அசை போடும் ..தேவகோட்டை ஞாபகங்கள்-பகுதி: 22


அசை போடும் ..தேவகோட்டை ஞாபகங்கள்

கவிக்கிறுக்கன் முத்துமணி
பகுதி: 22
04-11-2017

அன்பு நண்பர்களே!

இரண்டு நாள் இடைவெளி விழுந்து விட்டது.  மாத ஆரம்பம்,  கணக்கு வேலை முடிச்சு ஆகணுமே... இருக்கிற நாலு முடியையும் பிச்சுட்டு இன்னைக்கு இதோ வந்துட்டேன் .... 

திருச்சுழியார் வீட்டுப் பற்றி எழுதியதும் பல பின்னூட்டங்கள்,  மின்னூட்டங்களாய் வந்து என்னை அங்கேயே கொண்டு பொய் நிறுத்தி விட்டன.  Virutal ....  இதிலே வீட்டின் இடதுபுற முன் அறையைப் பற்றி சொல்லியே ஆக வேண்டும்.  இதில் திண்ணப்ப  செட்டியாரின் மூத்த மகன் திரு.அண்ணாமலை அண்ணன் தங்குவார்.  இந்த அரை அவரது தனி personal room.  நமக்குத்தான் அந்த வீட்டில் சக இடத்துக்கும் செல்ல பாஸ் இருக்கே.  அப்போது அவர் இளைஞர்.  கருதா ஊரணி சைவப்பிரகாச வித்யாசலையில் ஆசிரியராகப் பணி புரிந்து வந்தார். அன்பர் திரு.சோமசுந்தரத்தின் மூத்த சகோதரி ( சிவன் கோவில் கீழ்கரையில் இரவுசேரி இறக்கம் ஆரம்பிக்கும் இடத்தில் வீடு)  திருமதி.உண்ணாமலை  ஆச்சி தான் அவரின் மனைவி.   அவர்கள் அறை இது.  கலை நயத்துடன் அறையை வைத்து இருப்பார்கள்.  மாட்டுக் கொம்பில் செய்ய்யப்பட்ட  ஒரு ஜோடி கொக்கு பொம்மை அழகாக நிற்கும்.  ஒரு சங்கு,  அதில், அண்ணாமலை,,,,,,,உண்ணாமலை  என்று பொறிக்கப்பட்டு இருக்கும்..  அட என்ன ஒரு எதுகையான  பெயர்கள் மனதில் ஓடியிருக்கிறது. 

ஒரு வட்ட மேஜை. அதன் மேல் ஒரு MURPHY RADIO SET.  TUNER வட்ட வடிவில் இருக்கும்.  அப்பொது ரேடியோ நிகழ்ச்சிகளின் அட்டவணையை புத்தகமாகப்போட்டு விற்பனைக்கு வரும்..  இதில் அவரவர்களுக்குப் பிடித்த நிகழ்ச்சிகளை குறித்து வைத்து  காத்திருந்து கேட்பார்கள்.  அந்த வயதில், ஞாயிறன்று  மதியம் 3:00 மணிக்கு ஒலி பரப்பாகும், ஒலிச்சித்திரம்தான்  இந்த நேயர் விருப்பம்.  எங்களிடம் ஏது ரேடியோ?  அதான் அண்ணாமலை அண்ணன் வச்சிருக்காரே,  நன்றாக நினைவு இருக்கிறது.  புரட்சித்தலைவர் நடித்த காவல்காரன், 1967ல் வெளியானது. அதன் ஒலிச்சித்திரம் 1968ல் திருச்சி அகில இந்திய வானொலியில் ஒலி பரப்பானது.  அண்ணாமலை அண்ணன் அறையில் போட்டு விட்டார்.  அந்தத் திண்ணையில் இருந்து கேட்டேன்.  M.G.R. நம்பியாரிடம் பேசுவார்…”சந்திரன் உடல் எரிக்கப்படவில்லைபத்திரமாகப் பாதுகாக்கப் பட்டு வருகிறது’… இன்னும் காதில் ஒலிக்கிறது.

அதேபோல்,  1969ல் அப்பொல்லோ 11 நிலவில் இறங்கும் முழு  விபரத்தையும், ராக்கெட்டின் பாதை எல்லாம் படம் போட்டு வந்த தினத்தந்தி பத்திரிகையை இதே திண்ணையில், காளை அண்ணன் படித்து விட்டுக் கொடுத்தபின் படித்த ஞாபகம் நேற்றுப்போல் இருக்கிறது.  இந்த சுப்பையா அண்ணன், அவர் தம்பி திண்ணப்பன் அண்ணன், பெரிய வள்ளியப்பன், சின்ன வள்ளியப்பன் அண்ணன், சாமினாதன் அண்ணன் ஆகியோர் பொழுது போக்குவது எங்கள் வீடு இருந்த தோட் டத்தில்தான்.  தீப்பெட்டி படம் சேர்ப்பது ஒரு பெரிய விளையாட்டு.  வண்ண வண்ண படங்கள் கொண்ட தீப்பெட்டிப் படங்களை U.S.DOLLAR ரேஞ்சுக்கு பத்திரமாக வைத்துப் படம் காண்பித்து கொண்டு இருப்பார்கள்.  அப்புறம் ஒரு கபடி மைதானம் தயார் செய்து அதில் விளையாடுவார்கள். திருச்சுழியார் வீட்டுத்திண்ணை வலது பக்க அறையில் இருட்டில் லென்ஸ் வைத்து, மின் விளக்கு ஒளியில் ஸ்லைடு போட்டுக் காண்பிப்பார் சின்ன வள்ளியப்பன் அண்ணன்.  சரி, இப்போதைக்கு திருச்சுழியார் வீட்டில் இருந்து வெளிவருவோம். 

திருச்சுழியார் வீட்டுக்கு வலது புறம் அடுத்த வீடு, லண்டன் தி ணா என்றறியப்படும் திரு.திண்ணப்பச்செட்டியார்.  ஒல்லியான தேகம்.. சுருட்டை முடி,  அந்தக்காலத்தில் கோபம் அதிகம் வரும்.  ஆனால் குழந்தை மனதுக்காரர்.  ஆச்சி அருமையான தாயுள்ளம் கொண்ட அன்பரசி.  அந்தக் காலத்தில், இன்றைய தேவகோட்டை தலைமை தபால் தந்தி அருகில் இருக்கும் சஞ்சீவி மெடிகல்ஸ்,  திண்ணப்பன் அண்ணன் நாராயணா மெடிகல்ஸ் என்ற பெயரில் நடத்தி வந்தார். அப்போது தேவகோட்டையில் இரண்டே இரண்டு மெடிகல்ஸ் தான்.  ஒன்று இந்த நாராயணா மெடிகல்ஸ்.  டாக்டர்.பழனிச்சாமி இந்த மெடிகல்ஸ் அருகில் இன்றைய தலைமை தபால் நிலையத்தில் தான் இருந்தார். மற்றொன்று தியாகிகள் சாலையில், பெத்தாள் ஆச்சி பள்ளிக்கு அருகில் இருந்த ஒரு பெரிய மருந்துக்கடை (மீனாட்சி மெடிகல் ஹால்??).  


இந்த மெடிகல்ஸ் தவிர திண்ணப்பன் அண்ணன், மீனாட்சி ஐஸ் பாக்டரி என்ற ஐஸ் கம்பெனி நடத்தி வந்தார்.  நான் இருந்த வீட்டுக்கு அடுத்தது. 24 மணி நேரமும் விடாமல் ஓடிக்கொண்டு இருக்கும்.  இரவு முழுவதும் தயார் செய்யப்படும் ஐஸ் புரூட்கள் காலையில் வியாபாரிகளால் சுற்று வட்டார கிராமங்கள், திருவாடானை, கைகாட்டி, நம்புதாளை, பாசி பட்டணம் மற்றும்  நகர் முழுதும் விற்பனைக்கு எடுத்துச் செல்லப்படும்.  கொஞ்ச காலம் என் சித்தப்பா பவளம் அவர்களும்,  திண்ணப்பன் அண்ணன் தோட்டத்தில் குடி இருந்த மாமா என்று என்னால் அழைக்கப்பட்ட திரு.நாகராஜன் அவர்களும் அங்கு சரக்கு தயார் செய்பவர்களாக வேலை செய்து இருக்கிறார்கள்.  ஒருவர் இரவு டூட்டி, மற்றவர் பகல் டூட்டி ஒரு நாள் சம்பளம் ரூ.1.50. அட .. ஆமாங்க ஒண்ணரை ரூபாய்.  அப்போது தங்கம் பவுன் ரூபாய் 100 தானுங்களே

காலை 4:30 மணிக்கே அந்த இடம், கல கல என ஆட்களால் நிறைந்து இருக்கும்.  முதலில் பெரிய பெட்டிகளுக்கு சப்ளை. பெரிய மரப்பெட்டிகள், அதன் கீழ்பகுதியில் உப்புப் போட்டு பரப்புவார்கள், அதன் பின், ஐஸ் பார் (உப்பு ஐஸ்) போட்டு, அதன் மீது இன்னொரு INNER METAL BOX வைக்கப்பட்டு, அந்த இடைவெளியில் மறுபடியும் பார் ஐஸ் செருகி,  இந்த இன்னர் பாக்ஸில் ஐஸ் புரூட்கள் அடுக்கி வைப்பார்கள்.  உள்ளே வைக்கப்படும் ஐஸ் அன்று மாலை வரை உருகாமல் இந்த உப்பு ஐஸ் படுக்கை வைத்து இருக்கும்.  இதில் சாதா ஐஸ் மற்றும் சேமியா ஐஸ் என்று இரு வகை.  சாதா ஐஸ் விற்பனை விலை ஒன்று 3 பைசா சேமியா ஐஸ் ஒன்று 5 பைசா..  வியாபரிகளுக்கு கம்பெனி கொடுப்பது  சாதா ஐஸ் ஒண்ணரை பைசா ( 100  Pcs., Rs.1.50) சேமியா ஐஸ் இரண்டரை பைசா ( 100 Pcs., Rs.2.50).  இந்தியா ரூபாய்க்கு நல்ல மதிப்பு இருந்ததுங்க என்றைக்கு,  பைசாவின் PURCHASE POWER குறைந்ததோ, அன்றே நமது பொருளாதாரம் வீழ்ச்சி அடைய ஆரம்பித்து விட்டது.   இந்த பெரிய பெட்டிகளுக்கு சப்ளை முடிந்ததும், சின்ன பெட்டிகளுக்கு சப்ளை ஆரம்பிக்கும்.  சின்ன தூக்குப் பெட்டிகள்,   சிறு பையன்கள், கையில் இந்தப் பெட்டியைத் தூக்கி நடந்து பால் சேமியா ஐஸ் என்று நகரில் விற்பார்கள்.  இது போக மதுரையில் இருந்து MDT பஸ்சில் ஸ்டேட் ஐஸ் கிரீம் தினமும் வரும்.  சிதம்பரம் என்பவர் யுனிபார்ம், தொப்பி எல்லாம் அணிந்து விற்பார். தே பிரிட்டோ பள்ளியில் ஹாஸ்டல் பார்லர் இடைவெளியில் மதிய உணவு இடைவேளையில் வேலிக்கு வெளியே நின்று விற்பதை அங்கு படித்தவர்கள் மறந்து இருக்க மாட்டீர்கள். கொஞ்சம் காஸ்ட்லி..  ஆமாம் ஒரு ஐஸ்கிரீம் 15 பைசா.

ஐஸ் கம்பெனி திண்ணப்ப செட்டியாருக்கு, வள்ளியப்பன் (தற்போது அம்பத்தூரில் ஐஸ் ஃபாக்டரி நடத்தி வருகிறார்,  அடுத்து கஸ்தூரி ஆச்சி, (வைரம் குழும குடும்பத்தில் திருமணம் செய்து கொடுக்கப்பட்டவர்),  அப்புறம் சிவகாமி ஆச்சி, அடுத்து லட்சுமி (என் வயதுடையவர்), பின் சுப்பைய்யா, கடைசியாக உமையாள்.  இரண்டு வருடங்களுக்கு முன் விடுமுறைக்கு தேவகோட்டை ஒரே ஒரு  நாள் சென்று இருந்த போது, திண்ணப்ப செட்டியார் (both Thinnappa Chettiars)  அவர்களைச் சென்று பார்த்தேன்.  அவர் மட்டும் அந்த பெரிய வீட்டில் வசிக்கிறார்.  பிள்ளைகள் அவரவர் தொழில் முகமாக வேறு ஊர்களில்.

இந்த வள்ளியப்பன் அண்ணன், காரைக்குடி அழகப்பா கல்லூரியில் புகுமுக வகுப்புப் படித்தார்.  அவரும் அவ்வப்போது, ஐஸ் ஃபாக்டரியில் வேலை பார்ப்பார். இடையில் படித்தும் கொள்வார். வழக்கம் போல் புத்தகங்களைப் பார்த்தால் படிக்க ஆரம்பித்து விடுவேன், அது எத்தனை வயதில் உள்ளவர்கள் கையில் வைத்து இருந்தாலும்.  அதுபோல அவர் கையில் வைத்து இருக்கும் புத்தகங்களையும் படித்து இருக்கிறேன்.  அதில், மணியன் அவர்கள் எழுதிய இதயம் பேசுகிறது பயணக்கட்டுரை அவருக்கு பாடமாக இருந்தது.  அதை ஐஸ் கம்பெனியில் அவருடன் இருந்து படித்த ஞாபகம் இருக்கிறது

இந்த சுப்பையா, லட்சுமி எல்லாம் விளையாட்டுத் தோழர்கள்.  அந்த வீட்டில் அவர்களுடன் ‘‘திருடன்.போலிஸ் விளையாடிய நினைவு இருக்கிறது.  நாங்கள் குடியிருந்த தோட்டத்தில் தும்பைப் பூக்கள் வெள்ளை நிறத்தில் அடர்ந்து பூத்து இருக்கும்.   இவற்றில் தேன் அருந்த வண்ணத்துப்பூச்சிகள் வண்ண ஜாலம் காட்டி பறந்து திரியும்.  அதிலும் அந்த யானைப்பாப்பாத்தி பிடிக்க இந்த குரூப் எங்கள் வீடு தேடி வரும்.   சுப்பையா கையில் எப்பொதும் ஒரு ட்ரான்ஸிஸ்டர் ஏதாவது பாடிக்கொண்டு இருக்கும்.  ஐஸ் கம்பெனி திண்ணப்ப செட்டியார், அவ்வப்பபோது கிராமபோன் பெட்டியில் இசைத்தட்டுக்கள் போட்டு எங்களை கேட்க வைப்பார்.  அடிக்கடி கேட்டது…”யானை வளர்த்த வானம்பாடி  பட இசைத்தட்டு பாடல்கள். அது போக காரம் போர்டு, மோனோபொலி  விளையாட்டு அவர்களுடன் அடிக்கடி விளையாடி இருக்கிறேன். திண்ணப்பச்செட்டியார் அவர்களின் மனைவி அவர்கள் பிள்ளைகளுடன் என்னையும் உட்கார வைத்து ஒரே மாதிரி சாப்பாடு போடுவார்கள்.  என் சித்தப்பா பவளம் அவர்கள் அங்கு அவர்களின் ஐஸ் கம்பெனியில் வேலை செய்கிறார் அல்லது நாங்கள் அடுத்த வீட்டுத் தோட்டத்தில் குடி இருக்கிறோம் என்ற எந்த பாகுபாடும் அவர் மனதில் தோன்றியதே இல்லை.  அப்பொது நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் நடித்த சரஸ்வதி சபதம் படம் வெளியான நேரம் ( 1966).  அந்த வீட்டில் இட்லியும், சட்னியும் சாப்பிட்டு விட்டு கல்வியா செல்வமா,  வீரமா  பாடலை காப்பி அடித்து, ‘இட்லியா, சட்னியா, அப்பமா என்று ராகம் போட்டு பாடி அனைவரையும் சிரிக்க வைத்த ஞாபகம் வருகிறது (அப்போது 7 வயது எனக்கு).

மீனாட்சி ஐஸ் கம்பெனியை அடுத்து ஒரு பெரிய ரைஸ்மில்.  வாஹாப், கமால் என்று இரண்டு சகோதரர்கள். அவரது அப்பா தான் முதன் முதலில் நான் பார்த்த ஆஜானுபாகுவான மனிதர்.  இங்கு பல இசுலாமிய சகோதரர்கள் தாயாய் பிள்ளையாய் பழகி இருக்கின்றார்கள்.  பலர் பச்சை நெல் கொள்முதல் செய்து, இந்த ரைஸ் மில்லில் அவியல் போட்டு, அந்த வட்டாணம் ரோடில் காய வைத்து பின் அரைத்து புழுங்கல் அரிசியாக விற்பனை செய்து கொண்டு இருந்தார்கள்.  பலர் அருகில் உள்ள குளக்கால் பகுதியில் வசித்து வந்தனர். அவர்களில் முக்கியமானவர்கள், ஜனாப்.அப்துல் கபூர் (முன்னாள் 5ஆம் வட்ட நகர் மன்ற உறுப்பினர்), அவரது மகன், ஜபருல்லா, நிஸ்தார்,மகள் ஃபரீதா அக்கா மற்றும் பல அவரது குடும்பத்தினர்.  இந்த ஜபருல்லா, எனக்கு ஒரு வருடம் மூத்தவர்,  1978 ஆம் வருடம் மத்திய கிழக்கு நாட்டில் PHILIPPINES AIRLINES பணி புரிந்தார். ஏறத்தாழ 40 ஆண்டுகளாக அரபு நாடுகளில் தான் இருக்கிறார்.  கொஞ்ச காலம் தேவகோட்டை  ரோடுவேஸ் என்ற பஸ் சர்வீஸ் என்று இந்த அப்துல் கபூர் ராவுத்தர் நடத்தி வந்தார்.

அப்புறம் சைக்கிள் கடை நடத்தி வந்த  காசிம் ராவுத்தர். திராவிட முன்னேற்ற கழகத்தின் நகர பொறுப்பில் இருந்தார்.  பின்னர் நகர் மன்றத்தலைவர் ஆனார்.  கடைசியில் இவர் உடல் நலமில்லாத சமயம் சந்தித்தேம்ன்..  மற்றும் பஞ்சுபெட்டி என்று அழைக்கப்பட்ட தியாகி. இவர் சுதந்திரப் போராட்ட வீரர்.  கொஞ்சம் மன நிலை தவறி இருந்தார், கடைசிக்காலத்தில்.   திடீர் திடீர் என்று காந்தி குல்லாய், கதர் சகிதம், தேசிய கொடியை கையில் ஏந்தி நகர்வலம் கிளம்பி விடுவார்.  இவரது மகன் இஸ்மாயில்.  குளக்காலுக்குள் நாடகம் நடத்துவார். எனக்கும் சின்ன ரோல்கள் கொடுத்து இருக்கிறார்.  பாவம், சாலை விபத்தில் குளக்கால் அருகிலேயே உயிரிழந்தார்.

அப்புறம் காந்தி ரோடில் இருந்து சுல்தான் ராவுத்தர் இங்கு வந்து நெல் அவியல் போடுவார்.  இவரது மகள் சித்தி என்னுடன் ஜான்ஸ் பள்ளியில் படித்தார். இந்த சித்திக்கு சிறிது மூத்தவர் அலி.  தே பிரித்தோ பள்ளியில் படித்தார்.  ரொம்பக் காலத்திற்குப் பிறகு ஒரு முறை மலேசியா கோலாலம்பூர் சென்றிருந்த நேரத்தில், மைதீன் டிபார்ட்மென்டல் ஸ்டோரில் பணியாற்றிக் கொண்டு இருப்பதைப் பார்த்தேன். 

ரைஸ் மில்லுக்கு அடுத்து இசுலாமிய முன்னேற்ற சங்கம் என்று ஒரு சங்கம் நடந்து வந்தது.  இங்கு தினத்தந்தி பேப்பர் மக்கள் வாசிப்பதற்காக இருக்கும்.  வீட்டுக்கு அருகில் என்பதால் காலை எழுந்தவுடன் ஐய்யாவை இங்கு பார்க்கலாம்.  இந்த இடத்தில் பின்னர் யாசின் அவர்கள் டீக்கடை வைத்து இருந்தார்.  இவர், வெ.ஊரணி வடகரையில் முன்பு பரோட்டா ஸ்டால் வைத்து இருந்த பாவா ராவுத்தர் (தி.மு.) அவர்களின் சகோதரர்.  இதற்கு முன் இவர் குளக்கால் அருகில் கடை வைத்து இருந்தார்.

இந்த டீக்கடைக்கு அடுத்த வீடு திருச்சுழியார் வீட்டு திண்ணப்பன் ஐயாவுக்கு சொந்தமான வீடு.  அங்குதான் மரகத வள்ளி டீச்சர் குடும்பம் குடி இருந்தது.   அவர்கள் பற்றி அடுத்து….

கருத்துகள்

  1. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவுகள் அருமை. விடுபட்டதாக நான் கூறிய 41 ஆவது பகுதியும் கிடைத்தது.
      அடுத்த பாகத்தை தொடரலாமே

      நீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தென் கிழக்கில் .. தெக்கத்தியான் (தெற்கத்தியான்) 21. தெக்கணமும் அதிற் சிறந்த திராவிட நல் திருநாடு'

22.தென்னாடும் தென் கிழக்கும்....இந்தோனேசிய வரலாற்று ஆவணங்களில் இருந்து....தென் கிழக்கில் ..

அசை போடும் ..தேவகோட்டை ஞாபகங்கள்-பகுதி: 60