அசை போடும் தேவகோட்டை நினைவுகள்- பாகம் 2: பகுதி: 22
அன்புச் சொந்தங்களே!
பெற்றால் தான் பிள்ளையா ?
அமெரிக்காவின் புகழ் பெற்ற நகைச்சுவை நடிகர் சார்லி சாப்ளின் 1921 ஆம் ஆண்டு எழுதி, இயக்கித் தயாரித்து,நடித்து வெளியிட்ட. 'தி கிட்' என்ற பேசாத சலனப் படத்த்தின் தழுவலாய் தமிழகத்தில் திரைக்கு வந்த திரைப்படம். பெற்றால் தான் பிள்ளையா என்ற பெயர் வேறு எவரையும் விட எம்.ஜி.ஆருக்குத் தான் பொருந்தும். வெளியே தெரியாமல் அவர் எத்தனையோ பேரை தானே மனதுள் தத்தெடுத்துக் கொண்டு ஒரு தந்தையாய் அவர்களுக்கு வேண்டியன செய்தவர்.
பெற்றால் தான் பிள்ளையா திரைப்படம் பற்றித் தனியாக ஒரு அத்தியாயம் எழுதலாம் வேறு தளத்தில். இப்போது, தந்தையை இழந்து சோகத்தில் கதறிய நமது நீதியரசர் கற்பகவிநாயகம் அவர்களை ஆசுவாசப்படுத்தி நான் தான் இனி உனக்கு சித்தப்பா என்று சொல்கின்ற பொன் மனம் கொண்டவர். சொன்னதோடு நிற்கவில்லை. நடிப்புத் துறையில் எப்படியாவது ஜொலித்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்த கற்பக விநாயகம் அவர்களை நீதித்துறையில் திசை திருப்பி “
கற்பகம் நீங்கள் அரசு உதவி வழக்குரைஞராகச்
சேருங்கள். நீதிபதி கோகுலகிருஷ்ணன் மாதிரி நீங்களும் நீதிபதியா வரணும். நீங்கள்
ஒரு நல்ல பண்பாளர்' என்றார்.
இதற்கு முன்னர்,எஸ்.ஏ.இராஜன் என்னும் வழக்கறிஞரிடன் ஜூனியராக மிகக் குறைந்த வருவாயில் வாழ்ந்து கொண்டு இருந்த போதும், ஒரு முறை நெசவாளர்களின் நல்வாழ்வுக்காக எம்.ஜி.ஆர். பலரிடமும் நன்கொடை பெற்றுக் கொண்டு இருந்த சமயம், தன்னால் பணம் கொடுக்க என்ன வழி என்று நினைத்துப் பார்த்து தனது குருதிதனை கொடையாக வழங்கி அதன் மூலம் கிடைத்த பணமான ரூ.151 ஐ நெசவாளர் நல நிதிக்காகத் தனது பங்காக வழங்கினார். காசோலையாக மாறிய ‘இரத்த தானம் செய்து பெற்ற பணம் நெசவாளர்களுக்காக எனது நன்கொடை’ என்று எழுதி எம்.ஜி.ஆர். அவர்களிடம் வழங்கி இருக்கிறார். கடிதத்தைப் படித்த எம்.ஜி.ஆர். கண்கலங்கி ‘நீங்க பெரிய மனுஷன்’ என்று பாராட்டி இருக்கிறார். அவர் வாழ்த்தியது போலவே பெரிய மனிதராக உயர்ந்து
விட்டார்.
இதற்கிடையில், எம்.ஜி.ஆர். மூலம் கிடைத்த அஸிஸ்டண்ட் பி.பி. பதவியின் மூலம் கிடைத்த வருமானம் போதாத நிலை. சினிமா கனவு தான் எம்.ஜி.ஆரால் கலைக்கப்பட்டு விட்டது, இந்தக் கட்டத்தில் எம்.ஜி.ஆர். அவர்களின் தேவகோட்டை வருகை பற்றி இங்கே குறிப்பிட்டே ஆக வேண்டும். 1976 ஆம் வருடம், அக்டொபர் மாதம். அ.தி.மு.க. அசுர வளர்ச்சி அடைந்து அகில இந்திய அண்ணா தி.மு.க வாக ஒரு பெரிய இயக்கமாக பரிணாமம் பெற்\று விட்ட்து. எம்.ஜி.ஆர். வழக்கம் போல சூறாவளிச் சுற்றுப்பயணமாக இராமனாதபுரம் வருகிறார். அந்த வழியில் சிவகங்கை, காரைக்குடிப் பகுதிகளையும் பார்வையிடத் திட்டம்.
நான் கல்லூரியில் இளங்கலை முதலாம் வருட மாணவன். தேவகோட்டையில் எம்.ஜி.ஆர். எப்போது வந்தாலும், ஒத்தக்கடையில் இராமனாதபுரம் செல்லும் சாலையில் எங்களுக்குச் சொந்தமான பெட்டிக்கடை வாசலில் 1972 ஆம் ஆண்டு முதல் நிறுவப்பெற்ற உயர்ந்த கொடிக்கம்பத்தில், அ.தி.மு.க. வின் கொடி ஏற்றப்படுவது வழக்கம். அந்தச் சமயங்களில் எல்லாம் அவருக்கு மாலை போடுவது அல்லது மலர் தூவி வரவேற்பு அளிப்பது எங்கள் தலையாய பணி. அன்றைக்கு எனக்குத் தெரிந்த எங்கள் பகுதி அ.தி.மு.க.வின் தீவிர கட்சித் தொண்டர்களின் பாடி வீடு முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் ச. அங்குச்சாமி அவர்களின் இல்லம். எப்போதும் ஒரு படையை அங்கு காணலாம். அவர்களில் இன்னும் என் நினவில் நிற்பவர்கள்…..
திரு..அதங்குடி முத்துராமலிங்கம்
திரு.மு.கண்ணப்பன் ( இவர் பின்னர் ஒருங்கிணைந்த இராமநாதபுரம் மாவட்டம் பிரிக்கப்பட்ட பின்னர் சிவகங்கை மாவட்டச் செயலாளர் ஆனார்)
திரு.மு.தென்னவன்( இவர் பின்னர் ஒருங்கிணைந்த இராமநாதபுரம் மாவட்டம் பிரிக்கப்பட்ட பின்னர் இராமநாதபரம் மாவட்டச் செயலாளர் ஆனார்).
எம்.ஜி.ஆருக்கு சட்டம் படித்த இளைஞர்களுக்குப் பதவி வழங்க வேண்டும் என்று ஆசை. மேலே உள்ள இருவரையும் எம்.ஜி.ஆருக்கு முன் மொழிந்தவர், ச.அங்குச்சாமி. மு.தென்னவன் சட்டம் படித்த பட்ட்தாரி அல்லவே என்று எம்.ஜி.ஆர். கேட்ட பொழுது இவர் மிக அழகாக இலக்கியம் ததும்ப தமிழில் உரைஆற்றுவார் என்று அங்குச்சாமி அவர்கள் கூறவும், எம்.ஜி.ஆரும் திரு.தென்னவன் அவர்கள் பேசியதைக் கேட்டுவிட்டு, மிகவும் திருப்தி அடைந்து, இரண்டு விரல்களை திரு. அங்குச்சாமி அவர்களிடம் காட்டித் தன் திருப்தியைக் காட்டினாராம்).
இவர்கள் இருவருமே இப்போது தி.மு.க. காரர்கள் என்பது அரசியலின் பன்முகம்.
திரு.ந.பெ.நாயகம்
முப்பையூர் மணி
பனசமக்கோட்டைக் கணபதி
ஆசிரியர் பி.டி.இராஜன். ( இவர் எம்.ஜி.ஆர்.போல வேடமணிந்து தேர்தல் வாக்குச் சேகரிப்பு ஊர்வலத்தில் கலந்து கொண்டார்).
இராம.வெள்ளையன், ச.அங்குசாமி,இராம.வீரப்பன், கற்பக விநாயகம், மணக்கோலத்தில் SP,தனசேகரன் தம்பதிகள்
மேற்கண்ட இந்தக் குழுவினர் எவருக்குமே எம்.ஜி.ஆருக்கும், திரு.கற்பக விநாயகம் அவர்களுக்கும் ராமாவரம் தோட்டம் வரை உள்ள நெருக்கம் ஓரளவு அதன் தெரிந்து இருந்தது.
தேவகோட்டை கிழக்குப் பகுதியில் திண்ணன் செட்டி மேல் கரைப் பகுதியில் பன்னெடுங்காலமாக இயங்கி வந்த்து எம்.ஜி.ஆர். படிப்பகம் என்ற எம்.ஜி.ஆர். மன்றம் என்று முந்தைய பதிவுகளில் கண்டோம். இதே போல தேவகோட்டையின் மேற்குப் பகுதியில், சிலம்பணி அக்ரஹாரப் பகுதியில் பின்னர் உருவாக்கப்பட்டது தான் ‘என்றும் பதினாறு எம்.ஜி.ஆர். அன்பர் குழு’. நல்ல செயல் வீர்ர்கள் அடங்கிய இளங்காளையர், இந்தக் குழுவில்.
எம்.ஜி.ஆர் தேவகோட்டை வருகிறார் என்று தெரிந்ததுமே, திரு.கற்பகவிநாயகம் அவர்கள் எம்.ஜி.ஆரிடம், தேவகோட்டையில் தமது இல்லத்தில் விருந்து உண்ண வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். எம்.ஜிஆரும், கற்பகம் இல்லத்தில் சாப்பிடுவதற்கு என்ன தடை என்று சரி சொல்லிவிட்டார். எம்.ஜி.ஆர். அன்பர் குழுச் செயலர் இராஜேந்திரன் எம்.ஜி.ஆரைப் பார்ப்பதற்காகவும், தேவகோட்டைக்கு ‘என்றும் பதினாறு எம்.ஜி.ஆர். அன்பர் குழு’வின் சார்பாக வரவேற்பதற்காகவும் சிவகங்கைக்குக்குச் சென்று விட்டார். அவருடன் நமது நீதி அரசரும் சேர்ந்து கொண்டார்.
எம்.ஜி.ஆர். சிவகங்கை வந்தார். அவரது காரிலேயே திரு.கற்பக விநாயகம் அவர்களும் தேவகோட்டை நோக்கிப் பயணம் ஆனார். அந்தத் தருணங்கள் தம் வாழ்வில் என்றும் மறக்க இயலாதவை என்று நீதியரசர் இன்றும் நினைவு கொள்கிறார். அந்த வண்டி இருவரையும் சுமந்த படி மொத்தக் காவலர் படை புடை சூழ தேவகோட்டையில் நாம் தற்போது நின்று கொண்டு இருக்கும் வெள்ளாளர் தெருவில் இருக்கும் திரு.கற்பக விநாயகம் அவர்களின் இல்லத்தில் வந்து நின்றது. வீட்டின் மாடியில் அருமையான விருந்து. R.M.P.T.நடராசன் கடை திரு.இராமநாதன், உணர்ச்சி மிகுதியால் தம் மனதில் தலைவராக வாழ்ந்து வந்தவரை நேரில் கண்டதும், நெடுஞ்சாண் கிடையாக அட்டாங்கமும் தரையில் தோய விழுந்து வணங்கினார். சரியான கூட்டம். அந்த நெரிசலில், தாம் நடத்தி வரும் என்றும் பதினாறு எம்.ஜி.ஆர் அன்பர் குழுவினரால் தமது சங்கத்துக்கு அவரை அழைத்துச் செல்ல இயலவில்லை.
RM.PT.நடராசன்&கோ இராமநாதன்,ச.அங்குசாமி,இaரராம.வீரப்பன், பின்புறம் நீதியரசர் கற்பகவிநாயகம்
இது எதுவுமே அறியாமல் நமது பகுதி அ.தி.மு.க.பொறுப்பாளர்கள் (மேலே கண்ட குழு) கட்சியின் சார்பில் கரூரார் வீட்டில் எம்.ஜி.ஆருக்கு விருந்து வைத்துக் காத்து இருந்தனர். MIS COMMUNICATION / MIS UNDERSTANDING அனைத்துமே ஒவ்வொரு குடும்பத்திலும், அலுவலகத்திலும், நீண்ட நாள் நட்புக்களுக்கும் இடையிலும் கூட ஏற்படுவது தான். கட்சியில் இல்லாமல் இருக்குமா? இவ்வளவு மாறுபட்ட பரந்து விரிந்த நிலப்பரப்பின் வேறுபட்ட மனித மனங்களை ஒன்று சேர்த்து ஆளுமை செய்வது தான் ஒரு தலைவனின் தலையாய தகுதி.
கட்சியின் சார்பாய் ஏற்பாடு செய்த விருந்தில் தலைவர் கலந்து கொள்ளவில்லையே என்று மிக வருத்தம் அவர்களுக்கு… உண்மையில் எவர் மீதும் எந்தக் குற்றமும் இல்லை. அவரவர் பார்வையில் அவரவர் சரியே… திரு.கற்பகவிநாயகம் அவர்கள் எம்.ஜி.ஆருடனான தனது தந்தை மகன் போன்ற உறவின் காரணமாகத் தனது நகருக்கு வருகை தந்த போது தமது இல்லத்தில் விருந்து வைத்தார். மற்றவர்களுக்கோ அது எப்படி… கட்சியை வளர்ப்பதற்காக உழைப்பவர்களைப் புறந்தள்ளி விட்டு தனி மனிதர் தலைவரைத் தன் இல்லத்து அழைத்துச் சென்று விட்டாரே என்ற ஆதங்கம். இதற்கிடையில் என்றும் பதினாறு எம்.ஜி.ஆர். அன்பர் குழுவினராக, இரசிகர்கள் என்ற அடிப்படையில் அவர்களயும் திருப்திப் படுத்தி ஆக வேண்டும். இங்கே தான் ஒரு தலைவனாக எம்.ஜி.ஆரின் புத்திசாலித்தனம் பளிச்சிடும். சூழ் நிலையச் சட்டென்று புரிந்து கொண்டு அந்த விருந்துக்கும் வருகை புரிந்தார். அத்தோடு திரு.அங்குச்சாமி அவர்களை அழைத்து, வாருங்கள் உங்கள் இல்லத்துக்குச் செல்வோம் என்று இவர் வீட்டுக்கு அழைப்பது போல அழைத்தார்.
திருமதி அங்குச்சாமியோ, எம்மோடு எங்கள் கடையில் எம்.ஜி.ஆருக்கு ஆரத்தி எடுப்பதற்காக பள பள வென்று துலக்கிய பித்தளைக் குடத்தில் நிறையத் திரிகளுடன் எம்.ஜி.ஆர் வரும் வரை கலைந்து போகாமல் இருக்க அதனைக் காவல் காத்துக் கொண்டு இருக்கிறார்கள். நான் கையில் ரோஜா மலர் மாலையோடு, எம்.ஜி.ஆருக்கு அணிவிக்க… எங்கள் கடை வாசலில் நிற்கும் கம்பத்தில் கொடி ஏற்றி வைத்து மாலை அணிவித்து, ஆரத்தி எடுப்பது எனபது திட்டம். திரு.அங்குச்சாமி கட்சிக்காரர்களுடன்,..... அவர் மனைவி இங்கே எங்களுடன்,,, எம்.ஜி.ஆர் தம் இல்லத்துக்கு வருவார் என்று அறிந்து இருந்தால் தானே ஏதும் ஏற்பாடு செய்து இருக்க முடியும்?
தன் வீட்டில் எம்.ஜி.ஆர். வருகை தந்து இருக்கிறார் என்ற செய்தி கிடைத்து திருமதி.அங்குச்சாமி அவர்கள் சிட்டாகத் தம் இல்லம் நோக்கிப் பறந்தார். எம்.ஜி.ஆருக்கு என்ன வழங்குவது என்று எவருக்கும் விளங்கவில்லை. சட்டென்று நமது நண்பர் தமிழ்க் கொண்டல் ஆ.குமார் அருகில் இருந்த தேனீர் நிலையத்தில் (மனோகரன் கடை) பால் வாங்கி வந்தார். அங்குச்சாமி அவர்களின் குழந்தைகளைத் தன் மடியில் இருத்திக் கொண்டு டீக்கடையில் இருந்து வாங்கி வந்த தேநீரை விரும்பி அருந்திய படியே வீட்டின் மேற்கூரையில் இருக்கும் ஓட்டைகளை நோட்டம் விட்டு அங்குச்சாமியின் பொருளாதார நிலையை தன் மனதில் அவரின் பேலன்ஸ் சீட்டை போட்டுப் பார்த்தார். அடுத்து வந்த சட்ட மன்றத் தேர்தலில் இவருக்கு சீட் வழங்கப் பட்டதற்கு இதுவும் ஒரு காரணம்.
கொசுறு செய்தி…: உண்மையில் திருவாடானை சட்ட மன்ற தொகுதிக்கு வேட்பாளர் பட்டியலில் முதல் இடத்தில் இருந்தவர் திரு.ந.பெ.நாயகம் தான். எம்.ஜி.ஆர்.அவர்கள் கற்பக விநாயகம் வீட்டில் விருந்து உண்டதைக் கடுமையாக விமர்சித்து, கொடி மரங்களை வெட்டிச் சாய்த்து விடுவேன், கட்சியை வளர்த்தது நான்… என்ற பாணியில் இவர் கொஞ்சம் வார்த்தைகளை விட்டது, எம்.ஜி.ஆர். காதுகளுக்கு எட்டியதால், இவருக்கு வழங்கப் பட இருந்த சட்ட மன்ற வேட்பாளர் வாய்ப்பு திரு.அங்குச்சாமிக்குச் சென்றது.
அதன் பின்னர் ஒத்தக்கடைக்கு எம்.ஜி.ஆர். வந்தார். திறந்த வேனில் இருந்த படியே எங்கள் கடை வாசலில் இருந்த கட்சிக் கொடியினை ஏற்றினார். கீழே கையில் பூமாலையோடு எம்.ஜி.ஆர். இருந்த வண்டி அருகில் நெருங்கிய என்னை ஒரு மக்கள் அலை வெளியே தள்ளி விட்டது. பரிதாமாக நின்றிருந்த என்னை காரின் பானெட்டின் அமர்ந்திருந்த எம்.ஜி.ஆரின் மெய்க்காப்பாளர் தர்மலிங்கம் அவர்கள் மற்றும் கே.பி.இராமகிருஷ்ணன் இருவரில் ஒருவர் கையைப் பிடித்து இழுத்தார். எனக்கு 17 வயது அப்போது, சிறுவன்.. நிமிர்ந்து பார்த்தால் எலுமிச்சம் வண்ணத்தில் எம்.ஜி.ஆர். கையில் இருக்கும் மாலை அவர் கழுத்துக்குச் செல்ல வேண்டும் என்றால் எப்படி அந்த வேன் மீது ஏறுவது…
பானெட்டில் அமர்ந்திருந்த கே.பி.இராமகிருஷ்ணன் என் கையைப் பிடித்து ஒரு சுண்டு சுண்டினார். சீனக் குங்க்-பூ திரைப்படங்களில் வரும் கதா பாத்திரங்கள் போல் ‘சொய்ய்ங்க்’ என்று பறந்து பானெட்டின் மீது நிற்கிறேன். முகத்துக்கு நேராய் மக்கள் திலகம். என்ன ஒரு தேஜஸ்… முகத்தைப் பார்த்துக் கொண்டே உதிர்ந்து போய்க் கொண்டிருந்த ரோஜா மாலையை அணிவித்தேன். முகத்தைப் பார்த்த கண்கள் கீழே இறங்கி அவரது கைகளை நோக்கியது. திரையில் பள பள வென்று வெண்மையாகக் கண்டிருந்த எம்.ஜி.ஆரின் கைகளில் இருந்த உரோமங்கள் அவரது சந்தன வண்ண சட்டையை மீறிக் கண்களில் பட்ட்து. அப்படியே அவரது கையில் பச்சையாக குத்தி இருந்த அ.தி.மு.க. கொடி, சட்டையை மீறி வெளியே தெரிந்த்து. அந்தக் கால கட்டத்தில்,
பச்சை குத்திக்
கொள்வோம்…
பச்சை துரோகிகளை
வெல்வோம்…
என்ற ஒரு சொல் அதிமுக
வினரிடையே மிகப் பிரபலம்.
இதற்கிடையில் பானெட்டில் இருந்த மெய்க்காப்பாளர், என் காலைச் சுரண்டினார். சீக்கிரம் இறங்கு…உனக்கு அவ்வளவு தான் நேரம் என்று குறிப்பால் உணர்த்தும் சீண்டல் அது என்று எனக்குப் புரிந்த்து.. நான் தான் கம்பன் காட்டிய இராமன் வருகையைக் கண்ட மிதிலை வாசி போல,
தொடுகழல் கமலம் அன்ன
தாள்கண்டார் தாளே கண்டார்
தடக்கை கண்டாரும் அஃதே
வாள்கொண்ட கண்ணார் யாரே
வடிவினை முடியக் கண்டார்
ஆகிக் கிடக்கிறேனே!!
கே.பி.இராமகிருஷ்ணன் என் கரத்தைப் பிடித்து ஒரு சுண்டு சுண்டினார். வேனை விட்டு வெகு தூரத்தில் மக்கள் கூட்டத்துக்கு அப்பால் நிற்கிறேன். அவ்வளவுதான். இப்போது கூட நினைத்துப் பார்க்கிறேன்.. இந்த அளவுக்குத் தன் பாதுகாப்பு ஏற்பாடுகளைத் தக்க ஆற்றல் கொண்டவர்களை வைத்து ஆனால் சாதாரண மக்களுக்கும் அன்பனாக இருந்த எம்.ஜி.ஆரின் ஆற்றல் வியக்க வைக்கிறது.
அழைப்பிற்கிணங்க தான் பெறாத பிள்ளையாக வரிந்து கொண்ட திரு.கற்பக விநாயகம் அவர்களின் இல்லத்துக்கு விருந்து அருந்தினார். இந்த நிகழ்வில் முழுதாகப் பாடுபட்டவர்கள் “என்றும் பதினாறு எம்.ஜி.ஆர்.அன்பர் குழுவினர்”. கட்சிக்காக பாடுபட்டவர்களின் மனம் நோகாமல் இருக்க அவர்களிடம் வாஞ்சையைக் காட்டினார். சரி,…. என்றும் பதினாறு எம்.ஜி.ஆர். அன்பர் குழு இரசிகர் மன்ற இளைஞர்கள் இருக்கிறார்களே. அவர்கள் மனம் கோணி விடக் கூடாதே! மன்றத்திற்குள் செல்ல திட்டம் இருந்த்து… நடந்து முடிந்த விசயங்களால் இயலவில்லை. கூட்டமும் மிக அதிகம். அதனால் அவர் சென்னை திரும்பிய பின்னர், தன் கைப்படவே 9-10-76 அன்று அன்பர் குழு நிர்வாகிகளான திரு.இராஜேந்திரன் மற்றும் SP.தனசேகரன் அவர்களுக்கும் தான் வர இயலவில்லை என்று கடிதம் எழுதி அனுப்பி இருந்தார்.
இப்போது தெரிகிறதா எப்படி அனைவரது மனங்களிலும் இன்றும் மக்கள் திலகம் நீங்காத இடம் பிடித்து இருக்கிறார் என்பதன் இரகசியம்.
திரைத்துறைக் கனவில் இருந்த திரு.கற்பக விநாய்கம் தன்னால் ஏற்றுக் கொள்ள இயலவில்லை என்ற போதும், மக்கள் திலகம் ஆசிகளின் படி அரசு வழக்குரைஞரின் இரண்டாவது உதவி வழக்குரைஞராக சேர்ந்தார். இருந்த போதும், வருமானம் போதாத சூழல். அரசியலில் தமக்கு ஏதேனும் பதவிகள் கிடைக்க வாய்ப்புகள்
வழங்கப்படும் என்று எதிர்பார்த்தார். சில பல காரணங்களால் அவையும் வாய்க்கவில்லை. ஒரு கட்ட்த்திற்குப் பின் எம்.ஜி.ஆரிடம் சொல்லிவிட்டு
தான் பார்த்துக் கொண்டிருந்த அரசுப் பணியைத் துறந்து கடுமையாக உழைத்து உச்சமாக நீதி
அரசர் என்ற நிலைக்கு உயர்ந்தார்.
இவரது மனித நேயத் தீர்ப்புகள் பல பாகங்களாக புத்தகமாக
வெளி வந்து இருக்கின்றன. தேவகோட்டை தந்த முத்து என்ற பெருமை பூக்கும் மனத்துடன் இந்த
அத்தியாயத்தை முடிக்கிறேன்.
அடுத்து இதே வெள்ளாளர் தெருவில் சப்பாணி முனீஸ்வரர்
கோவில் முன்பு இருந்த இடத்தில் ஒரே குடும்பத்தில் நடந்த 3 கொலைகளைப் பற்றிப் பார்ப்போம்….
வரலாற்றுக் கருவூலம்
பதிலளிநீக்குநன்றி
பதிலளிநீக்கு1976ஆம் ஆண்டிற்கு இழுத்துச் சென்ற கவிக்கிறுக்கனுக்கு வாழ்த்துக்கள். தொடரட்டும் உங்கள் தமிழ் தொண்டு.
பதிலளிநீக்கு🙏🙏
பதிலளிநீக்கு