அசை போடும் ..தேவகோட்டை ஞாபகங்கள்-பகுதி: 25


அசை போடும் ..தேவகோட்டை ஞாபகங்கள்
கவிக்கிறுக்கன் முத்துமணி
பகுதி: 25
10-11-2017

சிவன் கோவில் முச்சந்தி அய்யர் முக்குக் கடையில்  இருந்து தெற்கு வாக்கில் வட்டாணம் ரோடு பயணம் தொடங்கினோம் .  ஒத்தக்கடை வரை வீடு வீடாக முடிந்த வரை நண்பர்களை, நபர்களை விசிட் அடித்து முடித்தோம்.  இப்போ இதே முக்குக்கடையில் இருந்து வடக்கு நோக்கி (கடையின் வலது புறம் ) ஒரு எட்டு நடப்போமா? 

நகரச்சிவன் கோவில் பின்புறம் இருந்து இந்த முக்கு கடை முனையில் இருந்து புறப்படும் கண்ட தேவி ரோடு கருதா ஊரணி கடந்து தேவகோட்டையின் வட எல்லையான புதூர் அக்ரஹாரம் நடந்து, பனிப்புழாவயல் செல்லும் சாலையை வெட்டி, தாணிச்சா ஊரணி சாலையை ஒட்டி கண்ட தேவி சொர்ண முத்து ஈஸ்வரர் கோவில் வரை செல்லும்.    பாரம்பரியம் மிகு கண்ட தேவி  என்ற பெயர் இதிகாச கால இராமாயணத்தோடு  தொடர்பு படுத்தி சொல்வோரும் உண்டு .




மாய மானாகி வந்த மாரீசன், ராமனுக்கு போக்குக்காட்டி வெகு தொலைவு அழைத்துச்செல்ல , காவலுக்கு நின்ற இலக்குவனை சீதா தேவி அனுப்பித் தனித்து இருந்த வேளையைப்  பயன்படுத்தி, தங்கை சொல்லால் பத்து தலையும் பித்துப் பிடித்த இராவணன்,  சீதா தேவியைக் கவர்ந்து வான் மார்க்கமாக இலங்காபுரி நோக்கி பயணம் ஆகின்றான்.   வான் வெளியில் இந்தக் காட்சி கண்டு பரபரத்த 'சடாயு' எனும்  கழுகு வடிவ பறவை தன உயிர்தனை கொடுத்து இராவணனுடன் போர் புரிந்தது.  எப்படியும் ஜானகி தேவியைக் காப்பாற்றி விட வேண்டும் என்ற எண்ணத்துடன்.  உக்கிரமான இந்தப்போர் நடந்த இடம் இரவு சேரி என்று என் மதிப்பிற்குரிய ஆசிரியர் சைவப்பிரகாச வித்தியா சாலையின் பெரிய சார் (திரு.இராம கிருட்டிணன் அவர்கள் ) சொல்ல கேட்டு இருக்கிறேன் . இந்த உக்கிரமான சண்டையை கம்பன் :

'உத்தமன் தேவியை, உலகொடு ஓங்கு தேர்
வைத்தனை! ஏகுவது எங்கு? வானினோடு
இத்தனை திசையையும் மறைப்பென், ஈண்டு' எனா,
பத்திரச் சிறைகளை விரிக்கும் பண்பினான்;


இடிப்பு ஒத்த முழக்கின், இருஞ் சிறை வீசி எற்றி,
முடிப் பத்திகளைப் படி இட்டு, முழங்கு துண்டம்
கடிப்பக் கடிது உற்றவன், காண்தகும் நீண்ட வீணைக்
கொடிப் பற்றி ஒடித்து, உயர் வானவர் ஆசி கொண்டான்


என்று பாடுவார்.  நம்ம பேச்சு வழக்கில் 'சிரை'  என்ற வார்த்தையை  வெட்டுவது என்று பொருள்பட பயன் படுத்துகிறோம்.  என்ன 'சிரைக்க' சென்றாயா என்று சொல்வதை கேட்டு இருக்கிறறோம்.  இந்த இராவண-சடாயு யுத்தத்தில் அசுர பலத்துடன் சடாயு மோதுகிறார்.  இராவணன் பார்த்தான்.  அவனது யுத்த உத்தி (Strategy ) யோசிக்கிறது.  ... வான் வெளியில் பறவை இனம் பலமாக இருக்கும், இந்த சடாயு பறவை இனம்.  இவனை வெல்ல வேண்டும் என்றால் இவன் பலத்தை முதலில் குலைக்க வேண்டும்.  வானில் இவர் பலம் இவரது இறக்கைகள்.  எனவே 'சிரைப்போம்' இந்த இறகுகளை என்று ஜடாயுவின் இறகுகளை 'சிரைத்தான்'  இராவணன்.  இறகுகள் சிரைக்கப் பட்ட இடம் ,  'இறகு சிரை'.  இந்த 'இறகு சிரை' தான் மருவி 'இரவு சேரி ' ஆனது  என்று பெரிய சார் நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது சொன்ன நினைவு இருக்கிறது.

மாய மானால் மதி மங்கச் செய்யப் பட்டு விட்டோம் என்று உணர்ந்து திரும்பிய இராம இலக்குவர்,  மிதிலை மகளைக்  காணா கவலை கொண்டு தேடும் பொது தேர்ச்சக்கரத்தடம் பார்த்து பின் தொடர்ந்து வருகின்றனர்.  இந்த இறகு சிரை மண்ணிலே விழுந்து கிடந்த அணி மணிகளை கண்ட  அயோத்தி இளவல், பல பேர் சேர்ந்து போர் புரிந்து இருக்க வேண்டும் என்று சொல்கிறார்.

'தோள் அணிக் குலம் பல உள; குண்டலத் தொகுதி
வாள் இமைப்பன பல உள; மணி முடி பலவால்;
நாள் அனைத்தையும் கடந்தனன், தமியன், நம் தாதை;
யாளி போல்பவர் பலர் உளர் பொருதனர்; இளையோய்!

ஆயின் இலக்குவன் கண்டு பிடித்து விடுகிறார். நம் முத்துச்சரம் கவர்ந்தவன், பத்துச் சிரம் கொண்ட இராவணன் என்று :

திருவின் நாயகன் உரைசெய, சுமித்திரை சிங்கம்,
'தருவின் நீளிய தோள் பல, தலை பல, என்றால்
பொருது தாதையை இத்தனை நெறிக் கொடு போனான்
ஒருவனே, அவன் இராவணன் ஆம்' என உரைத்தான்.

தமக்காக உயிர் நீத்த  சடாயுவின் ஆன்ம சாந்திக்காக இராம இலக்குவர் இறுதிக்கடமைகள்  ஆற்றி பிதுர்க்கடன் செய்தனர்.  அந்தக் காட்சிகள் கம்பனின் வரிகளில் :


இந்தனம் எனைய என்ன, கார் அகில் ஈட்டத்தோடும்
சந்தனம் குவித்து, வேண்டும் தருப்பையும் திருத்தி, பூவும்
சிந்தினன், மணலின் வேதி தீது அற இயற்றி, தெண் நீர்
தந்தனன்; தாதை தன்னைத் தடக் கையான் எடுத்துச் சார்வான்

ஏந்தினன் இரு கைதன்னால்; ஏற்றினன் ஈமம்தன்மேல்;
சாந்தொடு மலரும் நீரும் சொரிந்தனன்; தலையின் சாரல்
காந்து எரி கஞல மூட்டி, கடன்முறை கடவாவண்ணம்
நேர்ந்தனன் - நிரம்பும் நல் நூல் மந்திர நெறியின் வல்லான்

இராமர் பிதுர்க்கடன் செய்து முடிக்கவும் சடாயுவின் ஆன்மா பரி பூரண நிலை அடைந்து லிங்க வடிவம் ஆக நிலைத்தது.  சிறகுகள் இல்லாததால் 'சிறகிலி நாதர்' என்று இந்த இறைவன் அழைக்கப்பட்டார்.  'தேவியை கண்டேன்'  என்றதால், இந்த இடம் , 'கண்ட தேவி'  ஆகிற்று.  கண்டதேவி கோவில் பற்றிய மற்ற தகவல்கள் :

ஊர்:கண்டதேவி
இறைவன்:சொர்ணமூர்த்தீஸ்வரர், சிறகிலிநாதர்
இறைவி:பெரியநாயகி , பிருஹத்நாயகி
பிற சன்னதிகள்:  அதிகாரநந்தி, சின்ன, பெரிய கருப்பர்கள், அனுக்கை விநாயகர், பைரவர், அண்ணாமலையார், மகாலட்சுமி, சுப்ரமண்யர்-வள்ளி, தெய்வானை, சோமாஸ்கந்தர்,  தண்டபாணி, காசிவிஸ்வநாதர்-விசாலாட்சி, நடரஜர்-சிவகாமி,                                       

ஐந்து நிலை ராஜகோபுரம்

தீர்தம் : சடாயு திருக்குளம்           


நான் வாழும் இந்தோனேசியாவில் இராமாயணத்துக்கும்,  இராமாயண பாத்திரங்களுக்கும் இன்றும் மரியாதை உண்டு.  




என்ன ஒரு ஆச்சரியம் என்றால், அதிகமான வடமொழிச்சொற்கள் 'பாஷா  இந்தோனேசியா' என்று அழைக்கப்படும் இந்தோனேசிய மொழியில் இருக்கின்ற போதும், தூய, தொன்மையான தமிழ்  சொற்கள் இன்னும் வழக்கத்தில்  உள்ளது.  




ஆம்  இந்தோனேசிய மொழயில் 'சிரை'  என்றால் வெட்டி விடுதல் என்று பொருள்.  பொதுவாக விவாகரத்து பற்றி குறிப்பிடும் பொது 'சிரை' செய்து ஆகி விட்டது என்று சொல்வார்கள்.


சிவன் கோவில் பின்புறம் ஆரம்பித்து கண்ட  தேவி சென்று சேர்வோம் என்று தான் இன்றைய தொடரை ஆரம்பித்தேன்.   என்னை அறியாமல் மனம் நேராக கண்ட தேவி சென்று அடைந்தது.  இராமாயண காட்சிகள் மனதில் ஓடின.  தன்னை மறந்து கம்பனில் மூழ்கி உங்களை கண்ட தேவிக்கு அழைத்துச் சென்று விட்டேன்.  மன்னிக்கவும்.


இப்போ திரும்ப சிவன் கோவில் முக்கு  கடைக்கு வந்திருவோம், மீண்டும் பயணத்தை தொடர

 சிவன் கோவில் பின்புறம் கண்டதேவி ரோடு ஆரம்பிக்கும்.  தற்போது கோவிலைச் சுற்றி ஆள்  உயரத்துக்கு கீழே முண்டுக்கல் போட்டு சிமெண்ட் கிராதிகள்  உள்ள சுற்று சுவர் 1968~69 சமயம் குடமுழுக்கு நடை பெற்ற சமயம் எழுப்பப் பட்டது.  கோவிலின் தென் கிழக்கு மூலையில் ஒரு வாடகை சைக்கிள் கடை இருந்தது.  முன்பு பார்த்த திருச்சுழியார் வீட்டு செட்டியார் குச்சிக் கம்பெனியில் கந்தன் என்பவர் பணியாற்றி வந்தார்.  அவர்தான் செட்டியாருக்கு ஆல் இன் ஆல் அழகு ராஜா.  இந்த கந்தன் அவர்களின் மைத்துனர் இந்த சைக்கிள் கடையை நடத்தி வந்தார்.  அப்புறம் பல பேர் கை  மாறியது. 

கண்டதேவி ரோடு ஆரம்பிக்கும் இடத்தில் நகர சிவன் நேர் பின்னே இருப்பது 'தென்ன மரத்தார் வீடு.  இந்த வீட்டில் தான் திருச்சுழியார் வீட்டு சுந்தரய்யா மகன் காசி அண்ணன் பெண் எடுத்தது.  காசி அண்ணன்  மகள் சுமதி சிறு குழந்தையாக இருந்த போது  நான் இங்கு அழைத்து வந்து விட்டுப்போய் இருக்கிறேன்.  இந்த சுமதியின் சித்தி திருமதி.காவேரி என்னுடன் திருவேங்கடமுடையான் பள்ளியில் வகுப்புத்தோழி.  பின்னர் மீண்டும் சேவுகன் அண்ணாமலை கல்லூரியில் வணிகவியல் இளநிலை ஒன்றாக பயின்றோம்.   2015 ஆம்  ஆண்டு  மே மாதம் 1ஆம் தேதி,  37 ஆண்டுகளுக்குப் பின் கல்லூரி தோழர்கள் அனைவரும் ஓன்று கூடி ஆசிரியர்களுடன் பழைய நினைவுகளை பரிமாறிக்கொண்டோம்.  



அப்போது, அந்த நிகழ்வுக்கு முதல் நாள் திருமதி காவேரி அவர்கள், வகுப்புத்தோழர்கள் அனைவரையும் தனது இல்லத்துக்கு அழைத்து உபசரித்தார்கள்.  



மறக்க முடியாத நிகழ்வு.  தோழிக்கு இந்த தொடர் மூலம் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். 


நாங்கள் 8ஆம்  வகுப்பு பயின்ற போது,  எங்கள்  ஆசிரியர் திரு.தாமஸ் அவர்கள், அப்போது வெற்றிகரமாக திரையில் ஓடிக் கொண்டு இருந்த அகத்தியர் படப்பாடல் ஆன  ' நடந்தால் வாழி ,,,காவேரி '  என்கிற  பாடலைப் பாடி தன்  மாணவி காவேரியை அழைப்பார்.           

இந்த தென்னை மரத்தார்  வீட்டில் இருந்து திரு. 'ராசி' லெட்சுமணன் எனஅனைவராலும் அறியப்பட்டவர்.  நகர் மன்ற தேர்தலில் ஒரு முறை போட்டி இட்டார் என்று நினைக்கிறேன்.  இந்த தென்னை மரத்தார் வீட்டுக்கு அடுத்து ஒரு மாவு மில் இருந்த நினைவு.  அடுத்து ஒரு பெரிய வீடு. முன்னால் பூவரச  மரம் இருக்கும்.  அடுத்து ஒரு சந்து வந்து விடும்.  அந்த சந்து நேராக சாத்திரத்தார் வீதியில் நம்ம பெரிய ஆணா, சின்ன ஆணா  வீட்டுக்கும், சேவுகன் அண்ணாமலை செட்டியார் வீட்டுக்கும் இடையில் போய் நிற்கும்.  இந்த இடம் சிவன் கோவிலின் தெற்கும் மேற்கும் சந்திக்கும் இடம்.  ஒரு தொன்மையான விளக்குத்தூண் அடிப்பகுதி சிமெண்ட் ரௌண்டாக கட்டப்பட்டு அந்த இடம் ஒரு ரவுண்டானா போல இருக்கும்.  இருக்கும் நேர் எதிர் வீட்டில் தான் அந்த மதிப்பிற்குரிய திருவேங்கடமுடையான் பள்ளியின் ஆசிரியர் குடும்பம் திரு.சற்குணம் அவர்கள் வாழ்ந்து வந்தார்கள்.  தம்பி எபினேசர் மனோகரன் சிறு குழந்தையாக இந்த வீட்டு வாசல் படியில் அமர்ந்து இருந்த காட்சி இன்னும் மனக்கண்ணில் தெரிகிறது.  தவமாய் தவமிருந்து பெற்ற  மகன் இவர்.

இந்த இடத்தில இரண்டு, மூன்று உயர்ந்து ஓங்கி வளர்ந்த பன்னீர் மரங்கள் நின்று இருக்கும்.  ஆஹா.. பனி பொழியும் இளங்காலை  வேளைகளில்,  இலேசாக தூறல் போட்டு வானம் மந்தகாசப் புன்னகை புரிகின்ற பூபாள பொழுதுகளில், இந்த மரங்கள் 'குப்' பென்று  பூத்துகுலுங்கி மணம்  பரப்பும் பாருங்கள்.. அந்த சுகந்தம் ஆத்மாவின் உள்ளே வரை வாசம் பரப்பும்.  நீண்ட காம்புகள் கொண்ட அந்த பன்னீர் பூக்கள் மண்ணில் உதிர்ந்து கிடக்கும்.  அதை எடுத்து ஊதலாக ஊதி ஒலி  எழுப்பிய நினைவுகள் காது  மடல்களில் சன்னமாய்... சின்னமாய் ...

அப்புறம் அந்தக்காலத்தில் மிக மாடர்ன் ஆக  கட்டப்பட்ட இரண்டு வீடுகள் .( .மு.வீடு?) .  யாரும் ஆள் இருக்க மாட்டார்கள், வேலை ஆட்கள் தவிர.,, விசேட தினங்கள் தவிர...  ஒரு வீட்டின் சுவரில் அழகாக மான் படம் கோட்டோவியமாக வரைந்து இருக்கும்.   அப்படியே போய்க்கொண்டே இருந்தால் எதிர் வரிசையில் 'மணி ஏஜென்சிஸ்'  என்ற சிமெண்ட் விநியோக அலுவலகம்.   ம்...வந்தாச்சு .. நம்ம கருதா ஊரணி....


இது கொஞ்சம் இருந்து பார்த்து விட்டு போக வேண்டிய இடம்.  அதனால் அடுத்த பகுதியில்  பார்க்கலாமே……

கருத்துகள்

  1. சைக்கிள் கடை கை மாறிவிட்டது காய் மாறிவிட்டது எனவும் பழைய மாணவர்கள் சந்திப்பு 2105 எனவுள்ளது
    கம்ப ராமாயணம்
    சூப்பர் வெட்டிய இறகு சேர்ந்த இடம் இறகு சேரி
    என ஒரு கதையுள்ளது
    கம்பனைத் தொட்டுச் செல்லும் விதம் இலக்கிய ஆளுமை தெரிகிறது பலே பலே

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தென் கிழக்கில் .. தெக்கத்தியான் (தெற்கத்தியான்) 21. தெக்கணமும் அதிற் சிறந்த திராவிட நல் திருநாடு'

22.தென்னாடும் தென் கிழக்கும்....இந்தோனேசிய வரலாற்று ஆவணங்களில் இருந்து....தென் கிழக்கில் ..

அசை போடும் ..தேவகோட்டை ஞாபகங்கள்-பகுதி: 60