .ஊரணி மேல்கரை, பார்க்குக்கு எதிர்புறம், முன்பே பார்த்தோம்),  தே  பிரித்தோ பள்ளி தமிழ் ஆசிரியர் அருள் சாமி M.A. ஐயா மற்றும் கே.ம்.எஸ் .பாரதி  பண்ணை மற்றும் பலர் சேர்ந்து பாரதி விழா வருடந்தோறும் நடத்தி வந்தார்கள்.   தேவகோட்டையின் அனைத்து பள்ளி மாணவ மாணவியரும் பாரதி பாடல் ஒப்புவிக்கும் போட்டிகளில் கலந்து கொள்வர்.  அப்போது வீட்டின் அருகே இருந்த ஜமீன்தார் பள்ளியில் என் தங்கை மல்லிகா இரண்டாம் வகுப்பு படித்தார்.  அவளது ஆசிரியை இந்த மரகத வள்ளி டீச்சர்.  அந்தக்காலத்தில் பள்ளி மாணவர்களை தங்கள் சொந்தக் குழந்தைகளாகவே பாவித்து ஆசிரியர்கள் நேரம், காலம் பார்க்காமல் உழைத்து வந்தார்கள்.  




இந்த என் தங்கை பாட வேண்டிய பாடல் பாரதியாரின்,  பூனைகளின் வண்ணங்கள் மூலம் ஒருமைப்பாட்டு எண்ணங்கள்  உரைக்கும் பாடல் :


வெள்ளை நிறத்தொரு பூனை
எங்கள் வீட்டில் வளருது கண்டீர்
பிள்ளைகள் பெற்றதப் பூனை
அவை பேருக்கொரு நிறம் ஆகும்

சாம்பல் நிறத்தொரு குட்டி,
கரும் சாந்தின் நிறம் ஓரு குட்டி
பாம்பின் நிறமொரு குட்டி
வெள்ளை பாலின் நிறம் ஓரு குட்டி

எந்த நிறமிருந்தாலும்
அவை யாவும் ஓரே தரம் அன்றோ
இந்த நிறம் சிறிதென்றும்
இஃது ஏற்றம் என்றும் சொல்லலாமோ

வண்ணங்கள் வேற்றுமை பட்டால்
அதில் மானுடர் வேற்றுமை இல்லை
எண்ணங்கள் செய்கைகள் யாவும்
இங்கு யாவர்க்கும் ஒன்றென காணீர்!



இந்த பாடல் பயிற்சி பள்ளியில் முடிந்தது போக மரகத வள்ளி டீச்சரின் வீட்டிலும் தொடர்ந்தது.  அப்போது அவர்கள்,  தி.ராம. சாமி வீட்டுக்கு எதிரே தபால் தந்தி அலுவலகம் பக்கவாட்டில் உள்ள தெருவில் சென்று இடது புறம் திரும்பினால் வரும்.  நான் மூத்த அண்ணன்.  என் தங்கையை கையைப் பிடித்து அழைத்து இந்த வீட்டுக்கு போகிறேன்.  என் தங்கையின் குரல்  கணீர் என்ற பிஞ்சுக்குரல்.   ஒவ்வொரு பாடலின் அடிக்கும், பூனையின் ஒவ்வொரு வண்ணத்துக்கும் அபிநயத்தோடு சொல்லி கொடுக்கிறார் மரகத வள்ளி டீச்சர்.  என் தங்கையும் கற்பூரமாக பற்றிக்கொள்கிறார்.  பாடல் ஒப்புவித்தல்  போட்டி நடந்தது.  என் தங்கை மல்லிகா, முதல் பரிசு பெறுகிறார்.  பெத்தாள் ஆச்சி பெண்கள் பள்ளியில் பாரதி விழா நடைபெற்று  பரிசுகள் வழங்கப்படுகின்றன.  அவற்றுள் முக்கியமான பரிசு பாரதியார் பாடல்கள், படங்களுடன் சிறுவர்கள் கவனத்தை கவரும் வண்ணம்.   உண்மையில் அந்த புத்தகம் தான் எனக்கு தமிழ் மீது நாட்டம் வளர விழுந்த முதல் விதை.  அது பின்  ஆனது கவிதை.  அந்த பாரதியார் பாடல் புத்தகத்தில் பாரதியாரை அழகாக ஒவ்வொரு பக்கத்திலும் பாடலுக்குத் தகுந்த படி சித்திரமாகத் தீட்டி இருப்பார்கள்.  நான் அவற்றை படித்து படித்து என்னை பாரதியாகவே உருவகித்து கொள்ளுவேன்.  சமயங்ககளில் பழைய துணிகளை எடுத்து முண்டாசு கட்டி, முகத்தில் கரியினால் மீசை வரைந்து  தங்கையிடம் பாடல்களை வீராவேசமாக பாடிக்காட்டி பயமுறுத்தியதும் உண்டு.

இந்த மரகத வள்ளி டீச்சர் குடும்பம் சில நாட்களுக்கு பின் அந்த தபால் அலுவலம் பின் பகுதியில் இருந்து இந்த யாசின் டீ கடைக்கு அடுத்து இருந்த திண்ணப்ப செட்டியாரின் வீட்டுக்கு குடி வந்தது.  அந்த மாவட்ட கல்வி அதிகாரி மாற்றலாகி போய்  விட்டார்.  மரகத வள்ளி டீச்சரின் குடும்பம் பெரிய குடும்பம்.

எல்லா வயதிலும் இந்த வீட்டில் ஆட்கள் இருந்தார்கள்.

மருதன்                 :  ஆசிரியர்,  மரகத வள்ளி டீச்சரின் அப்பா
காசி அம்மாள்    :  ஆசிரியர் மருதன் அவர்களின் மனைவி.  சிவகங்கை வட்டாரத்தில் மருது, மருதம் என்ற வயலும் வயல்  சார்ந்த இடங்களையும், மருத  மரத்தையும் குறிக்கும் மருதன் என்ற பெயர் புழக்கத்தில் உண்டு.

நகரத்தார் கந்தன் குடும்பத்தை தந்தம் குடும்பமாக நினைத்து வள்ளி என்கிற கந்தனின் காதலி பெயரை பெண்களுக்கு மட்டும் அன்றி ஆண் மக்களுக்கும் 'வள்ளியப்பன்' என்று சூட்டி மகிழ்வர்.  இது வேறு எந்த பகுதியிலும் காணாத நடைமுறை.  அதுபோலவே சிவகங்கை பகுதியில் சைவம் தழுவிய மற்ற சமூகத்தினர் 'காசி' என்ற பெயரை  ஆண்களுக்கு 'காசி நாதன்'  என்று சூடியதுடன் திருப்தி அடையாது பெண்களுக்கும் 'காசி அம்மாள்'  என்று சூட்டுவார்கள்.  'ராமுத்தாய்'  என்ற பெண் பெயரும்  நம் வட்டாரத்தில் மட்டுமே வழங்கி வருவது தனிச்சிறப்பு.

இந்த தம்பதியின் மக்கள் :

திருமதி. மரகதவள்ளி , ஆசிரியை மற்றும் இவரது கணவர் திரு. வேலு ஆசிரியர் (இவர் எங்கள் பூர்விக பகுதியான வைகை கரை யோரம் உள்ளம் திருப்புவனம் அருகிலமர் பூவந்தி பகுதியை சேர்ந்தவர் )
திருமதி.சந்திரா,  காரைக்குடி CECRI யில் ஸ்டெனோ கிராபர் ஆக பணி புரிந்தார்
திருமதி.கமலா
திருமதி.வசந்தா, சிங்கப்பூர் குடியுரிமையுடன் அங்கேயே வாழ்கிறார்
திரு. ஆசைத்தம்பி, என் வயது, ஒரே செட்,  நான் பிரிட்டோ, இவர் நகரத்தார் பள்ளி,  சிவகங்கையில் B.D.O. ஆக  இருந்து ஒய்வு பெற்றார் என அறிகிறேன்.
திருமதி. ராணி
திரு.காசிநாதன்:   காரைக்குடியில்  டான்சர் ஆக  இருந்து, இயற்கை எய்தி விட்டார்.

இந்தக்குடும்பம் வந்தது, ஒரே கலகலப்பு.  அதிலும் ஆசிரியர், பெரியவர். மருதன் அவர்கள் தேவகோட்டையின்  சக ஆரம்ப, துவக்க, நடுத்தர பள்ளி ஆசிரியர்களால் நன்கு மதிக்கப்படுபவர்.  இதில் இந்த ஆசைத்தம்பி வேறு என் வயது ஒத்தவர் என்பதால் ஒன்றாகப் படிப்போம்.  இன்றும் இந்த மரகத வள்ளி டீச்சர் உடனான உறவு நீடிக்கிறது.  இந்த தொடரை படித்த அன்பர் மூலமாக அவர்களின் தொடர்பு எண்ணை  அறிந்து இரண்டு நாட்களுக்கு முன் இங்கிருந்து தொலை பேசியில் நீண்ட நெடு நேரம் கண்ணீர் மல்க பேசினேன்.  ஆத்மார்த்தமான அனுபவம்.

இதன் இடையை ஒன்றை குறிப்பிட்டே  ஆக வேண்டும்.  ஆம்  மரகத வள்ளி டீச்சரிடம் படித்தது என் தங்கை மல்லிகா தானே.  தொலை பேசியில் பேசும்போது டீச்சர் தங்கை பற்றி விசாரித்தார்.  என்ன சொல்ல.  என் அன்புத்தங்கை இரண்டு ஆண்டுகளுக்கு முன் காலனின் கோரப்பசி தீர்க்க தன்னை கொடுத்து எங்களை இங்கே விட்டு சென்று விட்டாள் .  இந்த தொடர் மூலம் என் அன்புத்தங்கையின் நினைவுகளை உங்களுடன் பகிர்ந்து கொண்டு என் சோகத்தை தணிக்கிறேன்.  அவரின் ஆன்மா அமைதி அடைய இறைஞ்சுகிறேன்.

என் தாய்க் கொடியதனில்
என்தந்தை மடியதனில்
என்னுடன்  பூத்த 'மல்லிகையே'!!

மணம் கமழ்வாய் என்றே
மல்லிகா  எனப் பேர் வைத்தார்
ஆயின்...
மலர் போல் மடிவாய் விரைவாயென
நிலவே நாம் நினைக்கவே யில்லை!
மதுரையின் மண் மணக்க வேண்டி- உன்
சதுரம்தன்னை பதியனிட்டாயோ??

தேவகோட்டை பாரதி மனறத்தில்
நாவரசி நீ நற்றமிழெடுத்து
வெள்ளை நிறத்திலோர் பூனைக்குட்டி எங்கள்
வீட்டில் வளருது எனப்பாடி
பரிசுகள் வென்ற நாள் இன்னும்
பழைமை ஆகவில்லை!

கந்தர் கலி வெண்பா ஒப்புவிக்கும்
கந்தன் விழாப் போட்டிகளில் உன்
கணீர் குரல் கேட்டது நேற்று தானே என்
பாசமலரே!

பாரதிபோல் நான் முண்டாசு கட்டி
கரிக்கோடு மீசை வரைந்து
உன்னிடம் விளையாடிய ஞாபகம்
இன்னமும் இருக்கறது
ஈரமாய் நெஞ்சின் ஓரமாய்...

அண்ணன் வந்து விட்டால்
விண்ணதிரக் குதித்து என்
எண்ணம்போல் விருந்து வைப்பாய்?

பாசமலரே அன்பின்
வாசமலரே!
அமைதி தேடி நீ பறக்கும் வண்ணம்
ஆர் இங்கே உனை ஆக்கினை செய்தார்?

அண்ணனிடம் சொல்லாமல்
அப்படி என்ன அவசரம்?

மற்றவை அடுத்து தொடர்வோம் .....


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தென் கிழக்கில் .. தெக்கத்தியான் (தெற்கத்தியான்) 21. தெக்கணமும் அதிற் சிறந்த திராவிட நல் திருநாடு'

22.தென்னாடும் தென் கிழக்கும்....இந்தோனேசிய வரலாற்று ஆவணங்களில் இருந்து....தென் கிழக்கில் ..

அசை போடும் ..தேவகோட்டை ஞாபகங்கள்-பகுதி: 60