அசை போடும் ..தேவகோட்டை ஞாபகங்கள்-பகுதி: 29


அசை போடும் ..தேவகோட்டை ஞாபகங்கள்
கவிக்கிறுக்கன் முத்துமணி
பகுதி: 29
19-11-2017
 அன்பு சொந்தங்களே ..

தினசரி தங்களைச் சந்திக்க வேண்டும் என்றே நினைக்கிறேன்.  ஆயின் பணிச்சுமை பல நேரங்ககளில் மனதில் கருவான எண்ணங்களை உருவான வண்ணங்களை எழுத்தில் பிரசவிக்க முடியாமல் இடர் படுகிறேன்.  சமயங்ககளில் புலி வால் பிடித்த கதைதான்.  என்ன செய்வது ..

புலி வாலை
பிடித்த கதையாய்
கிலி  பிடித்து
நிற்கிறேன்
பணிச்சுமையின்
தனிச்சுமையில் ...

இரவில் எழுதுவோம் என்று பொழுதை
வரவில் வைத்தால்  வாடிக்கை பணியில்
விரயம் ஆனசக்தி வீரியம்   இழந்து
கரவின்றி உறங்குகிறேன் கல்லாய் ...

அன்பு நண்பர்கள் இந்த தொடரில் இடைவெளி வந்தால்,  என்னை தயவு செய்து மன்னித்து ஊக்கப்படுத்துமாறு வேண்டி ஆரம்பிக்கிறேன்.  இந்த சைவப்பிரகாசா வித்தியா சாலையில் படிக்கின்ற காலத்தில் கொஞ்சம் நாட்டு நடப்பையும் பார்த்து மனதில் குறித்துக் கொண்டால் அந்த காலகட்டத்தில் பயணிக்க எதுவாக இருக்கும்.  ஏனெனில், இந்தத்  தொடர் என்னுடைய சுய சரிதம் அல்ல,  அந்தந்த வயதில் நான் கண்ட தேவகோட்டையை உங்கள் கண்களுக்கு கொண்டு வரும் சிறு  முயற்சி.  இப்போது சைவப்பிரகாச வித்தியாசாலையில் குன்றக்குடிக்கு அழைத்து சென்ற பகுதி பற்றி எழுதப் புகுகின்ற வேளையில் பொதுத் தேர்தல் பற்றியும், அறிஞர் அண்ணா ஆட்சி அமைத்தது பற்றியும் எழுதுகிறேனே ஒன்றுக்கு ஒன்று தொடர்பு இல்லாதவற்றை குறிக்கிறேன் என்று எண்ண வேண்டாம்.  அந்தக் காலகட்டத்து நிகழ்வுகளைக் குறிப்பில் கொண்டு வருவதும் அதனுடன் தொடர்பு உள்ள நிகழ்வுகளை விவரிக்கும் அல்லவா?.  மேலும் இந்தக் குறிப்புகள் நம் காலத்துக்குப் பின் வரும் அடுத்த தலைமுறைக்கு சென்று சேர வேண்டும் என்பதே விருப்பம்.

1967 க்கு முன் எதிர்க்கட்சியாய் இருந்த தி.மு..வில் அரசியல் நாகரிகம் தெரிந்த தலைவர்கள், தமிழ் வித்தகர்கள்.  எதையும் விவாதம் செய்ய அனுமதிக்கின்ற சட்டசபை என மிகவும் சுவை ததும்பு சட்டசபை நிகழ்வுகள் நடந்த காலம். அதுவும், காங்கிரசின், அனந்தநாயகியும் தி.மு. உறுப்பினர்களும் பேச ஆரம்பித்தால் சுவாரசியம் பொங்கும். இந்த நேரத்தில் 1967 பொது தேர்தல் வந்தது.  காட்சிகள் மாறின.

1967 பொதுத் தேர்தலில் அறிஞர் அண்ணா அவர்களின் தலைமையிலான திராவிட முன்னேற்ற கழகம் தனித்தே 137 தொகுதிகளில் வென்றது.  ராஜகோபாலாச்சாரியாரின் சுதந்திரா கட்சி 20 இடங்ககளை பிடித்தது.  இந்த இருவரும் மிக ராஜதந்திரத்துடன் செயல் பட்டு காங்கிரசை ஆட்சியை விட்டு அகற்ற கூட்டணி அமைத்தனர்.

இத்தேர்தலில் காங்கிரசு தனித்தும் எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைத்தும் போட்டியிட்டன.

பெரியார் . வே. ராமசாமியின் திராவிடர் கழகம் காமராஜரையும் காங்கிரசையும் ஆதரித்தது.

திமுக தலைமையிலான எதிர்க்கட்சி கூட்டணியில்

சுதந்திராக் கட்சி,
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்,
சி. பா. ஆதித்தனாரின் நாம் தமிழர் கட்சி, ( சீமான் கட்சி அல்ல )
சம்யுக்தா சோஷ்யலிஸ்ட் கட்சி,
தமிழ் நாடு உழைப்பாளர் கட்சி,
இந்தியக் குடியரசுக் கட்சி,
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்,
. பொ. சிவஞானத்தின் தமிழரசுக் கழகம் ஆகியவை இடம்பெற்றிருந்தன.

இக்கூட்டணியை உருவாக்குவதில் அண்ணாதுரையும், ராஜகோபாலச்சாரியும் பெரும்பங்கு வகித்தனர்.  இதே ராஜாஜியால் கொண்டு வரப்பட்ட இந்தி மொழி பயன்பாட்டை எதிர்த்துத்தான், தி.மு.. மக்கள் செல்வாக்கைப் பெற்றது.  ஆயின் 1967 தேர்தலில் அதே ராஜாஜியும், அண்ணாவும் கூட்டணி கண்டனர்.



M .G .R . சுடப்பட்டதும்,  இந்தி எதிர்ப்பு போராட்டமும் மிக முக்கிய திருப்பு முனைகளாக அமைந்தன.  மேல்தட்டு வாக்குகளை ராஜாஜியின் கூட்டுறவு பிரியாமல் பார்த்து கொண்டது.

திமுக தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சியமைத்தது. இந்தியக் குடியரசில் காங்கிரசல்லாத ஒரு கட்சி தனியாக ஆட்சியமைத்தது இதுவே முதல் முறை. நாற்பதாண்டு காலமாக தமிழகத்தை ஆண்டு வந்த காங்கிரசு தோற்றது. 1967 முதல் இன்று வரை திராவிடக் கட்சிகளே தமிழகத்தை ஆண்டு வருகின்றன.  ஆனால் அன்று 1967ல்  இருந்த திராவிட கட்சி வேறு இன்று தற்போது  தினகரன், சசிகலா, E.P.S.,  O.P.S.,  மற்றும் அமைச்சர்கள் உள்ள திராவிட  என்று சொல்லிக் கொள்கிற திராவைக் கட்சிகள் வேறு..

இத்தேர்தலில் அன்றைய தகவல் தொடர்பு அமைச்சர் பூவராகன் தவிர அனைத்து அமைச்சர்களும் தோல்வியைத் தழுவினர். முதல்வராயிருந்த பக்தவத்சலம் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியிலும், காங்கிரசு தலைவர் காமராஜர் விருதுநகர் தொகுதியிலும் தோல்வியடைந்தனர். திருவாடானை சட்ட மன்ற தொகுதியில் திரு.காரியமாணிக்கம் அம்பலம் அவர்கள் வெற்றி பெற்றார்.

நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் அதிர்ச்சி அலைகளையும்  ஆச்சரிய மலைகளையும் ஏற்படுத்தின.  மொத்தம் உள்ள 39 பாராளுமன்றத் தொகுதிகளில் தி.மு..,  சுதந்திரா கட்சி கூட்டணி 31 இடங்ககளைப் பிடித்து மத்தியில் ஆண்டு கொண்டு இருந்த காங்கிரசுக்கு 3 இடங்களை மட்டுமே விட்டு வைத்தன.  சிவகங்கை பாராளுமன்ற தொகுதியில் எங்கள் பூர்வீக கிராமத்துக்கு பக்கத்து கிராமமான கொம்புக்காரனேந்தலை சேர்ந்தவரும், எங்கள் தலைமுறை குடும்ப நண்பரும் ஆன  திரு.தா.கிருட்டிணன் 58,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

தேர்தல் முடிவுகள் பிப்ரவரி 23 ஆம் தேதி வெளியாகின. திமுக தலைவர் அண்ணாதுரை நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தென் சென்னைத் தொகுதியில் வெற்றி பெற்றிருந்தார். அவர் தன் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை பதவித்துறப்பு(ராஜினாமா) செய்து விட்டு, மார்ச் 6 ஆம் தேதி தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். பின்னர் 22 ஏப்ரலில் சட்டமன்ற மேலவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு சட்ட மன்ற உறுப்பினரானார்.

அறிஞர் அண்ணா தலைமையில் மிகக்குறைந்த அமைச்சர்களைக் கொண்ட அமைச்சு அமைக்கப்பட்டது.  திரு.நாவலர். இரா.நெடுஞ்செழியன், கலைஞர்.மு.கருணாநிதி, மதியழகன், திருமதி.சத்தியவாணி முத்து, நம்ம திருப்பத்தூரைச் சேர்ந்த திரு.மாதவன், திரு.கோவிந்தசாமி, சாதிக் பாட்சா, திரு.முத்துசாமி, N.V.நடராசன் ஆகியோர் அமைச்சர்களாகப் அன்றைய ஆளுனர், மேதகு.உஜ்ஜல் சிங் முன்னிலையில் பதவி ஏற்றுக் கொண்டனர்

அண்ணா அடுத்து சென்னை மாகாணம் என்ற பெயரை தமிழ்நாடு  என்று மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்த ஆரம்பித்தார். மதராஸ் மாகாணம், ‘தமிழ் நாடு  ஆயிற்று.  சுய மரியாதை திருமணங்கள் என்பது தி.மு..வினர் மட்டும் நடத்தும் தனி விழாக்களாக இருந்ததை சட்டபூர்வமாக்கினார். 

இரண்டாம் உலகத்தமிழ் மாநாட்டினை சென்னையில் நடத்திக் காட்டினார், அண்ணா. (முதல் உலகத் தமிழ் மாநாடு, கோலாலும்பூரில் நடந்தது).

முன்னர் இருந்த மும்மொழி திட்டத்தினை (தமிழ், ஆங்கிலம், இந்தி)  இருமொழித்திட்டமாக்கி தமிழ், மற்றும் ஆங்கிலம் மட்டுமே ஆட்சி மொழி என்று ஆக்கினார்.  அதற்கு முன்னர் எல்லாம் நகரத்தார் பள்ளியில் பயின்ற என் சித்தப்பா, ஏக், தோ, தீன், சார், பாஞ்ச் என்று இந்திப் பாடங்களை மனப்பாடம் செய்த காட்சிகளைக் கண்டு இருக்கிறேன்.  இந்தி பண்டிட் என்று ஒரு ஆசிரியர் பணி இடம் இருந்தது. அது காணாமல் போயிற்று.  என்ன அதிகப்படியாக ஒரு மொழியை அடுத்த தலைமுறைகளான நாங்கள் கற்றுக்கொள்ளாதது என்னைப் பொறுத்தவரை ஒரு குறைபாடுதான்.  நான் தற்போது வாழும் இந்தோனேசியாவில் என் போல இங்கு வந்து பணி புரியும் வட இந்தியருடன் இந்தோனேசிய மொழி மூலம் பேசுவது கண்டு, பாஷா இந்தோனேசியா என்ற நாடு தழுவிய ஒரே மொழி கொண்ட மக்கள் வியக்கத்தான் செய்கிறார்கள். எங்கள் நாட்டில் இணைப்பு மொழி ஆங்கிலம் நாங்கள் ஆங்கில மொழியில் விற்பன்னர்கள் என்று சமாளித்து கொள்கிறோம்.  (ஹி.. ஹி ஹி)

1968 செப்டெம்பரில் வயிற்று வலி என்று அவதிப்பட்ட அண்ணா அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் அவரின் உணவுக்குழாயில் புற்று நோய் காரணமாக சதை வளர்ச்சி இருப்பதைக் கண்டுபிடித்து அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு இருந்தார்.  அன்பர்களே கவனியுங்கள்.. அரசு மருத்துவமனையில் தான் முதலில் முதல் அமைச்சர் அனுமதிக்கப்பட்டார்.  இது போலவே, குண்டடி பட்ட M.G.R.ம் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் தான் சிகிச்சை பெற்றார். தனியார் மருத்துவமனைகள் அதன் பின்னர் தான் இந்த அளவுக்கு கொழுத்துப் பெருத்துப் போயின.  அரசு மருத்துவமனைகளின் தரம் தாழ்ந்ததால்.

1968 செப்டம்பரிலேயே, அறுவை சிகிச்சை அமெரிக்காவில் செய்து கொள்வது என்று முடிவானது. .  நியூயார்க், மெமொரியல் மருத்துவமனையில் அவரது பிறந்த நாளான செப்.15க்கு அடுத்த நாள் நடைபெற்றது.  அப்போது தினத்தந்தி செய்தித்தாளில் தினசரி அண்ணாவின் மருத்துவமனை செய்திகள்தான்.  காந்தி ரோடில் நகராட்சி பள்ளிக்கு எதிரில் உள்ள மூன்று வீடுகளில் கடைசி வீட்டு வயதான அம்மையார்.   கருதா ஊரணிக்கரையில் காய்கறிக் கடை வைத்து இருக்கும் காந்தி செட்டியாரின் தாயார்.  வயதான அம்மையார்.  என்னை தந்தி பேப்பரைக் கொடுத்து  அண்ணா பற்றிய செய்திகளை வாசித்துக்காட்ட சொல்வார்கள்.  நானும், அண்ணாவுக்கு குழாயில் உணவு செலுத்தப்பட்டது அண்ணா செய்தித்தாள் வாசித்தார், பட ரேடியோ (அப்போது தினத்தந்தியின் தமிழாக்கம் தொலைக்காட்சிக்கு) பார்த்தார் என்று வந்த செய்திகளை வாசித்துக் காண்பித்து இருக்கிறேன்.

நவம்பர் மாதம் அண்ணா தமிழகம் திரும்பினார்.  ஆனால் உடல் நிலையில் பழைய தெம்பு இல்லை.  1969 ஜனவரியில், தைப்பொங்கல் திருநாளன்று கலைவாணர் N.S.கிருஷ்ணன் அவர்களின் சிலையை (G.N.செட்டி ரோடில் உள்ளது) திறந்து வைத்தார்.  இதுதான் அண்ணா அவர்கள் கடைசியாகக் கலந்து கொண்ட பொது நிகழ்ச்சி.  


மீண்டும் தாங்கவொண்ணா வயிற்று வலியால் அவதி உற்றார்.  மருத்துவர்.மில்லர், தமிழகம் வந்து அடையாறு புற்று நோய் மருத்துவமனையில் சிகிச்சை அளித்தார். ஆயினும், இரக்கம் இல்லா இறப்பு எவரை விடும் இவ்வுலகில்.   ஃபிப்ரவரி  இரண்டாம் நாள் நள்ளிரவில் அமரர் ஆகி விட்டார்.  



தமிழகமே இப்படி ஒரு மரணத்தை கண்டதில்லை.  அனைத்து வீடுகளிலும் தங்கள் வீட்டில் ஒரு துக்கம் நிகழ்ந்தது போன்ற ஒரு உணர்வு.  தமிழகத்தின் கடைசிக் கோடி தமிழன் வரை சென்னை செல்ல வேண்டும் என்ற துடிப்பு. ஏகப்பட்ட தற்கொலைகள்.  இதன் உச்சமாக,  இரயில் கூரையேறிப்பயணமான மக்களில் 30க்கும் மேற்பட்டவர்கள், சிதம்பரம் அருகே பாலத்தின் மேற்கூரையில் மோதப்பட்டு உயிரிழந்தனர்.  அவரின் இறுதி மரியாதையில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வு  கின்னஸ் பட்டியலில் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இறுதி மரியாதையில் சுமார் 1 கோடியே 50 இலட்சம் பேர்  கலந்து கொண்டு இறுதி மரியாதை செலுத்தினர்.

அதே நேரம் இங்கே நமது நகர் தேவகோட்டையில், திரு. இராம.வெள்ளையன், (முன்னாள் நகர் மன்றத் தலைவர்), திருமதி. கமலம் செல்லத்துரை (முன்னாள் நகர் மன்ற உறுப்பினர்), உதய சூரியன் கருப்பையா, திரு.அங்குசாமி (முன்னாள் சட்டசபை உறுப்பினர்), திரு.முகமது காசிம் (முன்னாள் நகர் மன்றத்தலைவர்) மற்றும் பலரின் கூட்டாக அமைதிப் பேரணி நகர் முழுதும் சுற்றி வந்தது.  10 வயது நிரம்பாத நானும் அதில் கலந்து நகரில் வலம் வந்த நினைவு நன்றாகவே  இருக்கிறது. 

இந்த 4 பக்கம் எழுதிய பின்னர் தான், சென்ற பகுதியினைத்  தொடர முடிகிறது. (NO JUMPING IN BETWEEN OR SKIPPING OR CHANGING OF TRACK,,, THERE IS A CONNECTION).   இந்தக் கால கட்டத்தில் தான், எங்களின் சுற்றுலா அமைந்தது.  ஒரு வழியாக வீட்டில் அனுமதியும்,  வெகுமதியும் வாங்கி ஆகி விட்டது.  அண்ணாமலை சார் (அண்ணன்)  எங்களை ஒரு குழுவாக அழைத்து சென்றார்.  நானெல்லாம் சீனியர் மாணவன்.  ஆமாம், ஐந்து வகுப்புகள் உள்ள பள்ளியில் ஐந்தாம் வகுப்பு மாணவன் சீனியர் தானே.  நேராக தேவகோட்டை ரஸ்தாவில் இறங்க வைத்தார்.  புகை வண்டி பார்ப்பதற்காக.  புகை வண்டி வர இன்னும் நேரம் இருந்தது.  அங்கே இருந்து அமராவதி புதூர் நோக்கி வரிசை பிடித்து நடக்க வைத்தார். ( இப்ப உள்ள நம்ம பையன் கள்நடப்பார்களாக்கும்). அந்த வழியில் தொழிற் பேட்டைக்குள் அழைத்து சென்றார்.  உள்ளே பிளாஸ்டிக் டப்பாக்கள் செய்யும் ஆலை..  அட.. என்று பார்த்து கொண்டோம்.  அப்புறம் அப்படியேஅமராவதி புதூர் கோழிப்பண்ணை.   அங்கே இன்குபேட்டரைப் பார்த்து, கோழி இல்லாமல் முட்டை குஞ்சு பொறிக்கிற கருவியை பார் என்று அந்த வயதுக்கே உரிய ஆவலுடன் பார்த்த நினைவு இன்னும் இருக்கிறது,, நேற்றுப் போல.. 

திரும்ப அங்கே இருந்து நேராக காரைக்குடி வழியாக குன்றக்குடி செல்லும் பேருந்துவில் ஏறிப் பயணம்.  மாணவர்களின் ஏகோபித்த கருத்துக்கு இணங்க புகை வண்டி பார்க்கும் நிகழ்ச்சி நிரலில் இருந்து கழிக்கப்பட்டு விட்டது.  குன்றக்குடி மலையைப் பார்த்ததும்,  அவனவன் கதை விட ஆரம்பித்து விட்டான்,   வள்ளியும், முருகனும் இந்த இடத்தில் தான் பல்லாங்குழி விளையாடுவார்கள் என்று ஒருவன்  மற்றொருவன்,, இல்லை இல்லை,, பல்லாங்குழி இல்லை தாயக்கட்டம்..  மலைப்படிகளில் ஏற ஆரம்பிக்கும் போதே படிகளின் எண்ணிக்கை பற்றிய பட்டி மன்றம்.  அப்புறம் ஒவ்வொரு படியிலும் கால் வைக்கும் போதும் எண்ணிக்கொண்டே ஏறியது.. இடையில் எண்ணிக்கை மறந்து விட,   மனதுக்குள்ளேயே முருகப் பெருமானிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு தோராயமாய் ஒரு நம்பரை சொன்னது எல்லாம் இன்றும் நினைவில்.

ஒருவழியாக சண்முகத்தரசரை சரணம் அடைந்து,  சந்தனம் பூசி,  யானை பார்த்து,  யானை சாப்பிடுவதை பார்த்து,  யானையின் லத்திகளை எண்ணி திரும்ப பேருந்து ஏகினோம்.   இப்போது எங்களுக்கு பள்ளித் தாளாளர் வீரப்ப செட்டியார் ( பெரிய ஆணா,,,, சின்ன ஆணா அவர்களின் தந்தை)  அவர்களிடம் இருந்து TREAT.  நேராக மாணவர்களை காரைக்குடி சரஸ்வதி தியேட்டருக்கு அழைத்து சென்றார்கள்.  அங்கே எங்கள் அனைவருக்கும் காராபூந்தி பொட்டலம் தீனியாக.. அப்புறம் தான் க்ளைமாக்ஸ்.  அதறகுத்தானே முதல் 3 பக்கங்களில் நினைவு மடிப்பினைப் பிரித்துப் போட்ட நாட்டு நடப்புகள்..

ஆம்.. அறிஞர் அண்ணா அவர்களின் இறுதி யாத்திரை நியூஸ் ரீல் நடைபெறும் படத்தின் இடைவேளையில் காண்பிக்கப் படும் என்று காரைக்குடி முழுக்க விளம்பரங்கள்.  காரைக்குடியில் சரஸ்வதி தியேட்டரில் மட்டுமே முதலில் ஒரு ப்ரிண்ட் வந்திருக்கிறது.  .  இது தேவகோட்டைக்கு எல்லாம் பின்னர் தான் வரும்.  இதனைக் காணத்தான் எங்களை அழைத்து சென்று இருக்கிறார்கள்.  எங்களுக்கு பெருமை பிடிபட வில்லை.  தேவகோட்டையில் வந்து எல்லோரிடமும் பெருமையாக சொல்லிக் கொள்ளலாமே!.  கண்களில் கண்ணீர் வழிந்து ஓட மக்கள் அந்த நீயூஸ் ரீலை பார்க்கிறார்கள்.  நாங்களும் தான்.  அண்ணா, பதவி ஏற்கிறார்.. உலகத்தமிழ் மாநாடு நடைபெறுகிறது.  சிலைகள் திறக்கப் படுகின்றன.  மலர்க்கிரீடம் சூட்டப்பட்ட அண்ணா மலராகச் சிரிக்கின்றார்.  அலங்கார வண்டிகள் அணிவகுக்கின்றன.  அண்ணவைப் பற்றிய சிறு வாழ்கை வரலாற்றுக் குறிப்புடன் ஆரம்பிக்கிற படம்,  கட்டுக்கு  அடங்காத மக்கள் வெள்ளம் சூழ அண்ணா இறுதி யாத்திரை போகின்ற காட்சிகளில் உச்சம் பெற்று, சந்தனப் பெட்டிக்குள் அண்ணா உறங்கி கடற்கரையில் அடக்கம் ஆகின்ற வரை காட்சிகளாக விரிகின்றது.

பின்புலத்தில், கர கர குரலில்:

பூவிதழின் மென்மையினும் மென்மையான
புனித உள்ளம்- - அன்பு உள்ளம்
அரவணைக்கும் அன்னை உள்ளம்! - அவர்
மலர் இதழ்கள் தமிழ் பேசும்
மா, பலா, வாழையெனும் முக்கனியும் தோற்றுவிடும்-!

விழிமலர்கள் வேலாகும் - வாளாகும்
தீங்கொன்று தமிழ்த் தாய்க்கு வருகுதென்றால்!
கால் மலர்கள் வாடிடினும் அவர் கடும் பயணம் நிற்காது;

கைமலர்கள் பிணைத்து நிற்கும், தம்பியரை, கழகத்தை
அம் மலரே எதிரிகளை மன்னித்து
நெற்கதிர் போல் தலை நாணச் செய்துவிடும்

மக்களாட்சி மலர் குலுங்க
சமதர்மப்பூ மணக்க
தாய்மொழித் தமிழே வாழ்வுப் பொழிலாக
ஆடிவரும் தென்றல்
நாடிவரும் பூமுடியே! புகழ் முடியே! உமைத்
தேடிவரும் வாழ்த்துக் குவியலிலே - தினம்,
பாடிவரும் வண்டாக நான் பறப்பேன்
உனைக் காக்க எனைத் துறப்பேன்-என், -
ஒரு கோடி தமிழ் இளைஞர்
பாடிநின்ற பாட்டுக்குப் பெருந்தலைவன்

என இதயத்தை பிழியும் தமிழ் செவி வழியே புகுந்து உயிரை உருக்குகிறது.  ஒரு வழியாக இனித்த உதயத்தில் வீடு விட்டுக் கிளம்பி, கனத்த இதயத்துடன் வீடு திரும்பினோம்.
மற்றவை அடுத்து……

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தென் கிழக்கில் .. தெக்கத்தியான் (தெற்கத்தியான்) 21. தெக்கணமும் அதிற் சிறந்த திராவிட நல் திருநாடு'

22.தென்னாடும் தென் கிழக்கும்....இந்தோனேசிய வரலாற்று ஆவணங்களில் இருந்து....தென் கிழக்கில் ..

அசை போடும் ..தேவகோட்டை ஞாபகங்கள்-பகுதி: 60