18.கலிங்கத்துப் பரணி

 

18.   கலிங்கத்துப் பரணி

தென் கிழக்கில் .. தெக்கத்தியான் (தெற்கத்தியான்)

எங்கே சென்றாலும் தேடி இணைக்கும் இனிய கதை இது-

அன்புத் தமிழ்ச் சொந்தங்களே .....

 

எகிப்தில் இருந்து கடல்  வணிக வழிகளை கி.பி. 60 ஆம் ஆண்டில் கிரேக்க மொழியில் எழுதப்பட்ட 'The Periplus of the Erythraean Sea' எழுதப்பட்ட நூலில் குறிப்பிடப்பட்டு இருக்கும் விவரங்களைக் கொண்டு அறியலாம்.  பாரதத்தின் துறை முக நகரங்களின்  முதல் நூற்றாண்டு கால வடிவங்களை நமது கண் முன்னே காட்சிகளாய் விரிக்கும் இந்த வரிகளைப் பாருங்கள்.


இறக்குமதிச் சந்தைகள் நிறைந்த  பெருந் துறைமுகங்களில் 'தமிரிகர்' (தமிழர்) மற்றும் வட நாடுகளில் இருந்து வந்திருந்த கலங்கள் நிறுத்தப்பட்டிருந்தன.    இவற்றில் முக்கியமாக, தமிரிகா (தமிழகம்) கரையோரம் உள்ள  ( வரிசைக் கிரமப்படி...) சமரா/CAMARA  (பூம்புகார்), அடுத்து  போதுகா/PODUCA (புதுச்சேரி )பின்னர் சோபாத்மா /SOPATMA (மரக்காணம்)  பகுதிகளின் கடற்கலங்கள்.  அவற்றில் மிகப்பெரிய தடி மரங்களை பிணைத்துக் கட்டப்பெற்ற   கப்பல்களான 'சங்கரா' (SANGARA ) எனும் கலங்கள் மற்றும் கங்கை முதல் கிரேக்கத்தின் கிரிசி (CHRYSE) வரை செல்லும் தகுதியுடைய சோழாந்தியம் (COLANDIA ) என்ற கப்பல்களும் அடக்கம்.

பாரதத்தின் கிழக்குக் கடற்கரையைப் பொறுத்த வரை, முதலாம் நூற்றாண்டில் வாழந்த  தாலமி (Ptolemy)யின் கூற்றுப்படி கடற்கரைகளை  ஒட்டியே நாவாய்கள் செலுத்தப்பட்டன.  கலிங்கத்தின் தாம்ரலிப்தி (Tamralipti)யில் இருந்து வங்காள விரி குடாவின் அனைத்து கடற்கரைப் பட்டினங்களையும் ஒட்டி பெருங்கலங்கள் செலுத்தப்பட்டு இருக்கின்றன.

ரோமானியப் பேரரசின் எகிப்து பகுதியில் கி.பி. 100 முதல் கி.பி. 170 வரை  வாழந்த வானவியல் மற்றும் கணித அறிஞர்  தாலமி (PTOLEMY) யின் கூற்றுப்படி இன்றைய ஒரிசா மாநிலத்தின் (அன்றைய கலிங்கம்) பாலூரா (PALOURA) என்ற துறைமுகத்தில் இருந்து தென் கிழக்கு நாடுகளுக்கு கடற் பயணம் தொடங்கி இருக்கிறது.  தாலமி குறிப்பிடும் பாலூரா, இன்றைக்கு ஒரிசா மாநிலத்தின் கஞ்சம்  (GANJAM )மாவட்டத்தில் ரம்பா (RAMBHA HARBOUR ) துறைமுகத்துக்கும் ருஷிகுல்யா (RUSHYKULYA ) முகத்துவாரத்துக்கும் இடையே ஒரு சிறிய கிராமமாக காட்சி தருகிறது.  2000 ஆண்டுகளுக்கு முன்னர் பெரும் பட்டினங்களாக விளங்கிய எத்தனை இடங்கள் இன்றைக்கு குக்கிராமங்களாக இருளடைந்து கிடக்கின்றனவோ ?. ஆனால் தமிழகத்தின் சோழ மண்டலக் கடற்கரைகளில்  இருந்தும் கீழ்த்திசை நாடான சுமத்ராவுக்கு  (இன்றைய இந்தோனேசியாவின் ஒரு பகுதி ) இலங்கை மற்றும் அந்தமான் நிகோபார் தீவுகளைத்தொட்டு நேரடி கப்பல் (DIRECT VESSEL ) போக்குவரத்து நடந்து இருக்கிறது. 

சுமத்ராவில் அன்றைக்கு பெயருடன் விளங்கிய முக்கியமான துறைமுகம் 'ஸ்ரீ விஜயா'.  மொத்தத்தில் 'மலேயா' பகுதி அதன் பூகோள அமைப்பின் காரணமாகவும், உள்நாட்டு விளை பொருட்கள் மற்றும் அரிய பொக்கிசங்கள் காரணமாகவும் ஆசியாவுக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையில் வணிகம் மேற்கொள்ளும் தனித்துவம் கொண்டு இருந்தது.  பன்னெடுங் காலமாகவே இந்தோனேசியத் தீபகற்பம் வடக்கில் சீன தேசத்தோடும், தெற்கிலும் கிழக்கிலும் அவுஸ்திரேலியா மற்றும் பசிபிக் தீவுகளோடும், மேற்கில் இந்தியாவோடும் தொடர்பில் இருந்து வந்து இருக்கிறது.  பர்மாவோடும், இந்தோசீன நாடுகளோடும் இரத்த உறவையும் கொண்டு இருந்தது இந்தோனேசியா.

சோழ மண்டலக் கடற்கரையை சரியாக உச்சரிக்க இயலாமல் ஐரோப்பியர் 'கோரமண்டல்' என்று தவறாக உச்சரித்ததை நம்மவரும் சேர்ந்து கோரமண்டல் (ORAMANDAL ) என்று சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். இதுதான் படித்தவன் பாட்டைக் கெடுத்த கதை.

இப்படி கலிங்கர் கீழ் திசை நாடுகளுக்கு புறப்பட்டுப் போவதற்கு எதுவாக பூகோள அமைப்பில் இயற்கைத் துறைமுகங்கள் அமைந்து இருந்ததும், குறிப்பிட்ட காலங்களில் காற்றின் போக்கு இந்தத் துறைமுகங்களில் இருந்து சாவகத் தீவுகளுக்கு சென்று சேர்வதற்கு ஏதுவாக இருந்ததுமே ஆகும்.  இதைப்  படித்து விட்டு, தமிழர்கள் முதலில் கடலுக்குச் செல்லவில்லையா என்று கேட்பது தெரிகிறது.  சோழ  மண்டலக் கடற்கரையில் இருந்து தென் கிழக்கு நோக்கி வீசும் காற்றில் பாய் மரங்களை ஏற்றிக் கப்பலில் புறப்பட்டால்  30 நாட்கள் கழித்து அவுஸ்திரேலியாவின் கரையோரமே காற்று சென்று சேர்க்கும்.  எனவே சோழ  மண்டலத்துக் கலங்கள் இலங்கை சென்று இளைப்பாறிப்  பின்னர் நக்காவரம் என்று அழைக்கப்பட்ட இன்றைய நிகோபார் தீவுகளில் கரை ஏறி உணவும், குடிநீரும் எடுத்துக்கொண்டு இந்தோனேசியத் தீவுகளுக்குச் சென்று வந்து இருக்கின்றனர்.  இது தவிர சோழ மண்டலக் கரையோரமாகவே வடக்கு நோக்கிப் பயணித்து கலிங்க நாட்டின் துறைமுகத்திலிருந்து நேரடிப் பயணம் மேற்கொள்ள முடிந்திருக்கிறது.

கலிங்கத்தின் மீது எல்லோருக்கும் ஒரு கண். முதலில் அசோக சக்கரவர்த்தி பெரும் சேதம் ஏற்படுத்தி கலிங்கத்தைச் சூறையாடினார் .    அத்தனை உயிர்ப்பலிகளின் பின் அந்த  மண்ணில் விதையாய்  விழுந்து பின் விழுதுகளுடன் பெருகித் தழைத்தது தான் உலகம் முழுதும் வியாபித்து இருக்கும் பௌத்தம்.

அதே போல குலோத்துங்க சோழன் கலிங்கத்தின் மீது படை எடுத்தான்.  நமக்கு கிடைத்தது 'கலிங்கத்துப்  பரணி'. தென்னாட்டவருக்கு கலிங்கத்தின் மீது காதல் என்பது அவர்களின் துறைமுகங்கள் கீழ்த்திசை நாடுகளுக்குக்  கடற் பயணம் மேற்கொள்ள ஏதுவாக  அமைந்து இருந்ததும், சிறந்த மாலுமிகள் அங்கே கலிங்கத்தில்  இருந்ததுமே காரணிகள்.

கலிங்கர் சாவகத்துடன் (JAWA )தொடர்பில இருந்திருக்கிறார்கள்.  சோழர்கள் சுவர்ணத்தீவு என்று அழைக்கப்படும் சுமத்ராவுடன் தொடர்பில் இருந்து இருக்கிறார்கள்.  இத்தோடு  இன்றைக்கு பூகோளத்தை நிறுத்திக்  கொண்டு கொஞ்சம் கதை கேட்போமா?

இந்தோனேசியாவில் சுமத்ரா தீவில் மேடான் என்று பெரிய நகரம். 10,000 பேர்களுக்கு மேல் தமிழர்கள் வாழும் இடம்.  பெரும்பாலான தமிழர்கள் புகையிலை மற்றும் இரப்பர் தோட்டங்களின் கூலியாக காலனிகளாய் ஆப்பிரிக்க,ஆசிய நாடுகளின் பகுதிகள் மாறி இருந்த காலத்தில் வந்து சேர்ந்தவர்கள்.  அனைத்துத் தரப்புத் தமிழரும் இதில் அடக்கம்.  இந்த மேடான் நகரம் இன்றைய மலேசியாவின் பினாங்கு நகருக்கு அதிகத் தொடர்பில் இருந்த காலம்.  இது பற்றி நாம் சுமத்ராவை வலம் வரும் நேரத்தில் காணலாம்.

சுமத்திராவில் தோட்டத் தொழிலாளரான தமிழர் 

மலாய் / இந்தோனேசிய மொழிகளில் 'காம்புங்' என்றால்  கிராமம் அளவுக்குப் பெரிதாக இல்லாத ஒரு குடியிருப்பு.  பொதுவாக ஒற்றைப் பொருளாதார (வேளாண்மை/ தோட்டத்தொழில் ) தொழிலைக் கொண்டவர் வாழும் பகுதி. பொதுவாகவே "க்லிங்க்" என்ற சொல் இந்தோனேசியாவில் 'கறுப்பு நிறம் கொண்ட இந்தியர்களை, குறிப்பாக தென்னகத்து திராவிடர்களைக் குறிக்கவே பயன் படுத்தப்படுகிறது. சுமத்திராவின் மேடான் நகரப்பகுதிகளின் புறநகர்ப் பகுதிகளில் தமிழர், தென்னாட்டவர், இறக்குமதி செய்யப்பட்ட  கூலித் தொழிலாளர்களாக டச்சு அரசாங்கத்தால் புகையிலைத் தோட்டங்களில் பணிக்கு அமர்த்தப்பட்டனர்.  அதன் பின் தொழில் நிமித்தமாகக்  குடியேறியவர்களும் உண்டு.  இந்தத் தமிழர்கள் வாழும்/ வாழ்ந்த மேடான்  பகுதிகள்  இன்றளவும் 'காம்புங் க்லிங்' என்றே அழைக்கப்படுகின்றன..  அன்றைய கலிங்க தேசத்தில் மகாநதிக்கும், கோதாவரிக்கும் இடையில் அமைந்து இருந்த  பாலூர் (PALOUR )மற்றும்  தந்தபுரம்(DANTAPURA ) போன்ற இடங்களில் இருந்து புறப்படும் நாவாய்கள் நேராக இன்றைய ஜாவா (சாவகம்) வையே சென்று அடைந்திருக்கின்றன.  சீன நாட்குறிப்பேடுகள் சாவகத்தை 'க்லிங்' என்று குறிப்பிடுவதையும், மாநிற/ கரிய தோலின் வண்ணம் உள்ள திராவிடர்களை இந்தோனேசியாக் குறிப்புகள் 'க்லிங் ' என்று அளிப்பதற்கும்  காரணம் இப்போது விளங்கும்.  இவ்வாறாக கலிங்கத்தின் துறைமுகங்கள் ஆரம்பக் கடற் காலத்திலேயே  தூர கிழக்கு நாடுகளுடன் நெருக்கமான தொடர்பில் இருந்தன.  எதிர்கரையில் மலாயத் தீபகற்பத்திலும், தக்கோலம் (தாய்லாந்து) என்ற பெயரை தொன்மை நூல்களிலும், காலா என்பதை அரபி எழுத்தாளர்களிடம் இருந்தும், சிங்கப்பூர் மற்றும் மலாக்கா போன்றவற்றை போர்த்துகீசியக் குறிப்புகளிலும் இருந்து அறிய முடிகிறது.

KAMPUNG KELING IN MEDAN SUMATRA

கலிங்கத்தின் சந்ததிகள்  இங்கே சாவகத்தில் காலூன்றி அரசாட்சி நடத்தி வந்திருக்கிறன. அதிலும் ஒரு பெண் மகா ராணியாக இங்கே ஆட்சி புரிந்து   நீதி தவறா நெறி முறையில் பரிபாலனம் செய்து வந்து இருக்கிறார்.  அந்த நிகழ்வுகளை அடுத்துக்  காண்பதற்குத் தான் இந்த சரித்திரம் பூகோளம் எல்லாம்.

ஏதேனும் குழப்பமாக உணர்ந்தால் அவசியம் தெரிவிக்கவும்.  உங்கள் அனுமதியுடனேயே தொடர்கிறேன்.. இந்தத் தொடரை....

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தென் கிழக்கில் .. தெக்கத்தியான் (தெற்கத்தியான்) 21. தெக்கணமும் அதிற் சிறந்த திராவிட நல் திருநாடு'

22.தென்னாடும் தென் கிழக்கும்....இந்தோனேசிய வரலாற்று ஆவணங்களில் இருந்து....தென் கிழக்கில் ..

அசை போடும் ..தேவகோட்டை ஞாபகங்கள்-பகுதி: 60