அசை போடும் ..தேவகோட்டை ஞாபகங்கள்-பகுதி: 27


அசை போடும் ..தேவகோட்டை ஞாபகங்கள்
கவிக்கிறுக்கன் முத்துமணி
பகுதி: 27
14-11-2017


நேற்று உங்களை சைவப்பிரகாச வித்தியாசாலைக்கு அழைத்து செல்கிறேன் என்று ரோட்டிலேயே விட்டு விட்டுப் போய்விட்டேன்.

கருதா ஊரணிக்கரையில் உங்களை
கருதாமல் யாரும் விட்டு விட மாட்டார்கள்

கவலை இல்லை.

ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் வானோங்கி வளர் கிளை பரப்பி,  நிலத்தின் மீதுள்ள உயரம் போல பூமிக்கு அடியில் வேர்கள் எனும் கால் பரப்பி விழுதுகள் விட்டு எழுந்து நிற்கும் பெரும் மரங்களின்  ஆரம்பம் சிறு விதையே. 

வித்தாய்              மண்மடியில்  விழுந்துறங்கும்     விதைகள்தான்
முத்தாய்              முதிர்ந்து        முகிழ்க்கும்பெரு   மரமாய்
கருப்பை              கனலில்           காத்திருந்த            பின்னேதான்
உருப்பெ              ருகியுயிர்        உடல்சேர்ந்து          உலகுவரும்-  யாரும்
பள்ளியில்           துயின்ற           பின்தான்                 பாரினிலே
துள்ளிவரு          முயிரின்          துடிப்பதனை          பெற்றார்      
எத்தனை            காலம்               இங்குநாம்              வாழ்ந்தபோதும்       
பத்து                     மாத                  பந்தமின்றி             பாழ் தானே !

அதே போல என்ன தான் புத்திசாலித்தானம்  இருந்தாலும், நேரம் நல்லா  இருந்தாலும் எவ்வளவு வருடகாலம் இந்த உலகத்திலே நாம் வாழ்ந்தாலும்  அந்த கூட்டுப்புழுவாய் அன்னை மணி வயிற்றில் பள்ளி கிடைக்கவில்லை என்றால் பிறப்பே இல்லை அல்லவா .   கல்வி கற்கின்ற பள்ளிக்கூடம் கூட ஒரு வகையில் அன்னையின் மணி வயிறுதான்.   எத்தனை காலம் அதனுள் இருந்தோம் என்பது முக்கியம் இல்லை.  எப்படி எல்லாம் அந்த தாய் மடி ஒரு துளி வித்தாய் இருந்த பொருளை உயிர் ஊட்டி ,உணர்வூட்டி,  உடல் கூட்டி பிண்டமான பொருளை இந்த அண்டத்தில் வாழும் வண்ணம் வெளியே அனுப்பி வைக்கிறதோ அப்படித்தான் கல்விக்கூடங்களும்.  நல்ல தாய், தந்தையர் இறைவன் அளிப்பது  போல நல்ல ஆசிரியர்களையும் இறைவன் கொடுத்து விட்டால் அந்த குழந்தை நல்ல ஆரோக்கியமாய் வளரும் என்பதை சொல்லவும் வேண்டுமோ ?

அப்படிதான்,  சைவபிரகாச வித்தியாசலையில் நான் படித்தது இரண்டே ஆண்டுகள் தான்.  4ஆம்  மற்றும் 5ஆம்  வகுப்புகள் மட்டுமே. இன்று 48 வருடங்கள் கழிந்த பின்னும் என்னை ஒரு சிறு மாணவனாக நினைக்கும் வண்ணம் தீராத நினைவுகளையும், தன்னடக்கத்தையும், நல்  ஒழுக்கத்தையும் பயிற்று வித்த என் தாய் மடி கள் நான் பயின்ற பள்ளிகள்.  காந்தி ரோடு புனித ஜான்ஸ் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் மூன்றாம் வகுப்பு வரை பயின்றேன்.  நன்கு நினைவு இருக்கிறது.  1964 முதல் 1967 வரை அங்கு காந்தி ரோடில்.        

சைவப் பிரகாச வித்தியா சாலையைப் பற்றி எழுதத் துவங்கும் முன், இதற்கு முன் படித்த புனித ஜான்ஸ் பள்ளி பற்றி குறித்து விட வேண்டும் என்று நினைக்கிறேன்.  இல்லையென்றால் அப்படியே விட்டுப்போய் விடும்.  இங்கு மத மாச்சரியங்களுக்கு அப்பாற்பட்டு நாம் அனைவரும் கிறிஸ்துவ மிஷன்கள்  இந்தியாவில் கல்விக்கும், மருத்துவத்துக்கும் மனித வள மேம்பாடு கருதி ஆற்றிய தொண்டுகளை நினைவு படுத்தி ஆக வேண்டும்.  எத்தனையோ மொழிகள் பேசப்படுகின்ற இந்தியத் துணைக்கண்டத்தில் தமிழில் தான் முதல் அச்சு ஊடகம் வெளிப்பட்டு இருக்கிறது.  1578ல் தம்புரான் வணக்கம் என்ற தமிழ் புத்தகம் கேரளாவில் அம்பலக்காடில் அச்சாகி இருக்கிறது. அதன் பின் டி நொபிலி அச்சகம்,  தமிழில் அகராதி அமைத்த வீரமாமுனிவர், திருவாசகத்துக்கு உருகிய G.U .POPE அனைவரும் மதங்களை தாண்டிய மாண்பினர்.

அந்த வகையில் இந்த புனித ஜான்ஸ் பள்ளி எத்தனையோ பெரிய புத்தி சாலிகளை உருவாக்கி இருக்கிறது.  என்னை நாலரை வயதிலேயே பிறந்த முதல் வகுப்பில் சேர்த்து விட்டு விட்டார்கள் . ஏனென்றால் என் சித்தப்பா திரு.பவளம் அவர்கள் அங்கு படித்தார்,  நான்  அவர் எங்கு சென்றாலும் உடன் செல்ல வேண்டும் அடம் பிடித்ததானால் தொல்லை தாங்காமல் கொண்டு போய் சேர்த்து விட்டார்கள்.  இரண்டு கட்டிடங்களில் ஜான்ஸ் பள்ளி நடந்து கொண்டு இருந்தது.  காந்தி ரோடில் தொண்டியார் வீதி சேரும் இடத்தில பள்ளி ஆரம்பித்து விடும். புனித சகோதரிகள் தங்கும் விடுதி அடுத்து தொடர்ந்து பள்ளி. அடுத்து ஒரு சந்து வரும். அந்த சந்தை ஒட்டிய கட்டிடமும் ஜான்ஸ் பள்ளிதான்.  அங்கு ஒன்றாம் வகுப்பு முதல் 3ஆம்  வகுப்பு வரை படித்தேன்.  என்னுடன் பயின்ற பரீது ஸாலிஹானை  , பின்னர் தே  பிரித்தோவில் 9ஆம்  வகுப்பில் சந்தித்தேன். அவர் பின்னர் B .E . படித்து விட்டு காரைக்குடியில் அரசுப்  பணியில் இருந்தார்.  மற்றவர் பனசமக்கோட்டை , பாண்டிய ராஜன்,  தமிழ்நாடு காவல் துறையில் DEPUTY SUPERINDENT OF POLICE ஆக பணி புரிந்தார்.

ஒவ்வொரு திங்கடகிழமையும் மைதானத்தில் அனைத்து மாணவர்களையும் அணியாக நிற்க வைத்து இந்திய தேசிய கோடியை ஏற்றுவார்கள்.  ஒரு மாணவன் கொடிக்கம்பத்தின்  கீழ் நின்று நெஞ்சில் கையை மடித்து வைத்து உறுதி மொழி எடுக்க வேண்டும்.  அந்த மாணவன் சொல்ல சொல்ல அனைத்து மாணவர்களும் ஒருமித்த குரலில் திரும்ப சொல்வார்கள்.  ஒருமுறை நான் உறுதி மொழி எடுக்கும் மாணவனாக நின்ற நினைவு இருக்கிறது .  பின்னர் கிராமபோன் பெட்டியில் இசைத்தட்டில் ஒரு பாடல் இசைக்கப்படும் . ஒவ்வொரு வரிசையாக அணிவகுத்து கொடிக்கம்பம் வரை சென்று வணக்கம் செலுத்திப் பின் தங்கள் வகுப்புகளுக்கு செல்ல வேண்டும். அந்த நிகழ்வில் 'ஆயிரத்தில் ஒருவன் படப்படலான 'அதோ அந்தப் பறவை போல வாழ வேண்டும்'


இந்த பள்ளியில் நற்கருணை வீரன் என்று ஒரு 4 பக்க phamplet வடிவில் பைபிள் கதைகள் வண்ணத்தில் அச்சிடப்பட்டு விற்கப்படும். விலை 3 புதிய காசுகள் (நயா பைசா).  அதை இரண்டு பேர் சேர்ந்து வாங்கி படித்து இருக்கிறோம்.  அப்புறம் இரண்டாம் வகுப்பு படிக்கையில் இன்ப சுற்றுலா செல்ல  அழைத்தார்கள்.    எங்கே தொண்டி க்கு.. கடல் பார்ப்பதற்காக .   என்னால் செல்ல முடியவில்லை.  ஏனென்றால் சுற்றுலாவுக்கு கட்டணம் பெரிய தொகை.  என்னால் பெற்றோரிடம் இருந்து பெற்று கொடுக்க இயலாத பெரிய தொகை.  ஆம் .  சுற்றுலாக் கட்டணம் ரூ 1.50 .  அட ஆமாங்க... ஒண்ணரை ருபாய்..சுற்றுலாவுக்கு போகாதது கூட மனசு தாங்கிக்கிடுச்சுங்க... ,  சுற்றுலா முடித்து வந்த வகுப்புத் தோழர்கள்,  கடல் நுரையை கையில் அள்ளினோம்,   கடல் பஞ்சு  பார்த்தோம், நண்டு அவன் காலில் ஏறி டான்ஸ் ஆடியது,  படகில் ரொம்ப தூரம் கடலுக்குள் சென்றோம் என்று ரொம்ப 'பீலா'  விட்டதுதான் மனசு ஏத்துக்கவே இல்லை .   இன்று கடல்கள் தாண்டி  கண்டங்கள் தாண்டி சுற்றுகின்ற போதும், கடற்கரையைப் பார்த்தால் ஜான்ஸ் பள்ளியும், தொண்டி  கடலும் நினைவில் வந்து அலையடிக்கும். பொங்கும் கடலோசை நினைவுகளில் தாலாட்டும்.

அப்புறம் நினைவில் உள்ளது இரண்டாம் வகுப்பு தமிழ் பாடப்புத்தகத்தில் இரண்டாவதாக வரும் ஒரு  பாடம் அதன் படம்.  உங்களில் பலரும் உங்கள் இரண்டாம் வகுப்பு பாடங்களை நினைவு கூறலாம்.  ஒரு தூக்கணாங்குருவி பனை மரத்தில் கூடு கட்டியிருக்கும்.  ஒரு குரங்கு பனை மரத்தில் விறு விறு வென ஏறி அந்த கூட்டைப் பிரித்து எறியும்.  குருவி குரங்கினைப் பார்த்து..

 'என் கூட்டைப் பிரிக்கிறாயே ?  உன்னால் இது போன்ற கூட்டை கட்ட இயலுமா?

என்று கேட்கும்.  அதற்கு அந்த குரங்கு,

'ஊசி மூஞ்சி மூடா ... எனக்கு கூட்டை கட்டத் தெரியாது.  பிரிக்கத்தான் தெரியும்'

கீழே வினாக்கள் பகுதியில்

எதிர்பதம் கூறு:

ஏறு  x இறங்கு


 அப்புறம் சித்தப்பா பவளம் அவர்கள் நடிகர் திலகத்தின்   தீவிர ரசிகர். அந்த கொச்சியம்மா வீட்டில் குடியிருந்த குடிலில் ஒரு சிவாஜி கணேசன் படக்காலண்டர் 'கருப்பு வெள்ளையில்'  தொங்கும்.  அதில் A .M .ஜோதிமணி என்ற பெயர் அடிக்கப்பட்டு இருக்கும்.   அப்போதே A .M .ஜோதிமணி, காரைக்குடியில் மிகப் பிரபலம் .  அப்போது நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களுக்கு பாரத அரசு 'பத்மஸ்ரீ'  பட்டம் வழங்கி இருந்தது.  அந்தக்காலத்தில் நடிகர்கள், அரசியல் தலைவர்கள் இவர்களின் புகைப்படங்கள் பேனாக்கடை லட்சுமணன் கடையில் ( அப்புறம் பின்னர் திருப்பத்தூர் போகும்போது விபரமாகப் பார்க்கலாம், இப்போது ஒரு குறிப்பு மட்டுமே ) 10 காசுக்குக்  கிடைக்கும்.  


அறிஞர் அண்ணா, கலைஞர், பெருந்தலைவர், M .G .R .,சிவாஜி கணேசன் அவர்களின் புகைப்படங்கள் பர்ஸில் வைத்துக்கொள்ளும் சைஸில் விற்கப்படும்.  என் சித்தப்பாவிடம் இருந்து  சிவாஜி கணேசன் அவர்களிடம்  புகைப்படத்தை (கீழே பத்மஸ்ரீ சிவாஜி கணேசன் என்று போட்டோவில் எழுதப்பட்டு இருக்கும் ) வாங்கி புத்தகத்தில் வைத்து இருந்தேன்.  என் வகுப்பு ஆசிரியை இதை பார்த்து விட்டார்கள்.  என் பையில் இருந்து அந்த சொத்து பறிமுதல் செய்யப்பட்டது.  என்னால் அழுகையை அடக்க முடியவில்லை.  கெஞ்சினேன்,  மன்றாடினேன் ,   மண்டியிட்டேன், ம்ஹூம் .. எதற்குமே அந்த டீச்சர்  அசைந்து கொடுக்கவில்லை.   மறுபடியும் அடுத்த நாள் கெஞ்சினேன்.  அதை அடுப்பில் போட்டு விட்டேன் என்று அரக்கி போல அந்த ஆசிரியை சொல்லி விட்டார்கள்.  இன்னும் என் கண்ணில் அந்த சிவாஜி கணேசன் புன்முறுவல் பூத்து ஸ்டைலாக சிரித்து கொண்டு இருக்கிறார்...
 
இவை மட்டும் எனது புனித ஜான்ஸ் பள்ளி நினைவுகள்.  என் சித்தப்பா பவளம் அவர்களின் 8 ஆம்  வகுப்பு ஆசிரியை கல்யாணி டீச்சர் எனக்கு பரிசளித்த பூப்போட்ட சின்ன பிளாஸ்டிக் டம்ளர் நினைவில் உள்ளது .

 1965 ஆம் வருட வாக்கில் வட்டாணம்  ரோடு திருச்சுழியார் வீட்டு தோட்டத்தில் குடி மாறி விட்டோம்.  இப்போது இங்கிருந்து காந்தி ரோடு புனித ஜான்ஸ் பள்ளிக்கு போய் வந்து கொண்டு இருக்கிறேன்.  வட்டாணம் ரோடு குளக்கால்  வழியாக திண்ணன் செட்டி ஊரணி மேல்கரை வந்து தண்ணீர் பந்தல் வழியாக முளைக்கொட்டு திண்ணை கேட் செய்து முனி ஐயா கோவில் (காந்தி ரோடில்) வழியாக காந்தி ரோடு குதிரைவண்டி காரர் வீட்டில் கரை ஏறி பள்ளி சென்ற ஞாபகம் இன்னும் இருக்கிறது.  போகிற வருகிற வழியெல்லாம் சினிமா போஸ்டர் , சுவர் விளம்பரங்கள் பார்த்துக்கொண்டே செல்வேன்.  M G R படிப்பகத்துக்கு எதிரில் உள்ள சுப்பிரமணியனின் முடி திருத்தும் கடையில், புரட்சி நடிகரின் ' அரச கட்டளை'  பெரும் பொருட்ச்செலவில் வருகிறது என்ற தினத்தந்தி முழு பக்க விளம்பர பக்கத்தை கண்ணாடியில் ஒட்டி வைத்து இருப்பார்.  குளக்கால் சுவற்றில் 1967 ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் விளம்பரங்கள் சரியான உணர்ச்சி பூர்வமான  தமிழ் வாசகங்கள்.  இப்படி எழுதியிருக்கும் :

பஞ்ச நிலை போக்க முடியாத காங்கிரசுக்கு பதவி ஒரு கேடா ?

வாக்களிப்பீர் :
பாராளுமன்றத்துக்கு : தா.கிருட்டிணன் அவர்களுக்கு உதய சூரியன் சின்னத்தில்
சட்டமன்றத்துக்கு      : கரிய மாணிக்கம் அவர்களுக்கு ,  சுதந்திரா கட்சியின் நட்சத்திர சின்னத்தில்.


1965 முதல் எங்கு பார்த்தாலும் , தமிழ் வாழ்க!  இந்தி ஒழிக என்ற வாசகங்கள்.

ஜான்ஸ் பள்ளி ஆண்டு விழாவில்,  எனக்கு சீனியர் ஆன  இப்ராஹிம்ஸா திரைப்பட பாடலுக்கு நடனம் ஆடுகிறார்.

'தாய் மேல் ஆணை...
தமிழ் மேல் ஆணை...
தாய் மேல் ஆணை
தமிழ் மேல் ஆணை
குருடர்கள் கண்ணை திறந்து வைப்பேன்
தனியானாலும் தலை போனாலும்
தீமைகள் நடப்பதை தடுத்து நிற்பேன் (தாய் மேல்)

அப்புறம் இன்னொரு பாட்டு:

மூன்றெழுத்தில்  என் மூச்சிருக்கும் ....

தினத்தந்தி பத்திரிகையை சிந்துபாத் படிக்க திறந்தால், முதல் பக்கத்திலேயே கருத்துப்படம், இந்தி எழுத்துக்கள், தார் அடித்து மறைக்கப்பட்டன  என்று...

மாலை முரசு பத்திரிகையில் முதல் பக்கம். கருத்துப்படம் : அறிஞர் அண்ணா கையில் படி வைத்து அரிசி அளந்து போடுகிறார். ஒரு ஏழை வாய் நிறைய சிரிப்புடன் வாங்கி கொண்டு இருக்கிறார்.  மேலே எழுதி இருக்கிறார்கள்... அண்ணா சொல்வது போல ...

ஒரு ரூபாய்க்கு மூன்று படி லட்சியம், ஒரு படி நிச்சயம்

அப்புறம் பார்த்தால் எங்கும் அடிக்கடி வாக்கு சேர்க்கும் ஊர்வலங்கள்.  ஊர்வலங்கள் காந்தி ரோடில் ஆக்ரோஷமான கோஷங்களுடன் :

காமராஜ் அண்ணாச்சி
கருப்பட்டி வெல என்னாச்சி

கும்பி எரியுது,
குளு குளு ஊட்டி ஒரு கேடா,

பக்தவச்சலம் அண்ணாச்சி,
பருப்பு விலை என்னாச்சி,

 கூலி உயர்வு கேட்டான் அத்தான்,
குண்டடிபட்டுச் செத்தான்"

இப்படி எங்கேயும் பார்க்கிறதும்,  கேட்கிறதும், எதுகை மோனை தமிழ் தான்.  அதிலும் நான் வசித்த வட்டாணம் ரோடு பள்ளிவாசல் அருகில் இசுலாமிய சகோதரர்களும் தி.மு. வுடன் அலையன்ஸ்.  ஒரே ஜே . ஜே என்று இருந்த காலம்.

அடுத்து 4ஆம் வகுப்பு,  என்ன காரணம் என்று தெரியவில்லை.  என் சித்தப்பா என்னை கருதா ஊரணி சைவப்பிரகாச வித்தியா சாலையில் சேர்த்து விடுகிறார்.  ஒரு வேளை எதிர் வீட்டில் (திருச்சுழியார் வீட்டில்) இருந்த அண்ணாமலை அண்ணன் சொல்லி இருக்கலாம்.  எனெனில் அவர் அங்கு ஆசிரியராக பணி புரிந்து கொண்டு இருந்தார். இன்று வரை நான் எண்ணி எண்ணி வியப்பது தேவகோட்டையின் ஒவ்வொரு பகுதியிலும் தெய்வங்கள் வாழும் கோவில்களும், கோவிலுக்குள் சுத்தமாக நுழைய வேண்டும் என்ற எண்ணத்தில் கோவிலுக்கு அருகில் குளங்கள் மட்டும் அல்ல.  கோவில் குளங்களின் எண்ணிக்கைக்கு கொஞ்சமும் குறைவில்லாத கலைக்கோவில்களான கல்விக்கூடங்களும் அமைக்கப்பட்டு இருப்பது தான். சமுதாயத்துக்கு சேவை செய்ய வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் பள்ளிகள் இயங்கி வந்தன. அனைத்துப் பள்ளி ஆசிரியர்களுக்குள்ளும் ஒரு பொறாமை இல்லாத போட்டி, தங்கள் பள்ளி மற்றும் தங்கள் மாணவர்கள் மற்ற பள்ளிகளை விட, மற்ற பள்ளி மாணவர்களை விட சிறப்பு என்று நிரூபணம் ஆகவேண்டும் என்று. இதற்காக மாணாக்கர் சேர்ப்பதில் இருந்து, கற்பிப்பதில் இருந்து எல்லா நிலைகளிலும் சமுதாயமே நன்மை அடைந்தது.

என்னை என் வீட்டு வாசலில் இருந்து திருமதி சௌந்தரம் டீச்சர் கையைப்பிடித்து  சைவப்பிரகாச வித்தியாசாலைக்கு அழைத்து சென்றார்கள்.  இவர் எனக்கு ஆங்கில வகுப்பு எடுத்தார்.  ஒத்தக்கடையில் தி.பிள்ளையார் கோவிலுக்குச் சொந்தமான தேவார விடுதி, வட்டாணம் ரோடில் இருக்கிறது.  இதில் கோவிலின் தேவாரம் ஓதுவார் குடும்பம் மற்றும் பல அந்தணக் குடும்பங்கள் வாழ்ந்த காலம்.  வரிசையான வீடுகள். முதல் வீடுகள்.  முதல் வீடு திரு.ராமகிருஷ்ண கன பாடிகள்,  வேதம் பயின்றவர்.  வாத்தியார் என்பார்களே அவர்.  அவரது தம்பி, திரு.ஹரிஹரன், திருவேங்கடமுடையான்  பள்ளியில் ஆசிரியர்.  ஹரிஹரன் அவர்களின் மனைவிதான் இந்த சௌந்தரம் டீச்சர்.  அதே வரிசை வீட்டில் வசித்தவர், திருவேங்கடமுடையான் பள்ளியின் இன்னொரு ஆசிரியரான திரு.சேஷன் அவர்கள்.  தேவாரம் ஓதுவாரின் குடும்பம் ஒன்று. அவரது புதல்வர்கள், திரு.கணேசன் மற்றும் திரு.பரமசிவம்.  திரு.பரமசிவம் தற்போது நகரத்தார் மேனிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றிக் கொண்டு இருக்கிறார்.

சரி, இப்போது கருதா ஊரணி சைவப்பிரகாச வித்தியாசாலை வந்தாகி விட்டது.  சிறிய 5 ஆம் வகுப்பு வரை மட்டுமே உள்ள பள்ளி.  பள்ளியின் இடது புறம் பிள்ளையார் கோவில். வலது புறம் நண்பர் கிட்டு அவர்களின் வீடு. உயர்ந்த சீமை ஓடுகள் வேய்ந்த மேற்கூரை,  கல்தூண்கள் தாங்கி நிற்கிற உறுதியான கட்டிடம்.  நீண்ட உள் வெளி CARD BOARD அட்டைகளால் தடுக்கப்பட்டுத் தனித்தனி வகுப்புகளாக  தலைமை ஆசிரியர், பெரிய சார் என்று அனைவராலும் அழைக்கப்படும் திரு.ராமகிருட்டிணன்.  ரொம்ப நாளாக அவரின் பெயர் எனக்குத் தெரியாது.  பெரிய சார் என்றே அறிவேன்.  அப்புறம் அண்ணாமலை அண்ணன்,  வீட்டருகில் அண்ணாமலை அண்ணன், பள்ளியில் அவர் சின்ன சார்.  சௌந்தரம் டீச்சர்,  அப்புறம் இன்னொரு டீச்சர்,  முகம் நினைவில் உள்ளது, பெயர் வள்ளி என்று நினைக்கிறேன்,  ஆனால் உறுதியாக சொல்ல முடியாது.  உயர்ந்த அந்த கட்டிடத்தின் பின் பகுதியில் கீழே இறங்கினால், பெரிய மைதானம்.   ஒரு பக்கம் அடர்ந்து வளர்ந்த  நெல்லி மரம், அதன் எதிர்புறம் (பள்ளியின் வலது புறம்) ஒரு சறுக்குப்படி பக்கவாட்டில் ஒரு தோட்டம்.  கடைசியில் அடுப்படி மற்றும் மதிய உணவுக்கூடம்.

அங்கு படித்த  காலம் என்னவோ மிகச்சொற்ப காலம் தான்.  ஆனால் அதன்  பந்தம் தாய்க்கொடி உறவாக என்றும் தொடரும்.  ஓரளவு விபரம் தெரிய ஆரம்பித்த வயது.  நான் வாசிக்க, எண்ணையும், எழுத்தையும் நேசிக்க என்னுள் இருந்த இவனை கருவாக்கிய உருவாக்கிய இடம்.  அதில் இந்த பெரிய சாருக்கு முக்கியப் பங்கு உண்டு.  3 ஆண்டுகளுக்கு முன் அங்கு சென்று அவரைச் சந்தித்து ஆசிகள் பெற்று வந்தேன்.  அவர் பணி மூப்பு எய்தி விட்டார். அவரது மகள் திருமதி.சித்ரா அங்கு ஆசிரியை ஆகப்பணி புரிகிறார்.

இந்தப்பள்ளி, இரட்டை ஆணா வீடு என்று அழைக்கப்படும் அன்பர்கள் பெரியாணா எனும் பெரிய அருணாசலம் மற்றும் சின்னாணா என்றழைக்கப்படும் சின்ன அருணாசலம் அவர்கள் குடும்பத்தினரால் ட்ரஸ்ட் ஏற்படுத்தி படுகின்றது.  திரு.சின்ன அருணாசலம் அவர்கள் தற்போது தலைவராக நிர்வகித்து வருகிறார். 


இன்று பள்ளிகள் நடத்தும் வள்ளல்கள் என்ற போர்வையில் உலவும் கல்வி வியாபாரிகளையும், அவர்களது படோடப, டாம்பீக நடவடிக்கைகளையும் காண்கின்ற வேளையில்,  இந்த பள்ளியினை ஒரு சேவையாக நடத்தி வந்த அரு.அரு. குடும்பத்தின் பெரிய மனம் நினைத்து சிலிர்க்கிறேன்.  முதல் நாள் பள்ளியில் ஒன்றும் தெரியவில்லை.  அடுத்த நாள், பள்ளி வாசலில் ஒரு PLYMOUTH காரில் மாணவர்கள் இறங்கி வந்தார்கள்.  பெரிய ஆணா, சின்ன ஆணா, ராமு, உமையாள் இவர்கள் எங்கள் பள்ளியில் எங்களோடு ஒன்றாகப் படிக்கின்ற சக மாணவர்கள்.



பெரியாணா, ஒரு வருடம் மூத்தவர் எனக்கு, சின்ன ஆணா, ராமு, உமையாள் அனைவரும் சின்னவர்கள்.  பெரியாணா ஒரு சின்ன சிட்டையில் ஒவ்வொருவர் பெயராக எழுதி விளையாண்டு கொண்டு இருக்கிறார்.  என்னிடமும் ஏதோ எழுதிக் கையில் திணிக்கிறார்.  இப்போது கொஞ்சம் நினைத்து பார்க்கிறேன்.  இந்தி ஒழிக என்று கோஷம் போட்டவர்களின் வாரிசுகள் இந்தி படிப்பதற்காக தனியாக வெளியூர்களில் படிக்கின்றன.  தமிழ்தான் உயிர் என்றும் ஏழைப்பங்காளன் என்றும் ஏய்த்து வாழ்பவர்களின் குழந்தைகள் கான்வென்டில் தான் படிக்கின்றன.  ஆனால் தங்கள் குடும்பத்தின் அறக்கட்டளையின் மூலம் நடத்தும் பள்ளியில் தன் குழந்தைகள் படிக்காவிட்டால் எப்படி என்று ஒரு கோடீஸ்வரர் நினைக்கிறார் பாருங்கள், அவர் உண்மையிலேயே மனத்தால் ஈஸ்வரர் தான்.

பின்னர் கல்லூரி முடித்த காலங்களில் சென்னையில் வீயார் அவர்களுக்கு சொந்தமாய் இருந்த  சென்னை C I T காலனி பங்களாவில் தங்கி இருந்த நேரங்களில் சிந்தித்து இருக்கிறேன்.  இந்த வீரப்ப செட்டியார் பிள்ளைங்களா நம்முடன் சைவப்பித்ரகாச வித்தியாசாலையில் படித்தனர் என்று?

இன்று கல்வி வணிகம் ஆகிவிட்ட நிலையில், பள்ளிக்கூடங்களுக்கான விளம்பரங்கள், நுகர்வோர் சந்தைப் பொருளின் நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டது.  சமுதாய அந்தஸ்துக்காக மனிதர்கள் தன் பிள்ளை இந்தப் பள்ளியில் படிக்கின்றன உன் பிள்ளை எந்த பள்ளியில்?  என்று பீற்றிக் கொள்ளும் நிலைக்கு கல்வியின் தரம் தாழ்ந்து போய்விட்டது பரிதாபத்துக்குரிய வேதனையான உண்மை

இனி சைவப்பிரகாச வித்தியா சாலையில் தொடருவோம் நமது படிப்பினை.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தென் கிழக்கில் .. தெக்கத்தியான் (தெற்கத்தியான்) 21. தெக்கணமும் அதிற் சிறந்த திராவிட நல் திருநாடு'

22.தென்னாடும் தென் கிழக்கும்....இந்தோனேசிய வரலாற்று ஆவணங்களில் இருந்து....தென் கிழக்கில் ..

அசை போடும் ..தேவகோட்டை ஞாபகங்கள்-பகுதி: 60