அசை போடும் ..தேவகோட்டை ஞாபகங்கள்-பகுதி: 34


அசை போடும் ..தேவகோட்டை ஞாபகங்கள்
கவிக்கிறுக்கன் முத்துமணி
பகுதி: 34
14-12-2017

நகரச்சிவன் கோவில் கிழக்கு வீதி, கந்தர் சட்டி திடலைப் போலவே பல பெரும் கலைஞர்களை,புலவர்களை, கவிஞர்களை, இலக்கிய செல்வர்களை, இசை மீட்டிய மேதைகளை நாட்டிய நங்கைகளை,நர்த்தகிகளை, அறிஞர்களை கண்ட வரலாற்று வீதி.  ஆம் , அங்குதான் கந்தர் சட்டி விழா கழக அலுவலகம் பன்னெடுங்காலமாக இயங்கி கொண்டு இருக்கிறது.  இங்கு வந்து தங்கி விருந்து அருந்தாத கலைஞர்கள் தமிழகத்தில் இல்லை என்றே சொல்லலாம்.

அதற்கு மேல் வருடந்தோறும் நடை பெறும் விஜயதசமி மகர்  நோன்பு அம்பு விடும் நிகழ்வு இங்குதான் நடைபெறும் என்பதை முன்பே பார்த்து விட்டோம்.  புண்ணிய மண்.  இந்த வீதியில்  தான் பட்டுக் குருக்கள் இல்லம்.  தேஜஸ் மிகுந்த இறை அருள் பொலியும் முகம் கொண்டவர் திரு.பட்டுக்குருக்கள் .  90களில் ஒருமுறை சிங்கப்பூர், செரூங்கண் சாலையில் உள்ள அருள்மிகு பத்ரகாளி அம்மன் கோவிலுக்கு,இந்தோனேசியாவில் இருந்து சென்ற  போது, திரு. பட்டுக்குருக்கள்  அவர்களை அந்த கோவிலில் பார்த்தேன்.  நம்ம ஊர் ஆட்களை இந்தோனேசியாவில் பார்ப்பதே அரிது, அந்த காலகட்டத்தில்.  சிங்கப்பூர் வந்தாலே முதலில் செல்வது கோமள விலாசுக்கு தோசை சாப்பிடவும், திரும்ப இந்தோனேசியாவுக்கு கொண்டு வர இட்லி அரிசியும், உளுந்தம் பருப்பும் வாங்குவதுதான்.   (தற்போது எல்லாம் கிடைக்கிறது).   இந்த நிலையில் நம்ம பட்டுக் குருக்களை கண்டவுடன் உணர்ச்சி மேலீட்டால், அவர் காலை தொட்டு நமஸ்கரித்தேன்.   ஓரடி தள்ளி பின்னால் போனவர், மிக அடக்கத்துடன், கோவிலில் இறைவனைத் தவிர யாரையும் வணங்க கூடாது என்றார்.  இதை அவரிடம் தான் கற்றேன்.

இன்னொரு முக்கியமான சிவன் கோவில் கிழக்கு தெருவில் உள்ள வீடு எங்கள் கல்லூரி விரிவுரையாளர் திரு.திருநாவுக்கரசு அவர்கள் குடியிருந்த மாடி வீடு. இதற்கு முன், நான் திருவேங்கடமுடையான் பள்ளியில் படித்த காலத்தில், இந்த வீட்டில் நில அளவை (சர்வே ) அலுவலகம் இருந்தது.  கிராப் காகிதத்தில் நிலங்களின் படங்களை கூறிய முனை பென்சில்கள் வைத்து வரைந்து கொண்டு இருப்பார்கள்.  தண்ணீர் குடிக்க அங்கு செல்வோம்.  அப்படியே அவர்கள் வரைவதை வேடிக்கை பார்ப்பதும் உண்டு.  பின்னர் கல்லூரி காலத்தில் அந்த வீடு எங்களுக்கு , (நண்பர் பட்டாளத்துக்கு ) இரண்டாவது வீடு போல் ஆனது .  ஒரு நண்பராக பழகியவர் திருநாவுக்கரசு அவர்கள்.  இவர் பற்றி இப்போது எழுத வேண்டாம், இப்போது இன்னும் பள்ளிப் பருவத்தில் தான் இருக்கிறேன்.  பின்னர் கல்லூரி படிக்கும் வயதில் விரிவுரையாளர் பற்றி விரிவாகவே பார்க்கலாம்.

அப்புறம் திருவேங்கடமுடையான் பள்ளியில் ஆசிரியராக பணி  ஆற்றிய திரு.நவநீதன் சார் அவர்கள் இல்லம் இங்கு இருந்தது.  இன்னும் தெற்கு நோக்கி வந்தால் கடைசி வீடு கம்பிகள் வைத்த  இரண்டு அடுக்கு பழைய வீடு.  அதன் இடது புறம்  சறுக்கலாக கண்மாய்க்குள் செல்ல கற்களால் கட்டப்பட்ட அமைப்பு மீண்டும்.  இந்த வீட்டில் இருந்த நண்பர் லட்சுமணன் கல்லூரியில் B .Sc., (Maths ) படித்து கொண்டு இருந்தார்.  இவர் படிப்பதற்காக குதிரைப்பாதை சாலையில் பவானியர்  வீட்டின் எதிரில் 'சிதம்பர விலாஸ்'என்ற வீட்டில் ஏற்பாடு செய்து இருந்தார்கள்.  இந்த வீட்டில், அவருடன் படிக்கிறேன் பேர்வழி என்று நான்,செல்வம் என்ற முத்துக்கருப்பன் ( பாண்டியன் கிராம வங்கி ), வேலுசாமி (நாகை வாசம் தற்போது ), நம்ம தமிழ் கொண்டல்  .குமார் எல்லோரின் வாசஸ்தலம் ஆனது , கொஞ்ச காலம்.  இந்த இடம் பற்றி அறிந்து கொள்ள சற்று முன் தமிழ் கொண்டல் குமார் அவர்களை தொடர்பு கொண்டேன்.  இது பின்னர் K M Jதிருமண மண்டபம் ஆனதாகவும், தற்போது வீட்டு மனைகளாக மாற்றப்பட்டு இருப்பதாகவும் கேள்விப்பட்டேன்.

சரி, இப்ப நாம் மீண்டும் சிவன் கோவில் கிழக்குத் தெரு போய்விடுவோம். அந்த கிழக்குத் தெருவும், தெற்குத் தெருவும் சேரும் மூலையில், தேவகோட்டை நகராட்சிக்குச் சொந்தமான ஒரு இடம்.  நகரின் துப்புரவு உபகரணங்கள் அங்கு வைக்கப் பட்டிருக்கும்.  அப்போதெல்லாம், நகரின் சாக்கடையை மனிதர்கள், மாட்டு வண்டியில் மரப்பீப்பாய் பொருத்தப்பட்ட வண்டியில் வாளிகளால் முகரப்பட்டு ஏற்றப்படும்.  அவை இந்த காம்பவுண்டுக்குள் வளர்க்கப்படும் தென்னை மரத்தூர்களில் திறந்து விடப்படும். மனிதக்கழிவுகளை, மனிதனே அள்ளிய மனிதாபிமானம் இல்லாத செயலும் நடைபெற்றது, அந்த காலகட்டத்தில்.

இந்தக் காம்பவுண்டுக்கு அருகில் எங்கள் திருவேங்கடமுடையான் பள்ளி.  இங்கு 6ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை பயின்றேன். புனித ஜான்ஸ் பள்ளியில், விதைத்து, சைவப்பிரகாச வித்தியாசாலையில் நாற்றாய் நடப்பட்டு, இந்த திருவேங்கடமுடையான் பள்ளியில் உரமிடப்பட்டு வளர்க்கப்பட்டேன் என்றுதான் சொல்ல வேண்டும்.  என்னுள் இருந்த தமிழ் ஊற்றுக்கண்ணைத் திறந்து விட்டது இந்தப் பள்ளிதான்.  நிறுவுனர் திரு.சுந்தரராஜன்  ஐயங்கார் மற்றும் தலைமை ஆசிரியர் திரு.தெய்வசிகாமணி அவர்கள் பற்றி சென்ற பகுதிகளில் பார்த்தோம்.  இந்தப் பள்ளி பெருந்தலைவர் காமராசர் அவர்களால் திறந்து வைக்கப்பெற்றது.  அதனால், காமராசர் ஹால் என்றே ஒரு தொகுதி கட்டிடத்துக்குப் பெயர் வைக்கப்பட்டிருக்கும்.  உயர்ந்த வாசல் படி.. இரண்டு பக்கமும் யானைகள் தன் துதிக்கையில் தாமரை மலரைத் தாங்கியபடி படுத்து இருக்கும் சிமெண்ட் சுதை வேலை.  பள்ளியின் இடது புறக் காம்பவுண்டுக்குள் உயர்ந்த அசோகா மரம்.  (இன்னும் அப்படியே இருக்கிறது).



 நடுவில் ஒரு தொகுப்பு,  இடது புறமும் வலது புறமும் வகுப்பு அறைகள்.  பின் பகுதியில் நீண்ட காமராசர் ஹால்.  இடது புறத் தொகுப்பின் கடைசியில் நில மட்டம் கொஞ்சம் கீழே இறங்கி நெசவு (WEAVING)  வகுப்பு.  ஒரு கைத்தறி பாவுடன் இருக்கும்.



அருமையான ஆசிரியர் குழாம்.  எனக்கு 6 ஆம் வகுப்பு ஆசிரியர், திரு.கிருஷ்ண மூர்த்தி.  பல் முழுவதும் மஞ்சள் காவி படர்ந்து இருக்கும். ஜிப்பா அணிந்து, தோளில் அங்கவஸ்திரம் மடித்துப் போட்டு இருப்பார்.  ஆங்கில எழுத்துக்கள் அழகான கூட்டெழுத்தில் கரும்பலகையில் எழுதுவார்.  காபிப் பிரியர்.  ஒரு தெர்மொஸ் ஃப்ளாஸ்க் வைத்து இருப்பார், அதில் சுடச்சுட காபி வாங்கி அருந்துவதில் அவருக்கு அலாதியான சுகம்..  1969~ 1970 ல் நான் 6ஆம் வகுப்புப் படிக்கிறேன் அவரிடம்.  அந்த நேரம், திராவிட  முன்னேற்ற கழக ஆட்சி, பிராமணர்களுக்கு எதிரானவர்கள் திராவிட முன்னேற்ற கழகம் என்ற எண்ணம் வெகுவாக இருந்த நேரம்.  ஆனால், தமிழகம் எங்கும், அறிஞர் அண்ணா அவர்களின் உருவமும்,  நடு வகிடு எடுத்த சுருள் முடியுடன் கலைஞர் கருணாநிதி அவர்கள் சிரிக்கின்ற உருவமும் கரிக்கோடுகளால் கூட சுவர்களை அலங்கரித்த நேரம்.  போதாக்குறைக்கு, புரட்சி நடிகர் படங்களும், பாடல்களும் கழகத்தை அசைக்க முடியாத கோட்டையாக நிலைக்க வைத்து இருந்த நேரம்.  இந்த கிருஷ்ணமூர்த்தி சாருக்கு தி.மு.. என்றாலே அறவே பிடிக்காது.  எனக்குத் தமிழ் மேல் அளவு கடந்த காதல் உருவான நேரம்.  கலைஞரின் வசனங்களை வாங்கிப் படித்து பேசிக்காட்டுவதில் மகிழும் காலம்.  இந்த நேரம் கலைஞர், வெள்ளையன் ஊரணி பின்புறம், தியாகிகள் ரோடு ஆரம்பிக்கும் இடமான ஸ்ரீநிவாசா பள்ளி அருகில் அமைக்கப்பட்ட மேடையில் பேச வருகிறார். அதற்கு முன் கலைஞர் கருணாநிதியை நேரில் பார்த்தது இல்லை. கூட்டம் பகல் நேரம், மதியம் 2 மணிக்கு மேல்.  வகுப்புக்கு வராமல் மதியம் நேராக ஸ்ரீநிவாசா பள்ளி நோக்கி சென்று விட்டேன்.

அது அரசு விழா, கருணாநிதி வந்தார், பொன்னாடைகள் போர்த்தப்பட்டன, மலர் மாலைகள் மாணிக்க மாலை ஆயின (இன்னும் ஒரு மாணிக்க மாலையைக் கூட நான் பார்க்கவில்லை).  உடன்பிறப்புக்கள் ஆரவாரித்தனர். முன் வரிசையில் உட்கார்ந்து கலைஞர் உரைக்காக காதுகளைத் திறந்து உட்கார்ந்து இருக்கிறேன்.  கரகரத்த குரலில், பரபரத்த தமிழ்.அவர் நாவின் சுளிவுக்கு எல்லாம் களிநடக்கும் தமிழ், வாயின் அசைவுக்குள் வார்த்தைகளாக மாறுகின்ற மந்திரத்தமிழ் கேட்க கேட்க கட்டுண்டு போகின்ற கற்கண்டு சொற்கொண்டு, பூச்செண்டு கண்ட வண்டாக மாறினேன்.  அடுத்த நாள் வகுப்பு வந்ததும், நேற்று ஏன் மதியம் வரவில்லை என்று ஆசிரியர் கேட்டார், ஏதோ சொன்னேன்.. அதற்குள், யாரோ போட்டுக் கொடுத்து விட்டான், ஐந்தாம் படை.  அவருக்கு கோபம் தலைக்கு மேல் வந்து விட்டது வகுப்புக்கு வராதது கூடக் குற்றம் இல்லை பொய் சொல்லி விட்டேன், இருப்பினும் அது வயது கருதி மன்னிக்கப் படலாம்.. சென்று சேர்ந்த இடம் தி.மு.. காரர் கருணநிதியின் பேச்சைக் கேட்கவா?  மன்னிக்க முடியாது ஒரு பிரம்பு வைத்து இருப்பார்.  எடுத்தார், ஏசு ஏசு என் ஏசினார் பிரம்பை வீசு வீசு என வீசினார் துவம்சம் செய்து விட்டு காபி குடிக்க ஃப்ளாஸ்கைத் தேடினார். எனக்கோ தன்னிரக்கம் தாளவில்லை.

சைவப்பிரகாச வித்தியாசாலையில் இருந்து தொடர்ந்து வரும் நண்பன், MGR ரசிகன், தங்கராசு (இவர் தேவகோட்டையின் லோடுமேன் சங்கத் தலைவராய் இருந்ததாக, அன்பு நண்பன் பாரிசில் வாழும் முத்துசாமி மூலம் சென்ற பதிவுகளின் பின்னூட்டத்தில் அறிந்து கொண்டேன்) விடம் புலம்பினேன். அவராலும், நண்பன் அடி வாங்கியதைத் தாங்க முடியவில்லை.  சற்றுப் பொறுவகுப்பு முடியட்டும்.. அனைவரும் வீடு திரும்பட்டும் என்றார்.  சரி என்ன செய்யப் போகிறார் என்று பார்ப்போம் என்று நானும் இருந்தேன்.  பள்ளி முடிந்தது. அனைவரும் பள்ளி விட்டுச் சென்று விட்டனர்.  ஆசிரியர் பிரம்பை எங்கள் கைககளுக்கு எட்டாத வகையில் அவரது டெஸ்கில் வைத்து பூட்டி வைத்து சென்று விடுவார்.  இந்த தங்கராசு, ‘இந்த பிரம்பு இருந்தால் தானே இவர் நம்மை அடிப்பார்,  இப்ப பிரம்பு என்ன ஆகப்போகிறது பார்.. என்றபடி,  டெஸ்கை எப்படியோ திறந்து பிரம்பை எடுத்து, மெதுவாக யாரும் இல்லை வெளியே என்று பார்த்தபடி நேராக எதிரே உள்ள சிவன் கோவில் படித்துறைக்கு சென்றார்.  நீர் நிறைந்து இருந்தது குளம்.  தண்ணீருக்குள் பிரம்புடன் இறங்கி குளத்தின் நடு மையம் வரை நீந்தினார்.  அங்கே பிரம்பை விட்டு விட்டு திரும்பக் கரை சேர்ந்தார்.  அவ்வளவு தான் முத்துமணி.. இனி இவர் எப்படி நம்மை அடிப்பார் என்று பார்ப்போம், என்றபடி.  நிம்மதியாக அவரவர் இல்லம் சேர்ந்தோம்.



அடுத்த நாள் வகுப்பு வந்ததுமே கிருஷ்ண்மூர்த்தி சார் எள்ளும் கொள்ளும் வெடிக்கும் எரிச்சல் முகத்துடன் எல்லோரும் சேர்ந்து ஆளுக்கு 10 பைசா போட்டு நாளைக்கே புதிய பிரம்பு வாங்கி என் கையில் கொடுத்து விட வேண்டும் என்றார்.  எல்லோருக்கும் தண்டனை 10 பைசா  6ஆம் வகுப்பில் படித்த அனைத்து நண்பர்களும் நினைவில் இல்லாவிட்டாலும், பலர் மனதில் இன்றும் வாழ்கிறார்கள்.  அவர்களது புகைப்படம் இத்துடன் இணைத்து உள்ளேன்.  அவர்கள் பெயரோ, அவர்களைப் பற்றிய தகவலோ எதுவும் பதிவு செய்யாமல்.  அன்பு தேவகோட்டை நண்பர்கள், கூர்ந்து கவனித்து, உங்களால் அவர்களைப் பற்றிக் கணிக்க முடிந்தால் பின்னூட்டம் கொடுக்கவும்.  அடுத்த பகுதிகளில் அவர்களைப் பற்றி என் நினைவு மலர்களைக் கொய்து மாலை ஆக்குகிறேன்.

அப்போது எங்களுக்கு நெசவு வகுப்பு உண்டு.  மாணிக்கம் சார்,   இன்னும் அவர் வகுப்பு எடுத்து, நெசவின் பாவு பற்றியும், தறியின் பாகங்கள் பற்றியும், ஊடு நூல் இடது வலதாக ஓடும் வகையினையும் அனுபவித்து கற்றுக்கொடுத்த நினைவு இருக்கிறது.  இங்கு பெரிய நெசவாலைகளில், AIR JET, WATER JET, RAPIER LOOMS ஓடுவதில் RPM, Efficiency, Utilisation என்று கணக்கு இடும்போது, அவர் அடிப்படைக் கல்வியினை வழங்கியதை நன்றியுடன் நினைத்துக் கொள்கிறேன்.

அடுத்து என் மனம் கவர்ந்த ஆசிரியர்கள்:
திரு.சற்குணம் சார்:  இலக்கியவாதி.. தேவகோட்டை கலவைச்சோறு கலந்து விருந்து அளிக்கும் தம்பி, எபினேசர் மனோகரின் தந்தை. எபியின் தாயும் ஆசிரியை.. கல்விச்சேவை செய்த அன்புத்தம்பதியினர். தம்பி எபி தவமாய் தவமிருந்து வந்த தவப்புதல்வன்.  அவர் சிறு பையனாக சிவன் கோவில் பின்புறம் அவர்கள் குடி இருந்த வீட்டின் வாசலில் அமர்ந்து இருந்த கோலம் மனதில் நிழலாடுகிறது.  சற்குணம் சார், பள்ளியின் ஆண்டு விழாவுக்கு நாடகங்கள் எழுதும் பணியினை முழுமையாக எடுத்துக் கொள்வார். அவர் எழுதி, இயக்கிய தேரோட்டி மகன் (கர்ணன் கதை) நாடக ஒத்திகை வீவிங்க் வகுப்பு அறையில் நடை பெற்றது ஞாபகம் இருக்கிறது.  இந்த நாடகத்தில் ஆசிரியர்கள் நடித்தனர். திரு.ஹரிஹரன் சார், நவநீதன் சார் ஆகியோர் நடித்தனர்.  அப்போது தேர்தலில் வெற்றி பெற்ற தமிழக சட்டசபை உறுப்பினர் ஐயா.கரியமாணிக்கம் அமபலம் அவர்கள் தலைமை வகித்தார்கள்.



அடுத்து ஒரு ஆண்டு விழா. மாணவர்கள் நடித்தார்கள்.  பிரகலாதன் கதை. வகுப்புத்தோழன் ஒரு வசனம் பேச வேண்டும், இப்படி, “ அவன் வகுத்த வழி அதுதான் விதி…”  அதை அவர், அவன் வயித்து வலி அதுதான் விதி  என்று திரும்பத் திரும்ப எத்தனை ஒத்திகை பார்த்தாலும் தவறாகச் சொல்லிக்கொண்டு இருந்தார்.  சற்குணம் சார்,  உனக்கு வயிற்று வலி எனக்குத் தலை வலி  என்று சொல்லிச் சிரித்தார்.

திரு.ஜான் சார்:  ஆங்கிலம் அழகாக கற்றுத்தந்த மேதை.  Active Voice to Passive Voice, Direct to Indirect Speech என்று ஆங்கில இலக்கணம் ஆணி அடித்தது போல் மனதில் அடித்து வைத்தவர்.  விரலில் நகத்தால் அழுத்தித் துடிக்க வைத்து விடுவார்.  இவரது துணைவியாரும் ஆசிரியை.  பாவம், பேருந்தில் அடிபட்டு இறந்து விட்டார்.

திருமதி.சிவகாம சுந்தரி : மிகத் தெளிவான உச்சரிப்புடன் பாடம் நடத்துவார்.  இவர், விஞ்ஞானம் அழகாகப் போதிப்பார்.  இவர் இரத்தம் எப்படி காற்றுப் பட்டவுடன் உறைகிறதுஇரத்தத்தில் உள்ள வைப்ரினோஜன், ஃபைபிரினொஜானாக மாறி வலை போல படர்ந்து இரத்தம் மேலும் வெளி வராமல் தடுக்கிறது என்று வகுப்பில் பாடம் நடத்தியது, நேற்றுப் போல இருக்கிறது. 



திரு.தாமஸ் அவர்கள்:   என் கதாநாயகன் (HERO). திராவிட இயக்க சிந்தனையாளர்.  அனைவரிலும் மாறு பட்டவர். நண்பனாகப் பழகுபவர்.  அட்டைப்பெட்டி அருணாசலம் வீட்டில் குடி இருந்தார். தமிழ் பால் ஆர்வம் ஏற்படுத்திய முதல் ஆசான்.  அப்போது தமிழக அரசின் சார்பாக (கலைஞர் முதல்வர்)  தமிழரசு  என்ற பத்திரிகை வெளிவந்து கொண்டு இருந்தது.   எங்களை பொது சந்தா கட்டி அதனை படிக்க வைப்பார். தன் வீட்டில் கிராமத்தில் இருந்து வரும் மாணவர்களை தங்க வைத்து படிக்க வைப்பார்.  எங்களை எல்லாம் தன் வீட்டுக்கு வர வைத்து அங்கு படிக்க வைப்பார்.  அருமையாக ஆர்மோனியம்  வாசிப்பார்.  பள்ளி விழாக்களில் இவர் தான் இசை அமைப்பாளர்.  வாரம் ஒரு முறை இலக்கியக் கூட்டம் வகுப்பில் நடத்துவார்.  யார் வேண்டுமானாலும் ஒரு தலைப்பை எடுத்துப் பேசலாம்.  தனது மகன் மனோகர் அவர்களையும் இந்த இலக்கிய நிகழ்வு நடக்கும் நேரத்தில் வர வைத்துப் பேச வைப்பார்.  இவரது மனைவியும்  ஆசிரியை, செயின்ட்.மேரிஸ் பள்ளியில். மகள் ராணி, இவரும் தாய் தந்தையைப் போல நல்ல ஞானம் உள்ளவர். நன்கு நடனம் ஆடுவார்.  உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம் தயாரிப்பில் இருந்த நேரம்.  பாடல் எழுதி இருக்கிறார்கள்.  அந்த நேரம் முதன் முதலில் அவர் வகுப்பில் ஒரு மாணவனைத் திருத்த சொல்கிறார், ‘சிரித்து வாழ வேண்டும்,,, பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே.  இது மக்கள் திலகம் படத்தின் பாடல், உனக்காகத்தான் எழுதி இருக்கிறார்கள் என்று



திரு.சுப்பிரமணியன் (உடற்கல்வி ஆசிரியர்): நான் படிக்கும் நேரம் இவர் மிக மிக இளைஞர்.  பொதுவாக உடற்கல்விக்கு என PHYSICAL EDUCATION COURSE  படித்த ஆசிரியர்களை உயர் நிலைப்பள்ளியில் தான் வைத்து இருப்பார்கள்.  ஆனால் அந்த நாளிலேயே, திரு.தெய்வசிகாமணி, தலைமை ஆசிரியர் அவர்கள் தனது பள்ளியினை தரமாக நடத்தினார்.  அதனால் தான் 8 வகுப்பு வரை மட்டுமே உள்ள தனது பள்ளியிலும் உடற்கல்விக் கென ஒரு ஆசிரியரை நியமித்து இருந்தார்.  திரு.சுப்பிரமணியன், வேட்டி உடுத்தி, ஜிப்பா போட்டு, அங்கவஸ்திரம் தரித்த மற்ற ஆசிரியர்களிடம் இருந்து வேறுபட்டு, பான்ட், சர்ட் அணிந்து சம்மர் கட்டிங்க் செய்த சிகை அலங்காரத்தோடு சிக்கென இருப்பார்.  அடிக்கடி மாலை வகுப்பில் எங்களுக்கு ட்ரில் சொல்லிக் கொடுப்பார்.  மற்ற நேரங்களில் கபடிப்போட்டி ரெஃபெரீயாக இவரைப் பார்ப்போம்.  அன்பு ஆசிரியர்  இன்னும் நெடு நாள் வாழ வேண்டியவர், அதற்குள் அமரராகி விட்டார்.  அவரது மகன் இராமனாதன் என்னுடன் முகநூலில் நண்பராக இருக்கிறார்.

திருமதி.கோமதி டீச்சர்:  எனது ஆசிரியை, மற்றும் எனது வகுப்புத்தோழன், திரு ஸ்ரீதர் (பாண்டியன் கிராம வங்கி, காரியாபட்டி) அவர்களின் தாயார். கோமதி டீச்சரின் கணவர் திரு.வெங்கடகிருஷ்ணனும் ஆசிரியர்.  ஆழ்ந்த அறிவார்த்தமான ஆசிரியை.

மற்றவை அடுத்த பகுதியில் பார்ப்போமா அன்பர்களே

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தென் கிழக்கில் .. தெக்கத்தியான் (தெற்கத்தியான்) 21. தெக்கணமும் அதிற் சிறந்த திராவிட நல் திருநாடு'

22.தென்னாடும் தென் கிழக்கும்....இந்தோனேசிய வரலாற்று ஆவணங்களில் இருந்து....தென் கிழக்கில் ..

அசை போடும் ..தேவகோட்டை ஞாபகங்கள்-பகுதி: 60