அசை போடும் ..தேவகோட்டை ஞாபகங்கள்-பகுதி: 26


அசை போடும் ..தேவகோட்டை ஞாபகங்கள்
கவிக்கிறுக்கன் முத்துமணி
பகுதி: 26
12-11-2017

ஒருவழியாக கருதா ஊரணிக்கரை  வந்து சேர்ந்து விட்டோம்.  இப்போது தான் நினைவு வருகிறது,  சிவன் கோவில் சுற்றியுள்ள முக்கிய வீடுகளை, மக்களை பார்க்காமல் வந்து விட்டோமே என்று !!!!. ஆனால் பரவாயில்லை. இந்த கண்ட தேவி ரோடு பயணத்தை முழுவதுமாக முடித்து விட்டு பின்னர் அங்கு செல்வோம்.  நாம்  எல்லோரும் ஒரு குழுவாக பயணப்படுவதால்,  உங்கள் முழு சம்மதம் இன்றி எங்கும் செல்ல விரும்பவில்லை.  அதனால் மீண்டும் மீண்டும் கேட்டுக் கொள்கிறேன்.  கொல்வது போல் தெரிந்தால்,   அருள் கூர்ந்து தெரிவித்து விடுங்கள். ..

இப்போ கண்டதேவி ரோடில் மணி ஏஜென்சிஸ் முன் நிற்கிறோம்.  இதற்கு எதிர் வீட்டில் (நகரத்தார் வீடு தான் ) ஒரு செட்டியார் நீண்ட சுருள் சுருளான முடி வைத்து பிடறி வரை அழகாக வைத்து இருப்பார் .அங்கு தயிர் விற்பார்கள்.  நல்ல சுவையான கெட்டித்தயிர் கிடைக்கும்.  இதற்கு அடுத்த கட்டிடத்தில் நாங்கள் சிறிது காலம் ஐஸ் கம்பெனி நடத்தி வந்தோம்.  இன்னும் கொஞ்சம் தெற்கே வந்தால் 'மனோன்மணி' சப்பாத்தி கடை இருக்கும்.  மாலை வேளைகளில் சுவையான சப்பாத்தி குருமா வாசனை ஆளை தூக்கும்.  இதற்கு அடுத்து ஒரு சந்து... சந்தை ஒட்டினாற் போல கருதா ஊரணி பிள்ளையார் கோவில்.  கோவிலின் இரண்டு பக்கமும் Y வடிவில் வீதிகள் கண்டதேவி ரோடில் இருந்து புறப்பட்டு நண்பர்கள் Y .சிதம்பரம் ( போட்டோ கிராபர் ஏகப்பன் அவர்கள் மகன் ), மற்றும் முருகப்பன் அவர்கள் வீட்டு வாசலில் ஒன்று சேரும்.

அடுத்து எங்கள் மறக்க முடியாத பள்ளி,  சைவப்பிரகாச வித்தியாசாலை.   பள்ளி  பற்றி நிறைய கதைக்க வேண்டும்,  ஆகவே இப்போது ஏரியா விசிட் செய்வோம்.  மணி ஏஜென்சிஸ் முடிந்த உடன் அப்படியே இடது பக்கமாக ஒரு சின்ன சாலை முளைக்கும்.  அதில் உயரமான திண்ணை மேல் கடைகள்.  ஒரு டைலர் கடை, (மருது பாண்டி டைலர்...அவர் கடையில் ஒரு மண் பானையில் குடி தண்ணீர் வைத்து இருப்பார்.  அடிக்கடி சென்று குடிப்பது... ஒன்றும் சொல்ல மாட்டார்.  எல்லாம் பூங்காவின் பைப்பில் வரும் குடி நீர் தான். அப்ப ஏது, மினரல் வாட்டர். தண்ணீர் எல்லாம்  அதுவும் தாகத்துக்கு விலைக்கு என்பது, மிகப்பெரிய பாவமாக நினைத்து இருந்து இருப்பார்கள்.  அப்போது வாழ்ந்த அப்பாவி மக்கள்..

அப்புறம் வீராச்சாமி பிள்ளை மளிகைக்கடை, அப்புறம் ஒரு முடிதிருத்தும் நிலையம்.  அப்போது திரைக்கு வந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் படமான 'விடி வெள்ளி'  புகழில் 'விடி வெள்ளி' முடி திருத்தகம் என்று பெயர் பலகையுடன்.. இன்னும் கொஞ்சம் போனால் அப்படியே கருதா ஊரணி தென் கரை வட்ட வடிவில்.. ஒரு லாண்டரி இருந்தது.  இன்னும் போனால், ஊரணி ஒரு வட்டமாக வளைந்து சத்திரத்தார் வீதி கடந்து, மைனர் வீதி சேரும் இடத்தில் சின்ன மைனர் வீட்டுப்பக்கம் சேர்க்கும்.  இந்த இடத்தில் தான் ஒரு படிப்பகம் இருந்தது.  இதற்கு முன், எண்ணெய்க்கடை. அந்த கடைப்பையன், கமால் பாட்சா என்னுடன் படித்தார்.  அந்த வீதி அப்படியே வளைந்து மேல்கரையில் போய் நிற்கும்.  அதில் ஊரணியில் குளக்கால் ஆரம்பிக்கும். அது, மாந்தோப்பு வீதியை வெட்டி, சரஸ்வதி தியேட்டரின் பின்பக்கம் போய் சேரும்.  அதன் வழியாக சரஸ்வதி தியேட்டரின் டிக்கெட் கௌண்டருக்குச் சென்று சேரலாம்.  அந்த குளக்கால் சுவரில், பெரிய எழுத்துக்களில்,  திருமுருக கிருபானந்த வாரியார் இந்த வாரம் முதல் எழுதுகிறார் என்ற குமுதம் பத்திரிகையின் விளம்பரம் கண்ணில் இப்போது தெரிகிறது. கதவைத் திறந்து காற்று வாங்காத உண்மை தமிழ் வள்ளல்களின் கட்டுரைகள் வந்த காலம் அது.. 

அப்படியே மேல்கரையில் தொடர்ந்தால், ஒரு வண்டிப்பட்டறை, ஒரு விறகுக்கடை (இப்போ எதனாச்சும் விறகுக்கடை இருக்கிறதா?  யாரோ சொன்னார்கள், விறகு எரிப்பதை நிறுத்திய  பின்னர்தான், கொசு இவ்வளவு பெருகி விட்டது என்று விபரம் தெரிந்தவர்கள் சொல்லுங்கள்), அப்புறம் ஒரு பிள்ளையார் கோவில், ஒரு ரைஸ் மில், அதை ஒட்டி ஒரு கூத்துமேடை (நாடக மேடை என்று சொல்வது கொஞ்சம் அந்நியமாகப் படுகிறது). நமது பகுதியில் நாடகம் என்றாலே மதுரை நாடகநடிகர் சங்கத்தினருடைய சங்கரதாஸ் சுவாமிகளின் நாடகங்களையே குறிக்கும்.

இந்த மேடை கூத்து மேடை மட்டுமன்த்று ! நிறைய அரசியல் பேச்சாளர்களைக் கண்ட மேடை இது.   .தி.மு..வின் நட்சத்திரப் பேச்சாளர், பி.டி.சரஸ்வதி, சுகாதாரத்துறை அமைச்சராய் இருந்த முன்னாள் நடிகர் சௌந்தர்ராஜன் மற்றும் பலரின் பேச்சுக்களை நான் இந்த மேடையில் கண்டு ரசித்து இருக்கிறேன்.  



பல கூத்துக்களை இந்த மேடையில் பார்த்து இருக்கிறேன், நாடக நடிகர்கள் மணிமுத்து பாகவதர், எம்.எம்.மாரியப்பா ஆர்.வி.உடையப்பா, திருப்பத்தூர் பாக்யலட்சுமி, மற்றும் சிரிப்பு நடிகர்களான தோப்பூர் கோவிந்தன், கழுகு மலை சுப்பையா, அம்பலத்தாடி ராமையா, எம்.சி.சொக்கலிங்கம் ஆகியோரின் நாடகங்களை ரசித்து இருக்கிறேன்.  அதிலும், ஆர்.வி,உடையப்பா தமிழக அரசின்1980~1981 ஆம் ஆண்டுக்கான கலைமாமணி பரிசினை பெற்றவர்.  இவர் நடித்து இந்த மேடையில் நடந்த அரிச்சந்திர மயான காண்டத்தின் சுடுகாடு காட்சி அமைப்புகள் அந்தக் காலத்திலேயே ஆச்சரியமூட்டும் வகையில் இருக்கும்.

அப்படியே ஊரணியின் வடகரை வந்தால் பிரமாண்டமான சத்திரத்தார் வீடு,  அடுத்து தாலுகா காவல் நிலையம். அப்புறம்,  பாங்க் ஆப் மதுரை கருதா ஊரணி கிளை.   இப்படியே ஊரணியை ஒரு சுற்று சுற்றி, கீழ்கரைக்கு, கண்டதேவி ரோடுக்கே வந்து விட்டோம்.

இப்போ திரும்ப முன்பு ரௌண்ட் ஆரம்பித்த பூங்கா நோக்கிச் செல்வோம்.  ஊரணிக்கரை ஓரமாக முழுவதும் கடைகள்தான்.  காளிமுத்து நயா பைசா கடை, அப்புறம் சுதர்சன் அவர்களின் தந்தையார் அழகர்சாமி அவர்கள் நடத்தி வந்த சைக்கிள் வாடகைக் கடை மற்றும் டீக்கடை.  இவரது புதல்வர்கள், சுதர்சனம், ரவி மற்றும் பாலு மனதில் ஞாபகத்தில் இதில் ரவி எனது பள்ளித்தோழன்.  ஒரு வகையில் எனக்கு உறவு முறை கூடஅப்புறம் காந்தி செட்டியார் காய்கறிக்கடை.  அடுத்து கிழக்குப்படித்துறை வந்து விடும்.  பக்கத்தில் எனது அன்பு நண்பன், முத்துசாமியின் கடை.  இந்த முத்துசாமி எனக்கு இளையவர்,  எல்லாம் சைவப்பிரகாச வித்தியாசாலை பள்ளியின் மாணவர்கள். இவர் எனக்கு ஒரு வருடம் கீழே,, இவரது அண்ணன் கணேசன் என்பவர் எனக்கு ஒரு வருடம் மூத்தவர்.  நான் நான்காம் வகுப்பு,  இந்த கணேசன் 5ஆம் வகுப்பு,  அவரின் தம்பி முத்துசாமி 2 ஆம் வகுப்பு.  தற்போது இந்த முத்துசாமி, ஃப்ரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிசில் பணிபுரிகிறார்.  அவ்வப்போது நாங்கள் தொலைபேசி மூலம் தொடர்பில் இருக்கிறோம்.

அப்புறம் கார்மேகம் டீக்கடை..முருகன் பூக்கடை,,,,மணியாபிள்ளை சைக்கிள் வாடகை கம்பெனி. இந்த மணியாபிள்ளையின் புதல்வர்கள், திரு.சோமசுந்தரம், முன்னாள் சரஸ்வதி டாக்கீஸ் மேலாளர், திரு.சுப்பு என்ற சுப்பிரமணியன் ஆசிரியர், சந்திரசேகரன். இந்த சகோதரர்களின் தங்கை விஜி என் தங்கை மல்லிகாவின் வகுப்புத்தோழி.

இந்தகடைகளுக்கு  முன்னால்,  பிள்ளையார் கோவிலுக்குப் பின்னால் ,கருதா ஊரணி கீழ் கரையின் முன்னால் ஒரு முக்கோண வடிவில் அருமையான பூங்கா .'  அந்தக்காலத்தில் தேவகோட்டை நகராட்சியினால் பல பூங்காக்கள் உருவாக்கப்பட்டு ( 50, 60 ஆண்டுகளுக்கு முன்பே ) பராமரிக்கப்பட்டு வந்தன.

ஆர்ச் எதிரில் உள்ள தியாகிகள் ரோடு பூங்கா
திண்ணன் செட்டியார் ஊரணி அருகில் உள்ள காந்தி பார்க்
கருதா ஊரணி பார்க்
வெள்ளையன் ஊரணி காய்கறி மார்கெட் முன்பாக.


இவை எனக்குத் தெரிந்த தேவகோட்டையின் பூங்காக்கள். விட்டுப் போய் இருந்தால் தெரிந்தவர்கள் பின்னூட்டம் கொடுக்கவும்.  இந்த பூங்காக்கள், தேவகோட்டை நகராட்சியின் கிளை அலுவலகங்கங்கள் போல செயல்பட்டன.  முக்கியமாக, அந்தந்தப் பகுதியின் சுகாதாரத் தொழிலாளர்கள் (ROLL-CALL), வருகைப் பதிவு செய்யும் இடமாகவும்,   தளவாடச்சாமான்கள் வைத்திருக்கும் இடமாகவும் இருந்தது.   நகராட்சியின் சுகாதார அதிகாரி (HEALTH INSPECTOR) யின் கீழ், நகரின் பகுதி வாரியாக கண்காணிப்பாளர்கள் உதவி அலுவலர்களாகப் பணி புரிந்தனர்.  இவர்கள் வசம் இந்த பூங்காக்களின் பராமரிப்பும் இருந்தது


எல்லாப் பூங்காக்களிலும்,  ஒரு வானொலி அறை இருந்தது.  அறையில், மூன்று அல்லது நான்கு  ஒலி பெருக்கிகள் நிறுவப்பட்டு இருக்கும்.  சிமிண்டு பெஞ்சுகள்,  மலர்ச்செடிகள் இருந்தன. மாலை 6 மணிக்கு நகராட்சியின் அலுவலர் இந்த அறையின் வானொலிப்பெட்டியை போட்டு விடுவார்.  இந்த வானொலியைக் கேட்பதற்கு  என்றே ஒரு கூட்டம் கூடும்.   அதிலும் ஆர்ச், தியாகிகள் பூங்காவில்  இரவில் அகில இந்திய வானொலியின் செய்திகள் கேட்க ஒரு கூட்டம் சேரும்.   இரவு 7 மணிக்கு ஆகாசவாணியில் திருமதி.சரோஜ் நாராயண்சாமியின் கம்பீரக்குரலில் செய்திகளைக் கேட்பதற்கு ஒரு திரளான கூட்டத்தைப் பார்த்து இருக்கிறேன்.  


இது போல நகராட்சியின் அனைத்து பூங்காக்களிலும் வானொலி உண்டு. கடைசியாக 1977 பொதுத்தேர்தலில்,அனைத்து கட்சிகளுக்கும் வானொலியில் ஒரு அரை மணி நேரம் பிரச்சாரத்துக்கு என வழங்கப்பட்ட நேரத்தில் தி.ஊரணி பூங்காவில் கட்சித் தலைவர்களின் தேர்தல் பிரச்சாரம் மற்றும் தேர்தல் அறிக்கைகளைக் கேட்ட நினைவுகளை இங்கே பதிவிடுகிறேன்.  அப்போது எந்த கட்சிக்கும் தனி பிரச்சார தொலைக்காட்சி நிலையங்கள் கிடையாது.  புரட்சித்தலைவர், தனது குரலில், 

ஆட்சிக்கு வருபவர்கள்,  நா நயம் உள்ளவர்களாக இருந்தால் மட்டும் போதாது..    நாணயம் உள்ளவர்களாகவும் இருக்க வேண்டும்

என்று பேசிய வரிகள் நினைவில் இருக்கின்றது  சரிசாரி ட்ராக் மாறி எங்கோ போகிறோம்.. வண்டியை லகான் பிடித்து, கருதா ஊரணிக்குத் திருப்புவோம். மறுபடியும்  பூங்காவுக்கு எதிர்புறம் உள்ள பிள்ளையார் கோவில் பின்புறம் கண்டதேவி ரோடுக்கு வருவோம்.  இந்தக் கோவிலின் அடுத்து எனது கல்விக்கோவிலான சைவப்பிரகாச வித்தியாசாலை.  இங்கு படித்தது இரண்டு வருடங்கள்தான்.  ஆனால் என்றும் மறக்கவியலாத நினைவலைகள். இப்போது அவசர கதியில் பள்ளிக்குள் நுழைய வேண்டாம்.  பின்னர் அடுத்த பகுதியில் பள்ளி உள்ளே செல்வோம்.  பள்ளிக்கு நேர் எதிரே ஒரு பெட்டிக்கடை.  மரத்தினால் செய்யப்பட்ட பெட்டிபோன்ற கடை.  அவர் பெயர் இராமையா சேர்வை (நன்றி...முத்து சாமி).  


அவரது மகன் கணேசன் என் வகுப்புத்தோழன் கூட.  பால்காவடியார் வீதி வழியாக சம்பந்தர் தெருவில் கடைசியில் திருவேங்கடமுடையான் பள்ளி ஆசிரியர் பாண்டி வாத்தியார் குடியிருந்த இல்லத்துக்கு எதிரில் இந்த கணேசன் அவர்களின் வீடு.  இவர் சர்வேயர் ஆகப்பணி புரிகிறார் என்று கேள்விப்பட்டேன்.  இவரது தொடர்பு எண் தெரிந்தவர்கள் தகவல் கொடுத்தால் நன்றியுள்ளவனாக இருப்பேன்.

இந்தக்கடையை ஒட்டியது போல இருக்கும் வீடு அன்பு நண்பர் கிட்டு அவர்களின் இல்லம்.  தற்போது சென்னையில் வசிக்கிறார்.  10 வருடங்களுக்கு  முன் தொலை பேசியில் பேசினேன்.  மயிலாப்பூரில் கிட்டு அவர்களின் புதல்வரை நண்பர் செந்தில்நாதன் மூலமாகச் சந்தித்தேன்.  இந்த கிட்டு திருவேங்கடமுடையான் பள்ளியில் எனக்கு ஜுனியர்.  கரூரார் வீடு இந்த கிட்டு அவர்களுக்கு மாமா வீடு என்று நினைக்கிறேன்.  கிட்டு அவர்களின் தந்தையார் ஒரு கலா ரசிகர். எந்த ஊரில் இசை நாடகம் நடந்தாலும் காணச்சென்று விடுவார்.  அதனால் இவரை கூத்து செட்டியார் என்றழைப்பார்கள்.

இதை அடுத்து (வீட்டின் வலது புறம்) பெரியாணா, சின்னாணா குடும்பத்தினரால் பராமரிக்கப்பட்டு வரும் குருபூஜை மடம்.  அங்கு தண்ணீர்ப்பந்தலும் நடந்தது.  தாகம் தீர்ப்பது பெரிய தர்மம் என்று அவரது முன்னோர்கள் இந்தக்கட்டளையினை ஏற்படுத்தி இருந்திருக்க வேண்டும்.  இன்னும் வடக்கு நோக்கி நடந்தோமானல், உடுப்பி ஹோட்டல்.  சுத்தமான சைவ சாப்பாடு கிடைக்கும் உணவு விடுதி. அப்புறம் திரு.வாசுக்கோனார் தையல் கடை.  இந்த வாசுக்கோனார் எனக்குத் தாத்தா முறை வேண்டும்.  எனது சித்தப்பா திரு.நல்லையா அவர்களின் மனைவி என் அன்புத்தாய் இவரது மகள்.  பெரிய குடும்பம் இவருடையது, புதூர் அக்ரஹாரத்தில் இருந்தது.  இவரது மூத்த மகன் திரு.பாலு என்ற பாலசுப்ரமணியன் அவர்கள் தேவகோட்டை நகராட்சியில் அலுவலராக பணி புரிந்தார்.  திராவிட முன்னேற்ற கழகத்தின் மீதும், தலைவர் கலைஞர் மீதும் தன் உயிரையே வைத்து இருந்தவர்,  தேவகோட்டைக்கு கலைஞர் வரும் வேளைகளில் அவர் கூடவே திரிந்ததை பார்த்து இருக்கிறேன்.  பின்னர் காரைக்குடி நகராட்சி அலுவலகத்தில் இவர் பணி புரிந்தார்.  இந்தக்கடை அடுத்து சுந்தர பவனம் எனும் ஒரு உணவகம்,  நண்பர் முத்துசாமியின் சித்தப்பா நடத்தி வந்தார்.  அடுத்து கிருஷ்ணசாமி ஜவுளிக்கடை என்று ஒரு துணிக்கடை இருந்தது. என்ன கருதா ஊரணியில் எல்லாம் ஜவுளிக்கடையா என்று நீங்கள் பேசும் உங்கள் மைண்ட் வாய்ஸ் எனக்கு கேட்கிறது.   ஊர் செழுமையா அப்போது இருந்ததா அல்லது இத்தனை வருடங்கள் கழித்து இப்போது இருக்கிறதா என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.   இந்த கிருஷ்ணசாமி ஜவுளிக்கடையின் மருமகன் திரு.சுந்தரம் அவர்கள் தான், கண்டதேவி ரோடில் உள்ள சன்மார்க்க சபைதனை நிறுவி பராமரித்து வந்தார்.  தற்போது நிலவரம் என்ன என்று தெரிந்தவர்கள் தெரிவிக்கவும். 

இதை அடுத்து M.S.K. சாயபுவுக்கு சொந்தமான ரைஸ் மில்.  அப்போது அவர்களுக்கு ஊரைச்சுற்றி 12 ரைஸ் மில்லுக்கு மேல் இருந்தது.  இன்றைக்கு இது போதும்.  நாளை பள்ளிக்கூடம் போகணும்.   சரியா.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தென் கிழக்கில் .. தெக்கத்தியான் (தெற்கத்தியான்) 21. தெக்கணமும் அதிற் சிறந்த திராவிட நல் திருநாடு'

22.தென்னாடும் தென் கிழக்கும்....இந்தோனேசிய வரலாற்று ஆவணங்களில் இருந்து....தென் கிழக்கில் ..

அசை போடும் ..தேவகோட்டை ஞாபகங்கள்-பகுதி: 60