தேவகோட்டை கந்தர் சஷ்டி விழா... நினைவுகள் ..
தீபாவளி வந்து விட்டால் மற்ற ஊர்களில் இருப்பவர்களுக்கு என்னவோ, புத்தாடைகளும், புகை விடும் பட்டாசுகளும் தான் நினைவில் வரும். தேவகோட்டையில் இருந்த எங்களுக்கோ, தீபாவளியில் இருந்து ஆரம்பிக்கும் கந்த சஷ்டி விழா, 9 நாட்களும் இயல் இசை நாடகம் என்ற முத்தமிழையும் பொழிந்து விட்டுச் செல்லும் ஐப்பசிக் கொடை .
பல நேரங்களில் தானாகவே ஞாபக மேகங்களாக நினைவின் வானத்தில் மிதந்து செல்லும் எமது பால பருவ நினைவுகள்.....
கருதா ஊரணிக் கரையில் இருக்கும் சைவப் பிரகாசா வித்தியா சாலையிலும், பின்னர் சிவன் கோவில் குளக்கரையில் இருந்த திருவேங்கடமுடையான் (தற்போது சேர்மேன் மாணிக்கவாசகம் பள்ளி ) பள்ளியிலும் பயின்ற காலம். இந்த கந்தர் சஷ்டி விழாத் திடல் மணல் பரப்பி, தென்னைக் கிடுகுகளுக்குள், வெள்ளாடையும், பச்சை. சிவப்பு வண்ணங்களில் ஓரத்து அலங்காரமுமாக எழும்பிக் கொண்டிருக்கும் போதே எங்களுக்கு வேடிக்கைத் திடலாகி விடும். அருமையான நிகழ்வுகள்..அந்த சிற்றூரில்.....
டிஜிட்டல் பலகைகள் இல்லாத காலம். பகல் நேரத்தில் ஒரு கரும்பலகையில் அன்றைய நிகழ்ச்சிகளை சாக்குக்கட்டியில் எழுதி வைத்து இருந்த நேர்த்தி நினைவில் வருகிறது.
1969~70 ஆம் வருடங்கள்...
அன்றைய இசை நிகழ்ச்சி சீர்காழி கோவிந்தராசன் அவர்கள் என்று பலகையில் எழுதப்பட்டு இருக்கிறது.
1969 ஆம் ஆண்டு வெளிவந்த 'வா ராஜா வா' என்ற திரைப்படம்...
1970 ஆம் ஆண்டு வெளிவந்த 'திருமலை தென் குமாரி' என்ற திரைப்படம்
இவற்றில் தனது வெண்கலக் குரலால் பாடி நடித்து இருந்த இசை வித்தகர் சீர்காழி அவர்கள்.
அவ்வளவு அருகில் அனைத்து வகுப்பினரும் அமைதியான இரவில் எந்த ஒரு சலசலப்பும் இல்ல்லாமல் (முக்கியமாக ஆர்ப்பாட்டம் எதுவும் இல்லாமல்) மிகப்பெரிய ஆளுமைகளை கொண்டு வந்து நிகழ்வுகள் நடத்திய அந்த அசாத்தியத் திறமை கொண்ட எங்கள் நகரத்தார்களை நினைத்து அந்தத் திக்கினை கை கூப்பி வணங்கி நிற்கிறேன்..
நினைவுகள் ... தொடர் கதை
கருத்துகள்
கருத்துரையிடுக